Wednesday 28 November 2012

செயல்வழி கற்றல்: மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி

பாளையங்கோட்டையில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.


பாளையங்கோட்டையில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு செயல்வழி கற்றல் முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.  தமிழக அரசால் நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொதுப்பாடத் திட்டங்களுக்கு ஏற்ப, செயல்வழி கற்றல் அட்டைகளில் சில மாற்றங்கள் செய்து, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறையின்மூலமாக ஆக்கபூர்வமான கற்றல் நிகழ அனைவருக்கும் கல்வி இயக்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த புதிய கற்றல் முறை குறித்து தமிழகம் முழுவதும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் 2 நாள் பயிற்சி முகாம் பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டது.

பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளருமான ப. கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி தொடங்கி வைத்தார். உதவித் திட்ட அலுவலர் ஆர். ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜெயகுமார், ஜெகதீஸ்வரன், ரவிகுமார், பரமேஸ்வரன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் செல்வின், ஆசிரியர்கள் மரிய ஜோசப் லாரன்ஸ், சந்திரசேகரன் ஆகியோர் முதன்மை கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சகாய ஜூடி செய்திருந்தார். தொடர்ந்து அனைத்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (நவ.28,29) வட்டார வளமையங்களில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.