Monday 30 September 2013

சர்வதேச எழுத்தறிவு தினம்

மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சர்வதேச எழுத்தறிவு தினம் தீபம் மேம்பாட்டு இயக்கத்துடன் இணைந்து திருமங்கலத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஆசிரியர் சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார். முத்துலட்சுமி, வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புரை மாவட்டச் செயலாளர் மொ. பாண்டியராஜன் நிகழ்த்தினார். காசிப்பாண்டியன், காமேஷ், பிரேமா ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருமங்கலம் கிளையும் அப்பகுதி தீபம் மேம்பாட்டு இயக்கமும் இணைந்து செய்திருந்தது. சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாற்று கல்விக்கானவாசிப்பு முகாம்-8


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாற்றுக்கல்விக்கான 8வது வாசிப்பு முகாம் செப்டம்பர்28,29 ஆகிய நாட்களில் சென்னை-கிழக்குதாம்பரத்தில் நேசனல் பள்ளியில் நடைபெற்றது.

அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர்ஆர்.நீலா தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழுஉறுப்பினர் ஜெ.பாலசரவணன்வரவேற்றுப்பேசினார். மாநிலகல்வி உபகுழுஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் முன்னிலைவகித்தார். கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி வாசிப்பு முகாமினைத் துவக்கி வைத்துப் பேசினார்.



சர்வதேச அளவில் மாற்றுக்கல்விக்கான தந்தை என்று கல்வியாளர்கள் கொண்டாடப்படும் பிரேசில் நாட்டுக் கல்வியாளர் *பாவ்லோ பிரைரே*அவர்களால் எழுதப்பட்டு 1970களில் வெளிவந்து உலகம் முழுவதும் எழுத்தறிவிற்கான விழிப்புணர்வு ஏற்படவும் 70க்கும் மேற்பட்ட நாடுகள் கல்வி குறித்த சட்டங்களையும் திட்டங்களையும் அறிவிக்க காரணமாக அமைந்த புத்தகம்… *ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை. *இந்த புத்தகம் நடைமுறையில் இருக்கின்ற கல்விமுறையினை வங்கிமுறைக் கல்வி என்றும் இன்றைய வகுப்பறைகள் எடுத்துரைக்கும் நோயால் அவதியுறுகின்றன என்றும் மாணவர்களை உயிருள்ள ஜூவன்களாகக் கருதாமல் உயிரற்ற பருப்பொருள்களாக கருதுகின்றது என்றும் சாடுகிறது. மாற்றாக உரையாடல் மூலமாக கற்றலை வலியுறுத்துகிறது. ஆசிரியரின் மாணவர், மாணவரின் ஆசிரியர் என்ற நிலை மாறி ஆசிரிய மாணவர், மாணவ ஆசிரியர் என்ற புதிய வகுப்பறை உறவை அறிமுகம் செய்கிறது. இன்றைய பாடபுத்தகங்கள் உலகை அந்நியப்படுத்துகின்றன. உலகப் பொருட்களை, பிரச்சினைகளை மாணவர்களின் உணர்வுநிலைக்குள் கொண்டு செல்ல மறுக்கின்றன… என கல்வி குறித்த பல்வேறு புதிய சிந்தனைகளையும் கல்வியின் அரசியலையும் இந்த புத்தகம் முன்வைக்கிறது.


எழுத்தாளர் ஆயிசா நடராஜன், பேராசிரியர்கள்ராஜூ, சிவக்குமார், விஜயகுமார், பொன்ராஜ்ஆகியோர் புத்தகத்தின் பல்வேறு அத்தியாயங்களுக்கான கருத்துரையாற்றினார்.கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கானகல்விமுறையின் இன்றைய பொருத்தப்பாடும்நமது செயல்பாடுகளும் என்ற தலைப்பில்கருத்துரை வழங்கினார். மாநிலத் தலைவர்பேராசியர்.மணி மாற்றுக் கல்விக்கான எதிர்காலத்திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்துநிறைவுரையாற்றினார்.

தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆசிரியர்கள்,ஆர்வலர்கள் என 50 பேர் பங்கேற்று, உலகின் சிறந்தகல்வியாளர் பாவ்லோ பிரைரேயின்ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கானகல்விமுறை என்ற நூலை குழுவாக படித்துவிவாதித்தனர்.


