Friday 28 March 2014

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: 100% இலக்கை எட்ட வேண்டும்: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

First Published : 26 March 2014 11:06 PM IST


தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் வரும் கல்வியாண்டில் (2014-15) 100 சதவீத இலக்கை எட்ட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் அல்லாத பிற தனியார் பள்ளிகளில் நுழைவு வகுப்பில் நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணையை நிர்ணயம் செய்து விரிவான அறிவுரை வழங்கி ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கால அட்டவணையைப் பின்பற்றி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., 6-ஆம் வகுப்பு போன்ற நுழைவு வகுப்புகளில் கடந்த கல்வியாண்டில் (2013-14) 23,248 மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் 58,619 இடங்கள் இருந்தன. இதில் 40 சதவீத அளவுக்கே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

அதேபோல், சிறுபான்மையின பள்ளிகள் தவிர்த்து மெட்ரிக் பள்ளிகளில் 3,550 பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், 2,660 பள்ளிகளில் மட்டுமே இந்த இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

மத்திய அரசு சட்டம் இயற்றி, மாநில அரசு உரிய வழிகாட்டுதல் வழங்கி அரசாணை வெளியிட்டும் அதனைப் பின்பற்றாமல் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை மறுக்கப்பட்டதாக பல பள்ளிகளின் மீது புகார்கள் பெறப்பட்டன.

இந்தக் குறைகளைக் களையும் வகையில் 2014-15-ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 100 சதவீத இலக்கை (58,619 இடங்கள்) அடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த இலக்கினை எட்ட முழுமையான ஒத்துழைப்பு தராத பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்ய வேண்டும்.

மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்கள் இது தொடர்பாக மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வப்போது திடீர் ஆய்வுசெய்து இந்த இடஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

தேவைப்பட்டால், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருடன் இணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை:

ஏப்ரல் 2: நுழைவு வகுப்புகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும்.

மே 2: விண்ணப்பங்கள் வரவேற்பு.

மே 3: அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்.

மே 9: விண்ணப்பங்களைப் பெறவும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் கடைசி தேதி.

மே 11: இந்த ஒதுக்கீட்டில் சேர தகுதியான மற்றும் தகுதியற்ற பெற்றோர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.

மே 14: 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள், அதற்கான இடங்களை விட அதிகமாக இருந்தால், விண்ணப்பதாரர்களுக்கு டோக்கன் எண் வழங்கி உரியவர்களை ரேண்டம் முறையில் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த பிறகு 10 சதவீதம் காத்திருப்போர் பட்டியலுடன் தகவல் பலகையில் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

மே 20: இந்த சேர்க்கை தொடர்பான அறிக்கையை மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்விமுறையும்…

நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல் பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள்.

டபரா-டம்ளரைக் கும்பகோணத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். வாயில் காபியை வைத்ததும் சூட்டின் காரணமாக நாக்கு ருசிக்கும் திறனை இழக்கிறது. அதனால், காபியின் ருசியே தெரியாது சாப்பிட்டுவிட்டு கும்பகோணம் டிகிரி காபி சாப்பிட்டதாக நினைத்துக்கொள்கின்றோம். கும்பகோணத்துக்காரர்களைக் கேட்டால், டிகிரி காபி பாலின் தரத்தால் வருவது என்பார்கள்.

நமது குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியும் டிகிரி காபியைப் போன்றதே. கட்டிடம், பாடநூல்கள், ஆசிரியர்கள் போன்றவை முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள். மனப்பாடமுறைக் கல்வி சூடான காபியைப் போன்றது. கல்வி கற்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்துவதுடன், கல்வியின் ருசியை அறியாமல் செய்துவிடும். நல்ல பால்தான் டிகிரி காபியைத் தரும் என்பதுபோல, சிந்தனையைத் தூண்டும் வகுப்பறைக் கற்பித்தல்தான் தரமான கல்வியைத் தரும் என்பதை மறந்துவிடுகிறோம்.

குறுக்குவழிக் கல்வி

சுயநிதிப் பள்ளிகள் அனுமதிக்கப்பட்டவுடன் பெற்றோரைக் கவர வேண்டிய தேவை ஏற்பட்டது. பொதுத்தேர்வில் பள்ளியின் தேர்ச்சி விகிதமும், தனிப்பட்ட மாணவருடைய மதிப்பெண்களும் தரத்துக்கு அளவுகோல்களாயின . உயர் தேர்ச்சியை அடைந்திட பள்ளிகள் பல குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தன.

அவற்றில் பிரதானமானது மனப்பாடக் கல்விமுறை. இதன்படி, பாடங்களைக் கற்பிக்காமலோ அல்லது அரைகுறையாகக் கற்பித்தோ பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடைகளை மனப்பாடம் செய்ய மாணவரைப் பழக்கப்படுத்த வேண்டும்.

