Friday 20 November 2015

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை: அச்சுறுத்தும் அபாயங்கள்

பள்ளிக்கல்வியில்….

Ø படித்தவர்கள் அனைவருக்கும் வேலை இல்லை.. காரணம் வேலைவாய்ப்புகள் அரசால் திட்டமிட்டு உருவாக்கப்படவில்லை. இந்த உண்மையினை மறைத்து திறன்கள் இல்லாமை தான் காரணம் எனக்கூறி திறன்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் எட்டாம் வகுப்பிற்கு மேல் சேவை சார் தொழிற்கல்விக்கு (service) பரிந்துரைக்கிறது. இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலானோர் உயர்கல்விக்கு செல்லும் வாய்ப்பைத் தடுத்து அவர்களை கூலித் தொழிலாளர்களாக மாற்றும் அபாயம் உள்ளது.

Ø மாணவர்களின் கல்வித்தரம் குறைவாக இருப்பதற்கு பாடத்திட்டம், தேர்வுமுறை, ஆசிரியர், கட்டமைப்பு, நிர்வகித்தல், சமூகச்சூழல், வீட்டுச்சூழல் எனப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் கட்டாயத் தேர்ச்சி முறை தான் காரணம் என முன்வைக்கப்படுகிற அபாயம் உள்ளது.

Ø கல்வித்தரம் குறைவிற்கு ஆசிரியர்களே முக்கியக் காரணம் எனக் கருதி தகுதி / திறன் அடிப்படையில் பணி உயர்வு வழங்குதல் பரிந்துரைக்கப்படும் அபாயம் உள்ளது.

Ø கல்வியில் தரமில்லாததற்கு ஆசிரியர்களின் வருகையின்மையையும் காரணம் கூறி ஆசிரியர்களுக்கு ரேகைப் பதிவிடும் முறையை (Bio-Metric Attendance) அமுல்படுத்தும் அபாயம் உள்ளது..

Ø தாய்மொழிக் கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலவழிக்கல்விக்கு வித்திடும் அபாயம் உள்ளது..

Ø மும்மொழிக்கொள்கை தான் மத்திய அரசின் கொள்கை என அறிவிக்கிறது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டுவைக்கிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பு அபாயம் உள்ளது..

Ø சமூக அறிவியல், சூழல் அறிவியல் ஆகிய பாடங்கள் கைவிடப்பட்டு அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் அபாயம் உள்ளது..

Ø அறிவியலும் கணிதமும் கூட அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும் பிரச்சனைகளை அலசும் திறனை வளர்ப்பதற்குமான கல்வியாகப் பார்க்காமல் உற்பத்திக்கான கல்வியாக மட்டுமே அணுகும் அபாயம் உள்ளது..

Ø ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ), ராஷ்ட்ரிய சிக்சா அபியான் (ஆர்.எம்.எஸ்.ஏ) ஆகிய திட்டங்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல ஆயிரம் கோடி நிதி வெட்டப்பட்டுள்ளது. இச்சூழலில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பற்றியே பேசப்படவில்லை..

Ø கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம் குறித்து எதுவுமே இல்லை..

உயர்கல்வியில்….

Ø உயர்கல்வியில் மாணவர்கள் திறன் / தரம் இல்லாமைக்கு நிறுவனங்களின் நிர்வாகத் திறனின்மையே காரணம் என்பதை விவாதப் பொருளாக முன்வைப்பதன் மூலம் உயர்கல்வியில் உள்ள பிரதானப் பிரச்சனைகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது..

Ø ஒரு உயர்கல்வி நிறுவனம் எந்தப் பகுதியில் செயல்படுகிறது எந்த சமூக மாணவர்களுக்குக் கல்வி தருகிறது என்பதைக் கணக்கிடாமல் உயர்கல்வி நிறுவனங்களை கால இடைவெளியில் தேசிய தர மதிப்பிடுதல், அளவிடுதல் செய்து அதனடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்கிறது. தரம் பெற்ற கல்லூரிகள் அவர்களாகவே கட்டணம் நிர்ணயித்து வசூலித்துக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறது. இதனால் கிராமப்புறக் கல்லூரிகளும் கிராமப்புற மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது..

Ø உரிய கட்டமைப்புகள் இல்லாமலேயே உயர்கல்வியில் தரத்தை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் CBCS முறையை கட்டாயப்படுத்துகிற அபாயம் உள்ளது..

Ø ஒரே பாடத்திட்டம், ஒரே வகையான நிர்வாக முறை, தேசிய நுழைவுத் தேர்வுகள் மூலமாக மையப்படுத்தப்பட்ட உயர்கல்வி அமைப்பை உருவாக்கும் அபாயம் உள்ளது..