அறிவியல் இயக்கம் சென்னை மாவட்ட செயலாளர்சக்திவேல், மாவட்டத் தலைவர் ரவிக்குமார், ,மாவட்ட நிர்வாகிகள் சி.பி.ராமச்சந்திரன், பலராமன்,இளங்கோ, மோகனா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


மண்டல அளவிலும் மாவட்ட அளவிலும் வாசிப்புமுகாமினை நடத்துவது எனவும்தீர்மானிக்கப்பட்டது.அடுத்த மாநில வாசிப்புமுகாம் டிசம்பர் 28,29 நாட்களில் திருச்சிமாவட்டத்தில் நடத்துவது என்று முடிவுஎடுக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர்உதயன் நன்றி கூறினார்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "சர்வே'

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013,23:28 IST

கம்பம்:அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட பின், பள்ளிகளில் காணப்படும் நிலை குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சர்வே துவக்கியுள்ளது.

பெற்றோர்களின் மெட்ரிக் பள்ளிகள் மீதான ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு தோறும் ஆரம்ப கல்வியில், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கடந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை துவக்க அரசு உத்தரவிட்டது. ஆனால், அதற்கான எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யவில்லை.

இந்நிலையில், ஆங்கில வழிக்கல்வியை துவக்கியதால், தாய் மொழி கல்விக்கு "நெருக்கடி' ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர் வட்டாரங்கள் கூறியுள்ளன. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் சர்வே எடுத்து வருகிறது. இப்பணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் கூறுகையில்,""ஆங்கில வழிக்கல்வியால், தாய்மொழி கல்விக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி, தமிழகம் முழுவதும் சர்வே செய்து, சில பரிந்துரைகளை பள்ளிக் கல்வித்துறைக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

நன்றி: தினமலர்



Sunday 22 September 2013

ஆசிரியர் தின விழா

தேனி மாவட்டம் உப்புக்கோட்டையில் உள்ள பச்சையப்பா உயர் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழு சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகத் தலைவர் திருமிகு லட்சுமிவாசன் தலைமை வகித்தார்.பள்ளித்தலைமையாசிரியர் வரவேற்றார். உத்தமபாளையம் கிளைத் தலைவர் திருமிகு. வளையாபதி வாழ்த்துரை வழங்கினார். கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர். க.முத்துக்கண்ணன் ஆசிரியர்களுக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்திப் பேசினார். 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இது போன்ற நிகழ்வுகளில் புத்தக்கங்களை அறிமுகப்படுத்துவது நல்ல வரவேற்ப்பை தருகிறது. பல ஆசிரியர்கள் அப்புத்தகங்களை நம்மிடம் கேட்டிருந்தனர். தொடர்ச்சியாக இப்பணிகளில் கவனம் செயல்படுவது அமைப்பிற்கு நல்லது.

டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. 8 ஆசிரியர்கள், 150க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டனர். ஆசிரியர் இணைய ஒருங்கிணைப்பாளர் திருமதி.ஞானசுந்தரி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்


அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் திருமிகு செந்தில்குமரன் தலைமை தாங்கினார். முத்தனம்பட்டி கள்ளர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். திருமதி விஜயா வாழ்த்துரை வழங்கினார். தமிழாசிரியை திருமதி. சாந்தி வரவேற்றார். இப்பள்ளி தொடர்ந்து5ஆண்டுகள் 100% தேர்ச்சி அடைய காரணமாக இருந்த ஆசிரியர்களை பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கல்வி வளர்ச்சி கழகத்தின் மாவட்ட செயலர்.திருமிகு. இதயகீதன் சிறப்புரை வழங்கினார். அறிவியல் இயக்க மாநில கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு. சுந்தர் நிறைவுரையாற்றினார். ஆசிரியர் திருமிகு. மோகன்குமாரமங்கலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுமன் நன்றி கூறினார். சமகால கல்வி தொடர்பான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. ”போயிட்டு வாங்க சார்” நூல் அறிமுகம் செய்யப்பட்டது.இந்நூல் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

–க.முத்துக்கண்ணன்.tnsf

Wednesday 18 September 2013

இன்றைய கல்வியை வங்கி முறைக்கல்வி என்று சாடிய பாவ்லோ பிரைரே-யின் பிறந்த நாள்

கல்வி என்பது நடுநிலையானது அல்ல...
அது ஒரு அரசியல் நடவடிக்கை!