இந்தப் பள்ளிகளில் 10-ம் வகுப்புப் பாடங்களை 9-ம் வகுப்பிலேயும், 12-ம் வகுப்புப் பாடங்களை 11ம் வகுப்பிலேயும் தொடங்கி, 10, 12-ம் வகுப்புகளில் முழுமையாகத் திருப்புதலுக்கும், தின, வார மற்றும் திடீர் தேர்வுகளுக்கும் பயன்படுத்துகிற நடைமுறையைப் பின்பற்றுகின்றன.

மாணவர்களுக்கு ஓய்வு என்பதே இருக்காது. உறைவிடப் பள்ளிகளில் மிகுந்த கட்டுப் பாடுகள். அச்சத்திலேயே 24 மணி நேரமும் மாணவர்கள் வாழ வேண்டிய நிலை பரிதாபத்துக்குரியது. ஐ.நா. குழந்தைகள் உரிமை சாசனம் வற்புறுத்தும் மகிழ்ச்சி கரமான குழந்தைப் பருவம் மறுக்கப்படுகிறது.

உயர் தேர்ச்சி

இம்முறையைத் தடுத்து நிறுத்த வேண்டிய கல்வித் துறையே பொதுத்தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற இதுவே சரியான முறை என்று ஏற்றுக்கொண்டு, அதனைப் பள்ளிகளில் செயல்படுத்த முயல்வதை என்னவென்று சொல்வது? பத்து, பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உயர் தேர்ச்சி காட்டிட தனிப்பயிற்சி அளிக்க இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.

கல்வித் துறையே, மாநிலம் முழுவதற்கும் பொதுவாகப் பருவத் தேர்வுகள் நடத்துவதும், வினா வங்கி என்ற பெயரில் வினாத் தொகுப்புகளை வெளியிட்டு விற்பனை செய்வதும் பொதுத்தேர்வுகளில் உயர் தேர்ச்சி அடைந்திட வேண்டுமென்றே. இவை அனைத்தும் மனப்பாட முறைக் கல்வியை வளர்க்கவே உதவும். இதன் விளைவு, பொறியியல் மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே தேர்ச்சி பெறத் தவறுகின்றனர்.

முன்கூட்டியே...

தனியார் பள்ளிகளைப் போல ஒன்பது, பதினொன்றாம் வகுப்புகளிலேயே பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை முன்கூட்டிக் கற்பிக்காவிட்டாலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களுக்குள் பாடங்களை முடித்துவிட்டு, மீதிக் காலத்தை மீள்தேர்வுகளுக்குப் பயன்படுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால், பாடங்களை விரைந்து கற்பிக்க ஆசிரியர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர். 200 வேலை நாட்களில் கற்பிக்க வேண்டியவற்றை 150-160 நாட்களில் நடத்த வேண்டுமென்றால், கற்பித்தலும் குறைபடும் மாணவர்களுடைய கற்றலும் வெகுவாகப் பாதிக்கப்படும். பாடத்திட்டங்கள் வகுக்கும்போது, ஒவ்வொரு பாடப் பகுதியையும் நன்கு கற்பிக்கவும் மாணவர் புரிந்துகொள்ளுதலை உறுதிப்படுத்தவும் தேவையான பிரிவேளைகள் ஒதுக்கப்படும்.

ஒரு பாடப் பகுதிக்கு 10 பிரிவேளைகள் தேவையென்றால், ஆசிரியர் விடுப்பு, அந்தப் பகுதியில் ஒரு அலகுத் தேர்வு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு 12 பிரிவேளைகள் ஒதுக்கப்படும். 10 பிரிவேளைகளில் கற்க வேண்டியதை 5, 6 பிரிவேளைகளில் முடிக்க முற்பட்டால், கற்றல் நடைபெறாது. அஜீரணம்தான் ஏற்படும். கற்றல் இல்லாமலேயே தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டுமென்றால், மனப்பாட முறைக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள். பள்ளியில் முழுமை யாகக் கற்க இயலாததால் காலையும் மாலையும் தனி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படு கிறது. அதற்கான வசதி இல்லாதவர்கள் அரைகுறை அறிவோடு தேர்வுகளை மட்டுமின்றி வாழ்க்கையையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பெரும் சவால்

பொதுத்தேர்வுக்குரிய வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் படும் துன்பம் அளவிட முடியாதது. ஒரு ஆசிரியர் வேடிக்கையாக, ஆனால் வேதனையுடன், “மாணவர்கள் கீழ் வகுப்புகளிலிருந்து அறியாமையைத் தொடர்வட்டி விகிதத்தில் சேர்த்துக்கொண்டு வருகின்றார் கள். அடிப்படைகள்கூடத் தெரியாத அவர்களைத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துதல் பெரும் சவாலாக இருக்கிறது” என்று கூறினார்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து தரமான கல்வியை ஒவ்வொரு மாணவருக்கும் உறுதிசெய்வதன் மூலமே, மனப்பாடமுறைக் கல்வியி லிருந்து மாணவர்களை விடுவிக்க முடியும். அதனை உறுதிசெய்வது ஆண்டாய்வு. ஆனால், கல்வித் துறை தனது முதற்பணியான பள்ளி ஆண்டாய்வை முறையாக நடத்துவதைக் கைவிட்டுப் பல ஆண்டுகளாகிவிட்டன. 10, 12 -ம் வகுப்புகள் மட்டும்தான் பள்ளிக்கல்வி, அவற்றைக் கவனித்தால் போதும் என்ற மாயையிலிருந்து கல்வித் துறை விடுபட வேண்டும்.

