Wednesday 24 December 2014

மாணவர் இணைவை இந்திய கல்வி முறை கற்பிக்கிறதா?

கல்வி, உள்கட்டுமானம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகிய மூன்று பிரிவுகளை தான் சமுதாய முன்னேற்றம் சார்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில், சமூக வளர்ச்சி என்பது கல்வித்துறையில் அதிகப்படியான முதலீடுகள் செய்த பிறகே தோன்றியது. அதன் விளைவாக புதுமையான கல்வி முறை தோன்றி சமூகம் சார்ந்த ஆய்வுகள் மற்றும் மேம்பாடுகள் உருவாயின. அந்த புது கல்வி முறையில், ஹாவேர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) மற்றும் எம்.ஐ.டி.(MIT) போன்ற பல்கலைக்கழகங்கள், தேசிய அளவிலான் கட்டமைப்பை உருவாக்கின, அதன் மேல் தான் கல்வி கோட்பாடுகள் மற்றும் புது சிந்தனைகள் அமைக்கப் பட்டுள்ளன. அதற்கும் மேலாக, பல தொழில்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழக ஆராச்சி நிறுவனங்களையே மூலமாக கொண்டுள்ளன.
இது போன்ற ஒரு புரட்சி தான் (சிறு அளவானதாகவும், குறைந்த வேகமுடையதாகவும் இருந்தாலும்) இந்தியாவில் உருவெடுத்துள்ளது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Indian Insttitute of Technology) மாற்றும் இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ்(Indian School of Business) போன்ற கல்விக் குழுமங்கள் உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளன. அங்கு கல்வி பயின்ற மாணவர்களை உலகின் பல்வேறு நிறுவனங்களில், உலகளவில் உயர் பதவிகளில் காணலாம். இன்று இந்தியாவிலிருந்து தான் அதிக அளவிலான மென்போருள் தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள் வல்லுனர்கள் ஏற்றுமதி ஆகின்றனர். ஆனால் இதன் பெரும்பாலான வெற்றி, இந்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு பயிற்சியில் அழுத்தம் கொடுக்கின்றன. எனினும் இது சிறு அளவிலான வளர்ச்சியையே கொடுக்கிறது.
உலகம் வேகமாக மாறிக்கோண்டு செல்லச் செல்ல, குறிப்பாக பன்நாட்டு தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள், தங்கள் நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கான வழிமுறைகளை மறு ஆய்வு செய்து வருகின்றனர். பெரும்பாலும் போட்டி சார்ந்த முறையை கைவிட்டு, கூட்டுறவு சார்ந்த முறைகளையே முடிவுகள் எடுக்க பின்பற்றுகின்றனர். இது பணியாளர்களை அனத்து நிலைகளிலும் ஈடுபட ஊக்குவிக்கிறது.
இது போன்ற அதிக அளவிலான முயற்சிகள், கல்வித்துறை சார்ந்தவற்றில் பெருகி வருவதை நான் சமீப காலமாக பார்த்திருக்கிறேன். எடுத்துக் காட்டாக, ஹாவேர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி. கான கூட்டு முயற்சியான (joint venture)ஆனedX.ட்வீபர்(Dweeber) மற்றும் ஈபால்ஸ்(ePals) போன்ற மற்றவை புதுமையாக துவங்கப்பட்ட, கூட்டு முறைக்கான நிறுவனங்களாகும். பெரிய நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலொஜீஸ் (HCL Technologies) போன்றவை, தங்கள் மேலாண்மையை பற்றி மறு பரிசீலனை செய்து வருகின்றன. தொழிலாக இருந்தாலும் சரி, கல்வி துறையாக இருந்தாலும் சரி மாற்றம் தான் பெரிதாக தேவைப்படுகிறது. இது நம் கல்வி முறையில் பெரிய தாக்கத்தையும், சார்பு நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்போதிருக்கும் இந்திய கல்வி முறை, உலக மற்றங்களுக்கு ஏற்ற வகையில், தன் மக்களை பங்களிப்பாளர்களாக உருவாக்குகிறதா? நம் கல்வி முறை அனைத்தையும் உள்ளடக்குவதாய் உள்ளதா? மாணவர்களை பொறுப்புள்ள உலக குடிமக்களாக மாற்றுகிறதா? இந்திய கல்வி முறை, உலக தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்கிறதா? பள்ளி, கல்லூரி கல்வி பயிற்சி முறையில் மாற்றம் ஏற்பட்டால், அது உலகை வாழ தகுந்த இடமாக ஆக்குமா? நடைமுறைக்கு ஏற்றவாறு சிந்தித்தால், இறுதி கேள்வி நீங்கலாக மற்ற அனைத்திற்கும் எனது பதில் “இல்லை” என்பது தான். நம்பிக்கை உடையவனாக சிந்தித்தால், அனைத்து கேள்விகளுக்கும் என் பதில் “ஆம்” என்பதாகும்.
மாற்றங்களை ஏற்படுத்த, பின்வரும் வழிமுறைகளை கடை பிடிக்கலாம்:
  1. தினமும் வகுப்பில் கலந்துரையாடவும்.பெரும்பாலான பள்ளிகள், மாணவர்களை கடுமையான் போட்டி உலகிற்கே தயார் செய்கின்றன. இந்த வளரும் பிள்ளைகளில் நாம் கலந்துரையாடும் சிந்தனையை தூண்ட வேண்டும். இந்த செயல் அவர்களை சிறந்த தொழில்துறை வல்லுனர்களாக மட்டும் அல்லாது, சமூகத்தில் நல்ல செயல்கள் செய்யவும் தூண்டும். “கற்றும் பகிர்ந்தும் வளர்தல்” தனி மற்றும் உலகளாவிய துறைக்கு ஒரு நல்ல கோட்பாடு ஆகும்.
  2. கட்டாயமாக கட்டற்ற மென்பொருள் துறையில் ஈடுபடவும்
கட்டற்ற மென்பொருள் துறையில் ஈடுபடுதல் ஒரு கூடுதல் சிறப்பை தரும். இப்படியாய் பட்ட செயல் பாடுகள், தன்னை போன்ற ஈடுபாடு கொண்ட மற்ற மாணவர்களோடு பழக ஒரு நல்ல வாய்ப்பாக மட்டும் அல்லாது அவர்களது தற்குறிப்பிற்கு (resume) நல்ல மதிப்பை தரும். மாணவர்கள் மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும், சிறு குழுக்களாக இணைந்து எவ்வாறு பணியாற்ற வேண்டும், கூட்டாக இணையும் உலகத்தை எவ்வாறு புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என் பலவற்றை கற்றுக் கொள்வார்கள்.