இன்றைய கல்வி கொடுக்கலும் வாங்கலுமான
வங்கிமுறைக் கல்வி!

ஆசிரியர் மட்டுமே என்றென்றும் பேசிக்கொண்டிருப்பவராக இருக்கிறார். மாணவர்கள் என்றென்றும் கேட்டுக்கொண்டிருக்கும் ஜடப்பொருளாக கருதப்படுகிறார்!


ஆசிரியர் கற்பிப்பவர்...
மாணவர் கறிக்கப்படுபவர்...

ஆசிரியர் ஒழுக்கத்தைப் போதிப்பவர்..
மாணவர் அதன்படியே நடப்பவர்....

மாணவர் மூளையில் தகவல்களை மட்டுமே
நிரப்பி விடுவதாக இருக்கிறது இன்றைய கல்வி!

இருக்கின்ற கல்விமுறையும் பள்ளிகளும்
நடுநிலையானவை அல்ல!
அவை ஆளும் வர்க்கத்தின் தத்துவார்த்த நிலையை
மீண்டும் மீண்டும் மீள் உருவாக்கம் செய்பவையாக இருக்கின்றன..

இருப்பதை இருக்கிற படியே ஏற்றுக்கொள்ளச் செய்வதாக
இருக்கிறது இன்றைய கல்வி!


மேற்கூறியது போல ஏராளமான புரட்சிகரமான கல்விக்கோட்பாடுகளை முன்வைத்தவர் பிரேசில் நாட்டுக் கல்வியாளர் பாவ்லோ பிரைரே... 1960களில் வெளிவந்த இவருடைய புத்தகமான “ ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை” அந்நாட்டு இராணுவ அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. அவரும் நாடு கடத்தப்பட்டார் என்றால் எந்த அளவிற்கு நாட்டையே உளுக்கியெடுத்திருக்கும்.. 1974ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு உலகமெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது. சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த ஆண்டே அனைவருக்கும் கல்வி வழங்குவதை நோக்கி திட்டங்களைத் தீட்டவும் செயல்படவுமான கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டன... நமது நாட்டின் இலக்காகவும் மாறியது. தமிழகத்தின் அறிவொளி திட்டமும் (வயது வந்தோர் கல்வி) பாவ்லோ பிரைரே பிரேசிலில் செய்த அறிவுப்புரட்சியின் நீட்சியே ஆகும்..

பிரேசில் நாட்டில் வெறும் 10% படித்த, பணக்கார வர்க்கத்தினருக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை. கல்வியறிவு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக நாட்டின் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வாக்குரிமை கூட மறுக்கப்பட்டிருந்த கொடுமையெண்ணி வருந்தினார். 20 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணி, ஆராய்ச்சி, மக்கள் சந்திப்பு என அவரது வருத்தம், கோபம் மக்களுக்கான இயக்கமாக மாறியது.. கேள்வி கேட்பதற்கான கல்வி, விமர்சன மனநிலைக்கான கல்வி உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்..

அவருடைய புத்தகங்களில் கல்வியாளர்கள் பலராலும் அவதானித்துப் பேசக்கூடியவையாக, மேற்கோள் காட்டி பேசக்கூடியவையாக இருப்பவை ”யதார்த்ததை வாசித்தலும் எழுதுதலும், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை” ஆகிய இரண்டுமாகும்.

பாவ்லோ பிரைரே-யின் பிறந்த நாள்.. செப்டம்பர்,19


மாநில அளவிலான வாசிப்பு முகாம்:8

எனக்குரிய இடம் எங்கே?,  ஆளுக்கொரு கிணறு, ஆயிஷா, எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?, முதல் ஆசிரியன், பகல் கனவு, டோட்டோ ஜான், போயிட்டு வாங்க சார், வகுப்பறைக்குள் காற்றும் வெளிச்சமும், டேஞ்சர் ஸ்கூல், கரும்பலகையில் எழுதாதவை என நீளும் கல்வி சார்ந்த பல நூல்களை ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகவே அறிவியல் இயக்கம் வாசிப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

வருகின்ற செப்.28, 29 தேதிகளில் சென்னையில் மாநில அளவிலான 8ஆவது வாசிப்பு முகாம் நடைபெறுகிறது. வாசிப்பு முகாமில் விவாதிக்கப்பட உள்ள புத்தகம்: பாவ்லோ பிரைரே’வின் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை” தான்..

