Sunday 25 September 2011

சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் காலாண்டுத் தேர்வு தொடங்கியது

சென்னை: 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் காலாண்டுத் தேர்வு இன்று தொடங்கியது. 

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு கடுமையான சட்டப் போராட்டத்தை சந்திக்க வேண்டி வந்தது. இறுதியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 இந்தக் குழப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பு்ம், பாடத் திட்டம் வழங்குதல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு தாமதம் ஏற்பட்டன. இதனால் மிகக் குறுகிய காலத்திற்குள் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் கூட பல பள்ளிகளில் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 இந்த நிலையில் செப்டம்பர் 22ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கின. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வு இன்று தொடங்கியது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. அதேசமயம், தனியார் பள்ளிகளில் ஏற்கனவே தேர்வு தொடங்கி விட்டது. 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் காலாண்டுத் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.