எது மாற்றுக்கல்வி? ஏன் மாற்றுக் கல்வி? எப்படி மாற்றுக்கல்வி?



picture. Thanks to http://bigthink.com
மு தலில் கல்வி அல்லது கற்றல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

கற்றல் என்பது தெரிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்வது அவ்வளவுதான். அதாவது "மனிதர்கள் கூட்டமாக வாழ்வது ஊர் எனப்படும்" என்று ஒருவர் சொன்னால் "ஓ அப்படியா" என்று தெரிந்துகொள்வது. மற்றபடி அதை தெரிந்து என்ன புண்ணியம்? என்பது "கற்றலின் வழி செயற்படல் அல்லது தேடல் அல்லது பகுத்தறிதல் " என்ற அளவுகோலில் வரும்.

ஒவ்வொருவருக்கும் குடும்பச் சூழலில் தொடங்கி, பின்பற்றும் கொள்கைகள், நண்பர்கள், பிறக்கும் ஊர், நாடு, அவர் படிக்கும் நூல்கள் .....என்று பல தகவல்கள் தெரியவரலாம். இவை அனைத்தும் கற்றலின் கூறுகளே. ஏற்கனவே தெரிந்து (கற்றலின் மூலம்) வைத்துள்ள அனுபவங்களை தொகுத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது கல்வி முறை.

இந்த மனிதக்கூட்டம் எதைக் கற்க வேண்டும்?

எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதது காலம்.இதுவரை எவ்வளவு ஆண்டுகள் கடந்துள்ளது , இனிமேல் எவ்வளவு ஆண்டுகள் மீதம் உள்ளது என்பதை யூகம் செய்யலாம. வேதப் புத்தகங்களில் சொல்லும் கதைகள் போலஅறுதியிட்டுக்கூறமுடியாது. மனித இனம் (பல விலங்கினங்கள்) அதன் தேவை பொருட்டும், தேடல் மூலமும் (தேடலே தேவை பொருட்டு வருவது) பலவற்றை அந்த அந்தக் காலத்தில் கண்டறியும். கற்கால கருவிகள் முதல் , இந்தக்கால வசதிகள் வரை எல்லாம் ஒரு தொடர்ச்சியான சங்கிலி முன்னேற்றம். இந்த முன்னேற்றத்தில் மாட்டுக்கு 'இலாடம்' கட்டுதலும் ஒன்று. இன்றைய வாழக்கை முறையில், எத்தனை பேர்களுக்கு மாடுகளை படுக்க வைத்து இலாடம் கட்டத்தெரியும்? ஒரு காலத்தில் அது முக்கியம் இன்று ...?

உலகம் முழுக்க காலை உணவாக 'குழிப்பனியாரம்தான்' சாப்பிட வேண்டும் அதுதான் அக்மாரக் சுத்த சன்மார்க்க காலை உணவு என்று யாரும் ஒற்றை அளவுகோலை வைக்க முடியாது. எனவே இன்றைய தலைமுறை எதைக் கற்கவேண்டும் என்பது

இடம்,
தேவை,
காலம்,
சூழல், etc

எல்லாம் சார்ந்த ஒன்று. அனைவருக்கும் பொதுவான கல்வி என்பதுகூட உலகத்தில் உள்ள அனைவருக்கும் அல்ல, ஒரு சின்ன குழுவிற்கு அந்தக் குழுவின் பிரதிநிதிகள் சிலவற்றைப் பாடமாக வைப்பது.

எதைக் கற்கவேண்டும்?

எதைக் கற்கவேண்டும் என்பதை ஒரு குழந்தையை முடிவு செய்யவிட்டால் அது "அழுதால் பால்கிடைக்கிறது. எனவே அழுகையே போதும்" என்றுகூட இருந்துவிடலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? மொழியைக் கற்பிக்கிறார்கள். எதற்கும் இருக்கட்டும் என்று கடவுள்,பேய்,பிசாசு என்றும் சொல்லிக்கொடுக்கிறார்கள். குழந்தையை குழந்தையாய் வாழவிடுங்கள் என்று சொல்பவர்கள் ஏன் கடவுள்,பேய்,பிசாசு வகையறாக்களை கற்பிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

ஒருவன் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு 'சைக்கிள்கடை வைக்கப்போறேன்' என்று சொன்னால் எந்தப் பெற்றோரும் ஏற்றுக்கொள்வது இல்லை. இதே பெற்றோர்கள்தான், குழந்தையை குழந்தையாய் இருக்கவிடுங்கள் என்றும் கொடி பிடிப்பார்கள். இன்றுள்ள சூழலில் ஆரம்பப்பளி வரை குழந்தைக்கு எதைக் கற்பிக்கலாம் என்பது பெற்றோர்களிடம் உள்ளது. அதற்குப்பிறகு அவர்களின் சுயதேடல் தொடங்கிவிடுகிறது.

எனவே எதைக் கற்கவேண்டும் என்பது ஒருவயது வரை பெற்றோரும் அதற்குப்பிறகு வளரும் குழந்தையும் முடிவு செய்யவேண்டிய ஒன்று.

தமிழ்நாட்டில் உள்ள பாடத்திட்டம் சரியா?

பள்ளிகளில் உள்ள பாடத்திட்டம் என்பது முழுக்க முழுக்க வேலை, பொருளீட்டல் போன்ற உத்திரவாதங்களைக் கொடுக்கும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.  கலைகள்,சரித்திரம்,கனவு ....எல்லாம் வயிறு நிறைந்தபின்னால்தான் என்ற 'பசிநெறியின்' அடிப்படையில், சோற்றுக்கு வழிசெய்யும் ஏதோ ஒரு வேலையை நோக்கிய படிக்கட்டுகளே தமிழ்நாட்டில் உள்ள பாடத்திட்டம்.