முகாம்களில் பங்கேற்க விரும்பும் ஆசிரிய நண்பர்கள், வாசிப்பை நேசிக்கும் அனைவரும் தொடர்பு கொள்ள:
திருமிகு.நீலா, மாநில ஒருங்கிணைப்பாளர், வாசிப்பு முகாம்: 9786626273
திருமிகு.ஜெ.பாலசரவணன், இணை ஒருங்கிணைப்பாளர்: 9486161283






Saturday 14 September 2013

7வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு (NTSC)-2013:

அறிவியல் கற்பிக்கும் பணியில் இருப்போர்க்கு அறிவியல் கல்வி மற்றும் கற்பித்தல் குறித்த அவர்களின் அறிவை, திறமையை புதுப்பித்துக்கொள்ளும் பொருட்டும் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டும் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் அறிவியல் & தொழில்நுட்பத்துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புகளால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

மாநாட்டின் நோக்கம்: 

அறிவியல் கற்பித்தலில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் விமர்சனப்பூர்வமான கருத்துகளை வெளிக்கொண்டுவருதல், அதே நேரத்தில் அவர்களை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலுமாக அத்துறையில் நிபுணத்துவம் பெறச்செய்தல். 

அறிவியல் கோட்பாடுகளை, விதிமுறைகளை விளக்க ஆசிரியர்கள் சுயமாகக் கண்டுபிடித்து பயன்படுத்தும் அவர்களது வகுப்பறை சார்ந்து பயன்படுத்தும் புதிய வழிமுறைகளையும் எளிய, குறைந்த செலவிலான அல்லது செலவற்ற கற்றல் கற்பித்தல் கருவிகளையும் வெளிக்கொண்டு வருதல், ஊக்குவித்தல். 

அறிவியல், தொழில்நுட்பத்துறையில் ஆய்வுகளை ஊக்குவித்தல், 

நடைமுறைப் படுத்தப்படுகின்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் சூழலில் அறிவியல்பூர்வமான கல்வியில் விளைவுகள் குறித்த ஒரு பரந்த, விரிந்த கருத்துப்பரிமாற்றத்தினை உருவாக்குதல், அதன் மூலமாக தரமான கல்வியை மக்களுக்கு வழங்குதல். 

நடைமுறையில் இருக்கின்ற கல்வி அமைப்பிற்கு அப்பால் நாட்டின் தன்னிறைவான வளர்ச்சிக்கு உதவுகின்ற புதிய கல்விக்கோட்பாடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகியவை இம்மாநாட்டின் நோக்கங்களாக உள்ளன.

மாநாட்டில் பங்கேற்கக் கூடியவர்கள்: 

துவக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், அனைவரும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பரப்பும் பணிகளை மேற்கொள்கின்ற அமைப்புகளின் செயல்பாட்டாளர்களும் பங்கேற்கலாம். 

மையக் கருப்பொருள்: நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் கல்வி:

அறிவியல் ஒன்றால் மட்டுமே நாட்டில் நிலவுகின்ற பசிக்கொடுமையையும் வறுமையையும், சுகாதாரக் குறைபாடுகளையும், எழுத்தறிவின்மையையும், மக்களிடையே இருக்கின்ற மூடப்பழக்கவழக்கங்களையும், கண்மூடித்தனமான நடைமுறைகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் களைய முடியும்.. லட்சக்கணக்கான மக்கள் பசியால் வாடுகின்ற நாட்டில் வீணாகும் இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்தும் நிலையைக் கொண்டுவரமுடியும்- பண்டிட்.ஜவஹர்லால் நேரு-1960ல்.. அலகாபாத் பல்கலை விழாவில்.. 

நிலைத்த நீடித்த வளர்ச்சி ஒன்றே இந்தியாவின் அடிப்படைத் தேவையாக இருக்க முடியும்-அபதுல் கலாம். 