Ø மாணவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை என்ற கொள்கை கைவிடப்படும் என உறுதியாகக் கூறுகிறது. அதற்குப் பதிலாக தகுதி அடிப்படையில் உதவித்தொகை என்ற பரிந்துரையினை முன்வைப்பதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை மறுதளிக்கும் பேராபாயம் உள்ளது..

Ø உயர்கல்வி நிறுவனங்கள் முழுக்க முழுக்க தொழிற்கல்வி தரும் சமுதாயக் கல்லூரிகளாக மாற்றப்படும் அபாயம் உள்ளது..

Ø உயர்கல்வியில் பெண்களின் பங்கேற்பு குறைவு என்பதை வெறுமனே ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி அதற்கான காரணங்களைக் கேட்பதன் மூலம் உண்மையான அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளை மறைக்கின்ற அபாயம் உள்ளது..

Ø உயர்கல்விக்கான நிதி குறித்து எந்தவிதமான குறிப்பும் இல்லாதது, பிர்லா அம்பானி அறிக்கை பரிந்துரைத்த உயர்கல்வியை தனியார்மயமாக்குதல் கொள்கைக்கு ஒப்புதல் கொடுப்பது போல இருப்பதால் அரசு உயர்கல்வியில் இருந்து விலகும் அபாயம் உள்ளது..

Ø யு.ஜி.சி., மருத்துவக் கவுன்சில், தொழில்நுட்பக் கவுன்சில், NCVT ஆகிய அனைத்து அமைப்புகளையும் கலைத்துவிட்டு தேசிய கல்விக்கமிஷன் என்ற ஒற்றை அமைப்பை உருவாக்கும் அபாயம் உள்ளது..

Ø உயர்கல்வியில் இறக்கும் தருவாயில் உள்ள பல மொழிகளை காக்கும் முயற்சிகளை விடுத்து சமஸ்கிருதத்தை திணிக்கும் அபாயம் உள்ளது..

பொதுவாக…..

Ø தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான கல்வியை சமூக நீதியின் ஓர் அங்கமாகப் பார்க்காமல் விடுபட்டோர் பட்டியலாக முன்வைக்கிறது..

Ø ஆசிரியர்கள் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக நவீனத் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர் இல்லாமலேயே ஆன் லைன் படிப்புகள், திறந்தவெளிப் பலகலைக் கழகப் படிப்புகள் ஆகியவற்றிற்கு வழிவகுத்து முறைசாராக் கல்வியை ஊக்குவிக்கிறது..

Ø கார்ப்பரேட் கம்பெனிகளின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து அரசுப் பள்ளிகளை, உயர்கல்வியைப் பலப்படுத்தாமல் அரசு-தனியார் கூட்டு (PPP) என்ற பெயரிலும் தொழிற்சாலைகளுடன் இணைப்பு என்ற பெயரிலும் தனியாருக்கு தாரை வார்க்கும் அபாயம் அதிகமுள்ளது..

Ø இந்தியக் கல்வி முழுவதுமே அந்நிய முதலீட்டிற்கும், அந்நியப் பல்கலைக் கழகங்கள் / நிறுவனங்கள் நுழைவதற்கான பேராபயங்கள் உள்ளன..

Ø இந்தியக் கலாச்சாரம் என்ற பெயரில் உயர்கல்வியில் இந்தியவியல் (Indology) என்ற துறை துவங்குவதற்கான ஆலோசனைகளைக் கேட்டிருப்பது மறைமுகமாக வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், மனுஸ்மிருதி போன்ற இந்துத்வா கோட்பாடுகளை பயிற்றுவிப்பதற்கான துறையாக உருவாக்குவதற்கான அபாயம் இருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், உழைப்பாளிகள் ஆகியோரின் பன்முகக் கலாச்சாரங்களை அழிக்கும் வகையில் உயர் வகுப்பினரின் கலாச்சாரம் சார்ந்த இந்துத்வா ஒற்றைக் கலாச்சாரத்தை அமுல்படுத்தும் அபாயம் உள்ளது..

Ø மொத்தத்தில் கல்வி பற்றிய பார்வை, வரலாறு, ஆய்வு, புள்ளி விபரங்கள் எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மத்திய அரசின் தற்போதைய கொளகைகளுக்கு ஏற்பத் தயாரிக்க்கப்படும் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் கோரும் பேரபாயம் உள்ளது..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

Monday 14 September 2015

மாற்றுக் கல்வியின் பிதாமகன்

செப்.14: இன்று ஜான் ஹோல்ட் நினைவு தினம்


குழந்தைகளாக இருந்தபோது நாம் மிகவும் அதிருப் தியாக உணர்ந்த தருணங்கள் ‘நாம் நம்பிக்கைக்குரிய வர்களாக இல்லை’ என்று நமது பெற்றோரும் ஆசிரியர்களும் வெளிப்படுத்திய தருணங்கள்தாம். இதை நாம் மறுக்கப்போவதில்லை.