இது சரியா ? தவறா? என்பது ஒற்றை வரியில் சொல்லக்கூடிய விடை அல்ல. அம்பானியின் முழந்தை 'காக்கயின் சிறகில் சித்திரம் வரைவது எப்படி?' என்ற ஒரு பாடத்தை எடுத்து படிக்கலாம். ஏன் என்றால், அவர்களுக்கு பசியாற்றுவது என்பது முதல் தேவையாய் இல்லாமல் இருக்கலாம். சைக்கிள் ஓட்டும் ஒரு குமாஸ்தாவின் குழந்தையின் தேவை , படித்து கார் வாங்குவதாக இருக்கலாம். இப்படி தேவையின் அடிப்படையில் மட்டுமே பாடத்திட்டங்கள் அமைக்கபப்டுகிறது.

இவை மாறவேண்டும் என்றால், தேவைகளும் நோக்கமும் மாறினால்தவிர இது மாறாது. சைக்கிள் ரிக்சா ஒட்டி சிறப்பான வாழ்வு வாழமுடியும் என்ற நிலைவரும்போது சைக்கிள் ரிக்சாவிற்கான கற்றலின் தேவை வந்துவிடும்.

பாடத்திட்டம் சரி. சொல்லிக்கொடுக்கும் முறை சரியா?

ஒரே பாடத்திட்டத்தை பொதுவான (பெரும்பான்மை) வசதி,தேவை,நேரம் அனைத்தையும் கருத்தில் கொண்டு மாநில அரசு ஒரு முறையை பரிந்துரை செய்கிறது. அது அனைவருக்கும் சரியாக இருக்காது. என்ன செய்யலாம்? பணம் படைத்தவன் அல்லது மாற்றுக்கான வசதி/நேரம் உள்ளவன் அவனுக்கு மாற்று என்றுபடும் ஒன்றை தேடிக்கொள்ளலாம்..மற்றவர்கள்?

நாமக்கல் பாணி பள்ளிக்கூடங்கள்மீது வெறியும் , கோபமும், இயலாமையும் வருகிறது. ஆனால் எடுக்கப்படும் மார்க் மட்டுமே மேல்ப்படிப்பிற்கு உதவும் அதுவே ஒரு குறைந்தபட்ச வாழ்தலுக்கான உத்திரவாதத்தைக்கொடுக்கும் எனும்போது, கோழி வளர்த்து முட்டைகளை வாரி வழங்கிய நாமக்கல் தொழிலதிபர்கள், மாணவர்களிடம் இருந்து மார்க் என்ற முட்டையை எடுக்கும் சரியான (ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் தரும்) வழியை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

'மார்க் மட்டுமே' எனும் தேவை இருக்கும் வரை அதை மட்டுமே அல்லது அதை நோக்கியே உற்பத்தி நிகழும். இதை மாற்ற அதன் தேவை மாறினால்தான் முடியும். வாழ்வாதர வாய்ப்புகளை மொட்டையான மார்க் மட்டும் அல்லாமல் அடுத்த கூறுகளையும் சேர்த்து ஏற்படுத்தும்போதுதான் மாற்றுக்கல்வி அல்லது மாற்று கற்பிக்கும்முறை சாத்தியமாகும்.

உதாரணமாக வரலாறு படித்த ஒருவனுக்கு மாதம் ரூபாய் 60 ஆயிரம் சம்பளத்தில் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்தில் வேலை கிடைக்கும் என்றால் வரலாறு படிக்கும் தேவை கற்றலுக்கு வந்துவிடும்.

பிறந்தவுடன் குழந்தைக்கு சாதியையும், மதத்தையும் அந்தக் குழந்தையைக் கேட்காமலேயே ஞானஸ்தான்ம செய்துவிட்டு, நியுமரலாஜி நேமாலஜி எல்லாம் சேர்த்து கலவையாக ஒரு பெயரையும் கொடுத்துவிட்டு , அதே பெற்றோர்கள் .....குழந்தையின்மீது எதையும் திணிக்கக்கூடாது என்று கொடிபிடிப்பது ஆச்சர்யம். திணிப்பை எதிர்ப்பவர்கள் சாதி, மதங்களை திணிக்காமல் சுத்த சுயம்பு சன்மார்க்க திணிப்பற்றவ்ர்களாக இருக்க எல்லாம் வல்ல பூனைச் சாமி அருள் வழங்கட்டும்.