ஆக நிலைத்த நீடித்த வளர்சிக்கு தேசமானது எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளை உணர்ந்து செயல்படவேண்டும். அதே நேரத்தில் மக்களை அறிவியல் விழிப்புணர்வுடையவர்களாக மாற்ற வேண்டும். அறிவியல் கொள்கைகளை நடைமுறையில் தங்களுடைய சொந்த வாழ்விலும் சமூகப் பிரச்சினைகளிலும் பயன்படுத்துபவர்களாக, அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படுபவர்களாக உருவாக்க வேண்டும். 

நவீன அறிவியல் தொழில்நுட்பங்களே இன்றைய வாழ்க்கையின் இயக்குசக்தியாக இருக்கின்றன. இந்த நேரத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களில், செயல்பாடுகளில் மிக ஆழமான அறிவியல்பூர்வமான தலையீடுகளின் அவசியம் அதிகரித்திருக்கிறது. ஒரு அறிவியல் பூர்வமான சமூகத்தில் இயல்பாகவே சிக்கலுக்கான தீர்வுகளை எளிதாகக் கண்டறிதல், ஆழமாகச் சிந்தித்தல், இணைந்து செயல்படுதல், தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துதல், தொடர்ந்து கற்றல் ஆகிய பண்புகளைக் கொண்டவர்களாக மக்கள் திகழமுடியும். ஆக கல்வியை, குறிப்பாக அறிவியல் கல்வியை முழுமையாகக் கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே நிலைத்த வளர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியும்.

துணைக்கருப்பொருட்கள்: 

1.நிலைத்தகு வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு 

Ø அறிவியல் மற்றும் கணிதத்தினை நன்கு கற்றல் கற்பித்தல்: 

பாரம்பரியமான கற்பித்தல் முறைகளிலிருந்து வேறுபட்டு ஆசிரியர்கள் பின்பற்றக்கூடிய/ அறிமுகப்படுத்தக்கூடிய கதை கூறுதல், விளையாட்டு முறை, புதிர்கள், வினாடிவினா, களப்பயணம், தனியாள் ஆய்வு போன்ற முறைகளால் ஏற்படும் கற்றல் விளைவுகளை ஒப்பிட்டு ஆய்வுகள் செய்தல்.. 

Ø அறிவியல் உணர்வை மேம்படுத்துதல்: 

அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் அறிவியல் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதோடு மாணவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அறிவியல் கற்பித்தலால் கற்றலால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள நடத்தை மாற்றங்கள், மனப்பான்மைகள் குறித்த ஆய்வுகள், அளவீட்டிற்கான புதிய கருவிகள், மதிப்பீட்டு உத்திகள் தொடர்பான ஆய்வுகள்.. 

Ø அறிவியல் கல்வியில் பல்லூடகம், அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் எளிய அறிவியல் பரிசோதனைகள்: 

அறிவியல் கற்பித்தலில் ஆசிரியர்களின் ஈடுபாடும் முயற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் பயன்படுத்திய புதிய, எளிய கற்றல் கற்பித்தல் கருவிகளால் நிகழ்ந்த கற்றல் அடைவை முன், பின் தேர்வுகளால் அளவீடு செய்தல். 

Ø அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தலில் புதுமைகளைப் பயன்படுத்துதல்: 

ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பயன்படுத்திய புதுமையான கற்பித்தல் முறை, அணுகுமுறை, செயல்திட்டங்கள் குறித்த ஆய்வுகள்.. 

Ø ஆசிரியர்களுக்கான தரமான பயிற்சி: 

கல்வியின் வெற்றியில் ஆசிரியர்களின் பங்கே முதன்மையானது. எனவே அவர்களுக்கான பணிமுன், பணியிடைப் பயிற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே ஆசிரியர் பயிற்சி சார்ந்த நடைமுறைகள், தேர்வு நடைமுறைகள், இருக்கின்ற பொதுவான நிலைமை, பயிற்சி உத்திகள் போன்ற ஆசிரியர் பணியை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள்.. 

Ø அறிவியல் கல்விக்கான ஒருங்கிணைந்த கல்வி முறை: 

மாணவர்களின் தனியாள் வேற்றுமைகளுக்கேற்ப, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்ட புதிய கற்பித்தல் முறைகள், கருவிகள் குறித்த ஆய்வுகள்.. 



