Sunday 21 August 2011

சமச்சீர் கல்வியை ஏற்க மறுக்கும் மெட்ரிக் பள்ளிகள்: தவிக்கும் மாணவர்கள்


நெல்லை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகும் நெல்லையில் உள்ள ஒரு சில மெட்ரிக் பள்ளிகளில் பழைய பாடதிட்டம பின்பற்றப்பட்டு வருகிறது. அரசு தேர்வு எழுதும் 10-ம் வகுப்புக்கு கூட மெட்ரிகுலேஷன் பாடம் நடத்துவதால் மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது. மெட்ரிக் பள்ளிகளை பொறுத்தவரை ஆங்கில வழி புத்தகங்களுக்குரிய கட்டணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக் கொள்ளலாம் அல்லது 26 பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் பல பள்ளிகள் இன்னும் புத்தகங்களைப் பெறவில்லை. இந்நிலையில் நெல்லையில் உள்ள ஒரு சில மெட்ரிக் பள்ளிகளில் மெட்ரிகுலேஷன் பாடத்தையே தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. அரசுத் தேர்வு எழுதவிருக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கூட மெட்ரிகுலேஷன் பாடங்களைத் தொடர்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Wednesday 10 August 2011

சமச்சீர் கல்வித் திட்டம்-அரசின் குழப்பத்தால் அநியாயமாக வீணாகிப் போன 60 நாட்கள்!

கடந்த 60 நாட்களாக விடை தெரியாமல் நீண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனால் இனிமேல்தான் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரச்சினையே ஆரம்பமாகப் போகிறது. 
 
அரசு - உனக்கு இலவச லேப்டாப் வேணுமா?
மாணவன் - வேண்டாம் 
அரசு - இலவச சைக்கிள் வேண்டுமா? 
மாணவன் - வேண்டாம் 
அரசு - வேற என்ன வேணும்? 
மாணவன் - படிக்க ஏதாவது ஒரு புக் கொடுங்க போதும் 

இதுதான் கடந்த 60 நாட்களில் தமிழகத்தை அதிகமாக வலம் வந்த எஸ்.எம்.எஸ்-ஸாக இருக்க முடியும். அந்த அளவுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும், விரக்தியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. 

மிக மிக எளிதாக அணுகப்பட்டிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை மிகப் பெரிய சட்டச் சிக்கலாக்கி கடைசியில் தனக்குப் பாதகமாக அதை முடித்துள்ளது தமிழக அரசு. மக்களின் மிகப் பெரிய வரவேற்புடன், அமோக ஆதரவுடன், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுக்கு இது நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவுதான், சறுக்கல்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

Saturday 6 August 2011

10-ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்கள் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வரும் 10-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வினியோகிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமச்சீர் கல்விக் குறித்த வழக்கு, நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் முன்பாக விசாரணைக்கு வந்தது. சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்துமாறும், ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்குமாறும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி கட்ட விசராணை நேற்றுடன் முடிந்தது. 

இதையடுத்து சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகடங்களை மாணவர்களுக்கு வினியோகிக்க வரும் 10-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. நேற்று நடந்த இறுதிகட்ட விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ் கூறியதாவது, சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் சமச்சீர் கல்வி முறையின் மூலம் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்பதலேயே அதை இந்தாண்டு நடைமுறைபடுத்தவில்லை. சமச்சீர் கல்வியை செயல்படுத்த தகுந்த விதிமுறைகள், தரமான பாடப்புத்தகங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, அடுத்தாண்டு அல்லது அதன் பின்னரோ அமல்படுத்த வேண்டும், என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் இன்னும் இயற்றப்படாததால் இந்தாண்டு அமல்படுத்தவில்லை. முந்தைய அரசு அவசர அவசரமாக சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதே தவிர அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 

தமிழக அரசு திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ எதிரானது அல்ல. சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் கருணாநிதி புகழ்பாடப்பட்டுள்ளது. அவரது புகழை நிலைநாட்ட சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை பயன்படுத்தியுள்ளனர். தமிழக அரசு தரமான சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது. இதை அடுத்த ஆண்டிலோ அல்லது வரும் ஆண்டுகளிலோ செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். சமச்சீர் கல்வி திட்டத்திற்கு முந்தைய அரசு வெறும் அரை மணி நேரத்திலேயே ஒப்புதல் அளித்தது என்று தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன் தெரிவித்தார். ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்தன. சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வரும் 10-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து ஆட்சேபம் இருப்பின் இரு தரப்பினரும் அதை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்பிக்கலாம் என்றனர். மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
நன்றி:tamil.oneindia.com