அப்போதுதான், மாணவர்களுக்கு அர்த்த முள்ள முழுமையான கல்வி கிடைக்கும். அறிவுமிக்க ஒரு சமுதாயத்தையும் நம்மால் உருவாக்க இயலும்.

குழு முறையில் கற்றல்

கோத்தாரிக் கல்விக் குழு, பேரா. யஷ்பாலின் ‘சுமையின்றிக் கற்றல்’ குழு ஆகியவை பள்ளிக் கல்வியில் தேவைப்படும் சீரிய மாற்றங்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளன. தமிழ்நாட்டில் பாடச்சுமைக் குறைப்புக் குழு, சமச்சீர் கல்விக் குழு ஆகியவையும் பல நடைமுறைச் சாத்தியமுள்ள பரிந்துரை களை அளித்துள்ளன. ஆனால், அவை காற்றில் விடப்பட்டது மாத்திரமின்றி, நேரெதிர் முடிவுகளும் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மாணவர்களுக்காகப் பள்ளியா, பள்ளிக்காக மாணவரா என்ற வினா எழுகிறது. மாணவர்களுடைய வயது, புரிந்துகொள்ளும் தன்மை ஆகியவை கருத்தில் கொள்ளப்படாமல், உயர் கல்வியின் தேவைகளை முன்வைத்தே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பான்மையோர் உயர் கல்விக்குச் செல்லும் வாய்ப்பை இதுவே குறைக்கிறது என்பது ஒரு முரண்நகை. போட்டி முறையில் கற்றல் என்பதைவிட, குழுமுறையில் கற்றல் என்பதை ஊக்குவிக்கும் வகையில், கல்விமுறை அமைக்கப்பட வேண்டும்.

வகுப்பறை என்பது விவாத அரங்காக மாற வேண்டும். மாணவர் பங்கேற்புடன் வகுப்பறை மாறும்போதுதான் உண்மையான கல்வியை மாணவர்கள் பெற முடியும் என்பதைப் பல ஆய்வுகளும் வலியுறுத்தியுள்ளன.

பள்ளிக் கல்வியில் சீரிய மாற்றங்களைக் கொண்டு வராமல் முன்னேற்றப் பாதையில் செல்ல இயலாது. பளபளக்கும் டபரா-டம்ளர்களைப் பார்த்து டிகிரி காபி என நம்புவதுபோல், அர்த்தமற்ற கல்வி மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளை நாம் இழந்துவிடக் கூடாது.

-ச. சீ. இராசகோபாலன், கல்வி ஆர்வலர், 
முன்னாள் மாநிலத் தலைவர், 
தலைமை ஆசிரியர் சங்கம். 
தொடர்புக்கு: rajagopalan31@gmail.com
நன்றி: தி தமிழ் இந்து

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய-மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 3 சதவீத இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால், இந்த உத்தரவு சரியாக நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என்ற புகார் பரவலாக இருந்து வருகிறது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்
இந்த சூழ்நிலையில், தலைமைச் செயலக துறைகள், துறைத்தலைமை அலுவலகங்கள், பிரிவு அலுவலகங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் வரும்காலத்தில் பணிநியமனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் பி.சிவசங்கரன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதுமட்டுமின்றி கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி இதுநாள் வரை அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 1,923 பின்னடைவு காலியிடங்களை (பேக்லாக் வேகன்சி) சிறப்புத்தேர்வுகள் மூலம் உடனடியாக நிரப்புமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதில் 1,107 ஆசிரியர் பணியிடங்கள், 79 மருத்துவப் பணியிடங்கள், 259 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வரப்பிரசாதம்
தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் என்று பார்த்தால், 5,053 தொடக்கப் பள்ளிகள், 1,556 நடுநிலைப்பள்ளிகள், 633 உயர் நிலைப் பள்ளிகள், 1,165 மேல்நிலைப் பள்ளிகள், 42 ஆசிரியர் பயிற்சி நிறு வனங்கள், 139 கலை அறிவியல் கல் லூரிகள், 14 கல்வியியல் கல்லூரிகள், 3 பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. தமிழக அரசின் புதிய உத்தரவை தொடர்ந்து, மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், அலுவலக பணியாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும்.

மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு வரவேற்பு
தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.எம்.என். தீபக் கூறும்போது, “தமிழக அரசின் இந்த உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக டயோசீசன் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்கும். மாற்று திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு ரோஸ்டர் முறை சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கண்காணிக்க உரிய வழிவகை செய்யப்பட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஜெ.கு.லிஸ்பன் குமார்
நன்றி: தி இந்து