நன்றி: கல்வெட்டு

Thursday 18 December 2014

பிரச்னை பாடமொழியல்ல...!

அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில் அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.

மராட்டிய மாநிலத்தில் சமூக சீர்திருத்த இயக்கத்தை நடத்திய ஜோதிபா பூலே, அதே மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான கோதாவரி பர்லேக்கர் ஆகியோர் எளிய குடும்பங்களின் குழந்தைகளுக்காக பல பள்ளிகளை நிறுவினார்கள்.

மகாகவி ரவீந்திரநாத் தாகூர் துவக்கிய சாந்தி நிகேதன் கல்வி நிலையம் தற்போது இந்தியாலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான தோழர் பி.சுந்தரையா நெல்லூர் மாவட்டத்தில் தனது சொந்த கிராமத்தில் ஏழை குழந்தைகளுக்காக இரவுப் பள்ளியை நடத்தினார்.

தமிழகத்தில் சென்னையில் பி.எஸ். உயர்நிலைப்பள்ளி, முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளி (எம்.சி.டி.எம்.) மற்றும் மதுரை, கோவை, நெல்லை, திருச்சி போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல மனிதாபிமானிகள், கிறித்துவ தேவாலயங்கள், அறக்கட்டளைகள் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே ஏராளமான பள்ளிகளைத் துவக்கி நடத்தினார்கள்.

நாடு விடுதலை பெற்ற பின், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த காமராஜர் தலைமையிலான அரசு, மாநிலம் முழுவதும் ஏராளமான ஆரம்பப் பள்ளிகளையும், உயர்நிலைப் பள்ளிகளையும் துவக்கியது.

மேற்கண்ட நடவடிக்கைகளெல்லாம் கல்விக்கு - குறிப்பாக ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்விக்கு - அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையே எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், தற்போது நடப்பது என்ன?

தமிழகத்தில் சமீப காலத்தில் சுமார் 1,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. சென்னை மாநகரில் மொத்தமிருந்த 303 மாநகராட்சிப் பள்ளிகளில், 22 பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. இதனால், மாநகராட்சிப் பள்ளிகளில் 1,20,000-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 85,000-ஆக குறைந்துவிட்டது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து தனியார் பள்ளிகளில் அதிகரித்துக் கொண்டே போகுமானால், நாளடைவில் அரசுப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

சென்னையில் ஏழு மாநகராட்சிப் பள்ளிகளை நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக வந்த செய்தியை அடுத்து அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், மாநகராட்சி நிர்வாகம் தனது முடிவை கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

திண்டுக்கல் மாவட்டத்தில் சில பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. மேலும், சுமார் 140 பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20-க்கும் குறைவாக இருக்கிறது. இந்நிலை நீடித்தால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்பள்ளிகளும் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது.

அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால், ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள்? இந்த ஆபத்தை உணர்ந்த மாநில அரசு, ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்று கருதியது. அதனால், பல பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

ஆனால், 2013-14, 2014-15 ஆகிய ஆண்டுகளில் அரசின் அறிக்கையின்படியே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 55,774 குறைந்துள்ளது. இது எதை எடுத்துக்காட்டுகிறது? பிரச்னை பாட மொழி எது என்பதல்ல.

குடிநீர், கழிப்பிடம், பரிசோதனைக் கூடம் போன்ற அடிப்படை கட்டமைப்பு இல்லாதது, ஆசிரியர் பற்றாக்குறை, ஆங்கிலத்தை கற்பிக்க சரியான ஏற்பாடு இல்லாதது, சில ஆசிரியர்களின் அக்கறையின்மை, தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் அரசின் கொள்கை போன்ற காரணங்களால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இத்தகைய சூழலிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தனியார் பள்ளிகளை விட சிறந்த முறையில் அரசுப் பள்ளிகளை நடத்திக் காட்டிய உதாரணங்களும் உள்ளன.

நாமக்கல் மாவட்டம் ஊத்துப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 1999-ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 34 மட்டுமே. ஆனால், தற்போது 172. இவ்வூருக்குப் பேருந்து வசதி இல்லாத போதும், சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 20 வேன்களில் மாணவர்கள் இந்த அரசுப் பள்ளிக்கு வருகின்றனர்.

