Thursday 19 April 2012

கருணாநிதி, கனிமொழி சுயசரிதை தான் சமச்சீர் கல்வியா?: அமைச்சர்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் சுயசரிதை தான் சமச்சீர் கல்வியா என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி கேள்வி எழுப்பினார். 

விவாத விவரம்:
தங்கம் தென்னரசு (திமுக): திமுக ஆட்சிக் காலத்தில், பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதில், சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்தியாகக் கூறுகிறேன். சமச்சீர் கல்வித் திட்டம் அமல், 53,000 ஆசிரியர்கள் நியமனம், முதல் முறையாக பள்ளிக் கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 10,000 கோடியாக உயர்த்தியது. 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி: நீங்கள் பல திட்டங்களை தலைப்புச் செய்தியுடன் நிறுத்திவிட்டீர்கள். அதிமுக ஆட்சி வந்த பின்னர் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதாகக் கூறுகிறீர்கள். திமுக தலைவர், கனிமொழி இவர்களைப் பற்றிய சுயசரிதைகளை எல்லாம் படிப்பது தான் சமச்சீர் கல்வியா?. உண்மையான சமச்சீர் கல்வி இப்போது தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கப்பட்டதாகக் கூறுகிறார். புரட்சித் தலைவி ரூ.15,000 கோடி ஒதுக்கியுள்ளார். ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரை, கடந்த 25 ஆண்டுகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 351 ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டனர். ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், 53,120 ஆசிரியர்களை நியமனம் செய்ய அம்மா நடவடிக்கை எடுத்தார். தங்கம் தென்னரசு: பள்ளிக் கல்வி கொள்கை விளக்க புத்தகத்தில், "சமச்சீர் கல்வி' என்ற வார்த்தையே இல்லை. 

அமைச்சர் சிவபதி: பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தங்கம் தென்னரசு: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி, விதி 110ன் கீழ் முதல்வர் சட்டசபையில் பேசும்போது தரமான, உண்மையான சமச்சீர் கல்வியை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், கொள்கை விளக்க புத்தகத்தில், சமச்சீர் கல்வி என்ற வார்த்தையே இல்லை. இதன்மூலம் முதல்வரின் கருத்துக்கு மாறான நிலையை பள்ளிக்கல்வித் துறை எடுத்துள்ளதா? 

வணிகவரித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்: சமச்சீர் கல்வி என்பது, வெறும் பாடத்திட்டத்தை மட்டும் கொண்டது அல்ல. தரமான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் என, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது தான் சமச்சீர் கல்வி என்று முத்துக்குமரன் கமிட்டியே கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது சமச்சீர் கல்வி என்ற வார்த்தை பொருத்தமானதல்ல. பொதுப் பாடத்திட்டம் என்பதே சரி என்று நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கூறினார்.

தங்கம் தென்னரசு: சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே, பழைய பாடப் புத்தகங்களை அச்சடித்தீர்கள். இதில், அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது? அந்த புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? 

அமைச்சர் சிவபதி: நீங்கள் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் அச்சிட்டிருந்தால், அவற்றை மாணவர்களுக்கு வழங்கியிருப்போம். நீங்கள் தான் திமுக தலைவரின் வரலாறு, கனிமொழி வரலாற்றை எல்லாம் படிப்பதற்காக, ரூ. 300 கோடி செலவு செய்தீர்கள். பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் இல்லை: 

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வால், அவர்கள் பாதிக்கப்படுவர். வேண்டுமானால் பதிவு மூப்பில் இருப்பவர்களுக்கு ஒரு பயிற்சி கொடுத்து, அவர்களை பணியில் சேர்த்துக் கொள்ளலாம் 

அமைச்சர் சிவபதி: ஆசிரியர் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பை, தமிழக அரசு கடைபிடிக்கும். ஆசிரியர் நியமனம் தேர்வு முறையில் தான் இருக்கும். பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட மாட்டார்கள்.