2. பாரம்பரிய அறிவு, பழக்க வழக்கங்கள் மற்றும் நிலைத்தகுவளர்ச்சி: 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களிடையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியமான பழக்கவழக்கங்கள், புரிதல்கள் குறிப்பாக நிலம், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் குறித்தவை. பயிர்பாதுகாப்பு, விலங்குகளைப் பேணுதல், வானிலை, காலநிலையை முன்கூட்டியே கணித்தல், உடல்நலம், ஊடுபயிரிடுதல், நிலவளத்தை நிர்வகித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை உற்றுநோக்குதல். அவற்றில் இருக்கின்ற அறிவியல் பூர்வமான நடைமுறைகளை காலத்திற்கேற்றவாறு மாற்றியமைத்தல் போன்றவை. 

Ø பாரம்பரிய அறிவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள அறிவியலை கண்டறிதல்: 

Øநிலைத்தகுவளர்ச்சிக்காக பாரம்பரிய அறிவினையும் பழக்கவழக்கங்களையும் பயன்படுத்துதல் 

3 .சமூகத்திற்கான அறிவியல்: 

சமூகத்தில் நிலவுகின்ற பல்வேறு செயல்பாடுகளில் உள்ள அறிவியல் அணுகுமுறைகள், பிற்போக்கு மூடநம்பிக்கைகள், நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் வாழ்வில் இயல்பாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் இந்த உபதலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படலாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பிரச்சார அமைப்புகளின் தொடர்முயற்சிகளின் விளைவாக குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட சமுதாய மக்களிடையே அல்லது பொதுவாக சமூகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வுகளை இத்தலைப்பின் கீழ் மேற்கொள்ளலாம். 

Ø மூடநம்பிக்கைகளை களைவதில் அறிவியலின் பயன்பாடு 

Ø சுகாதாரம் மற்றும் சுத்தம்,விவசாயம், சக்தி சுற்றுச்சூழல் தண்ணீர் போன்றவற்றின் பங்களிப்பில் அறிவியல் 

Ø அறிவியல் பரப்புவதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பான ஆய்வுகள் 

முக்கிய தேதிகள்:
பதிவுப்படிவம், ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுக்கட்டுரை அனுப்பக் கடைசி நாள் 2013 அக்டோபர் 10. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு முடிவு விவரங்கள் அக்டோபர் 20ம் தேதிக்குள் தெரிவிக்கப்படும். தேசிய அளவிலான மாநாடு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும். 

அனுப்பவேண்டிய முகவரி: ashokntsc@gmail.com, tnsf.kalvikulu@gmail.com 

கூடுதல் விவரங்கள்: 

தயாரிக்கும் கட்டுரையானது A4 தாளில் 12 ஆம் எண் எழுத்துருவில் times new roman எழுத்துருவில் 1.5 இடைவெளியில் இருக்கவேண்டும். சுமார் 3000 முதல் 4500 வார்த்தைகளில் கட்டுரை அமைதல் நலம். போஸ்டராகவும் தயாரிக்கலாம் அதன் வடிவமைப்பு 70செமீ X 55 செமீ ஆக இருக்கலாம். 

ஆய்வுக்கட்டுரைகளானது வழக்கம் போல ஆய்வுச் சுருக்கம், முன்னுரை, நோக்கங்கள் அய்வு முறை, புள்ளிவிவரங்கள் சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், ஆய்வு முடிவுகள், எதிர்கால திட்டங்கள், நன்றியுரை, மேற்கோள் நூல்கள், இணையதளங்கள் போன்ற உள்ளடக்கத்தில் இருக்கவேண்டும். கூடுதல் விவரங்களை www.ncstc-network.org என்ற இணையதள முகவரியில் காணலாம்.

மேலும் விபரங்களுக்கு: 

முனைவர்.என்.மாதவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு-2013
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
அலைபேசி: 94437 24762 
மின்னஞ்சல்:thulirmadhavan@gmail.com 

தே.சுந்தர்
மாநிலச் செயலாளர்
மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி உபகுழு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
அலைபேசி:9488011128 
மின்னஞ்சல்:sundar.tnsf@gmail.com