ஈரோடு நகராட்சி துவக்கப் பள்ளியில் 2009-ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 72 மட்டுமே. ஆனால் தற்போது அப்பள்ளியில் 235 மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா போன்றவை கற்பிக்கப்படுகிறது. இதனால், ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிலிருந்து 75 மாணவர்கள் இப்பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

2002-ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து. இந்த ஓராசிரியர் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர் எடுத்த முயற்சியினால் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 217. தற்போது ஏழு ஆசிரியர்களுடன் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக வளர்ந்துள்ளது. இப்பள்ளியில் அறிவியலுக்கு மட்டுமன்றி எல்லாப் பாடங்களிலும் ஆண்டுதோறும் எல்லா வகுப்புகளுக்கும் கண்காட்சி நடத்தப்படுகிறது. மாணவர்கள் மட்டுமன்றி, பெற்றோரும் இதைக் காண வருகிறார்கள்.

வகுப்புக்கு ஒரு கணினி வீதம் ஐந்து கணினிகள் உள்ளன. தமிழகத்திலேயே இணைய வசதி உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி இதுவாகத்தான் இருக்க வேண்டும். தொலைபேசி வசதியும் அவ்வாறே. ஆசிரியர்கள் தங்கள் அலைபேசியை பாட வேளைகளில் அணைத்து வைத்துவிட்டு, அவசர அழைப்புகளுக்கு இந்தத் தொலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள். தினமும் மாலை பள்ளி முடிந்த பின்பு ஒரு மணி நேரம், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

குமரி மாவட்டம், பூச்சிவிளாகம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 2011-ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 24. இப்பள்ளியின் தலைமையாசியரும், மற்ற ஆசிரியர்களும் எடுத்த முயற்சியினால், மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 112-ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் ராமம்பாளையம் துவக்கப் பள்ளியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் எண்ணிக்கை 27. அது தற்போது 74-ஆக உயர்ந்துள்ளது. இப்பள்ளி ஆசிரியர்கள் எடுத்த முயற்சியும், கிராம மக்கள் அளித்த ஒத்துழைப்பும்தான் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் எண்ணிக்கை 22. இப்பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்த முயற்சியினால், மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 124-ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டம் சொங்காடு மோட்டூர் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் 2010-ஆம் ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை 123. தலைமை ஆசிரியர் எடுத்த முயற்சியினால் தற்போது 151. ஆசிரியர்கள் முயற்சி செய்தால் அரசுப்பள்ளிகளை பாதுகாப்பதோடு, மாணவர்களின் எண்ணிக்கையையும் உயர்த்த முடியும் என்பதற்கான உதாரணங்களே இவை. மாநில அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசின் 10 ஆண்டு கனவுத் திட்டத்திற்கான (2013-2023) மொத்த ஒதுக்கீடு ரூபாய் 15 லட்சம் கோடி. இதில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் சேர்த்து உத்தேச ஒதுக்கீடு ரூபாய் 59,000 கோடி. இது 10 ஆண்டுகளுக்கான ஒதுக்கீடு. அதுவும் அரசு, தனியார் கூட்டு ஒதுக்கீடு. இது போதுமானதல்ல.

அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட,
  • தாய்மொழி பயிற்று மொழியாக தொடர வேண்டும்
  • ஆங்கில மொழி கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்திட வேண்டும்
  • அரசே மழலையர் பள்ளிகளை துவக்கிட வேண்டும்
  • மாணவர்கள் இடை நிற்றலைத் தடுத்திட வேண்டும்
  • பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்திட வேண்டும்
  • கல்வித் தரத்தை உயர்த்திட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும்
  • மத்திய அரசின் கட்டாய இலவசக்கல்வி உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட வேண்டும்

இதற்கான நிதிவளங்களை மத்திய அரசை நிர்பந்தித்துப் பெற வேண்டும்.
ஆம், அரசுப் பள்ளிகளை பாதுகாக்க அரசின் கொள்கையில் மாற்றம் வேண்டும். பாட மொழியில் அல்ல.

கட்டுரையாளர்: ஜி.ராமகிருஷ்ணன்