ஆனால் இன்று, நம் குழந்தைகளை நாம் நம்புகிறோமா என்ற கேள்வியை எழுப்பியவர் ஜான் ஹோல்ட். கற்றல், கற்பித்தல் தொடர்பாகப் புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்த அமெரிக்கக் கல்வியாளர். “குழந்தைகளை நம்புங்கள்” என்பதுதான் அவரது சிந்தனைகளின் அடிப்படை.

குழந்தைகள் ஏன் தோற்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் ‘பயம்’ என்று பதில் கூறுகிறார். குழந்தைகள் தேர்வில் தோல்வியடைவதற்கு மொத்தக் காரணமும் பள்ளிகள் என்கிறார். இதற்காகப் பல ஆண்டுகள் குழந்தைகளை அணுகி ஆய்வு செய்து ‘எவ்வாறு குழந்தைகள் தோற்கிறார்கள்?’ என்ற தனது முதல் புத்தகத்தை எழுதினார்.

கற்க விரும்பும் விலங்கு

‘எவ்வாறு குழந்தைகள் கற்கிறார்கள்?’ இது அவரது இரண்டாவது புத்தகம். அதில் “மனிதன் இயல்பாகவே கற்க விரும்பும் விலங்காவான், தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் விடப்பட்டால் அவனால் அதிகம் கல்வி கற்க முடியும்” என்கிறார். ஒரு குழந்தையைக் குழந்தை மனம் கொண்டவர்களாலேயே எளிதில் அணுக முடியும். கற்றல் என்பது குழந்தையின் மீது திணிக்கப்படும், ஏவப்படும் பணி அல்ல. அது குழந்தைகளின் மூச்சு என்கிறார்.

குழந்தைகளின் கற்றல் பள்ளி செல்வதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. அதாவது, மூன்று வயதுக்கு முன்பே குழந்தைகள் தாமாகவே கற்றலைத் தொடங்குகின்றன என்பதை ஏராளமான அனுபவங்கள் வழி நாட்குறிப்பாகத் தனது இரு புத்தகங்களில் எழுதிச் செல்கிறார்.

தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குழந்தைகள், தனது குழந்தைகளின் செயல்பாடுகளை நுட்பமாகக் கவனித்து ஆய்வு செய்து, தனது சிந்தனைகளை உருவாக்கினார். இதனை ஆசிரியராகத் தான் பணியாற்றிய பள்ளிகளில் எதிரொலிக்கச் செய்து நிறுவியது அவரது தனிச் சிறப்பாகும்.

இளமையில் கல்

“மூன்று முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைப் பருவத்தில்தான் அவர்களுடைய சிறந்த கற்றல் நிகழ்கிறது. வளரும் குழந்தைகளைவிட இந்த இளம் குழந்தைகளே சிறப்பாகக் கற்க முடியும். ஏனெனில், அவர்கள் தமது மூளையைத் தனிச் சிறப்பான முறையில் பயன்படுத்துகின்றனர்’’ என்று ஓர் உண்மையை, தனது குழந்தைகளின், மற்றவர்களது குழந்தைகளின் அனைத்து விதமான நுட்பமான கற்றல் முயற்சிகள், விளையாட்டுக்களை எல்லாம் தினசரி கூர்ந்து கவனித்துப் பதிவுசெய்திருக்கிறார் ஜான் ஹோல்ட்.

குழந்தைகளின் படைப்புத் திறனைத் தற்போதைய தேர்வு முறைகள் தடுப்பதாகக் கூறும் அவர், பெரிய 15 நிமிடங்களுக்கு ஒரு முறை தேர்வு நடப்பதாகக் குற்றம் சாட்டினார். அது மட்டுமல்லாமல், மிகப் பெரிய பள்ளிகள், நிறுவனங்களாக உயர்ந்து வணிக முத்திரை பெற்றுப் பல இடங்களில் தொடர் பள்ளிகளைத் தொடங்கும் கல்வி நிறுவனங்கள் ஆபத்தானவை என்பதையும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தார்.

அதே போல, குழந்தைகள்மீது பெற்றோர் செலுத்தும் அதிகாரத்துக்கு இரண்டே இரண்டு காரணங்கள் என்கிறார். (1) குழந்தைகளைவிட நாம் அதிக அனுபவங்களைக் கொண்டவர்கள் என்ற எண்ணம் (2) பொருளாதாரரீதியாகக் குழந்தைகள் நம்மைச் சார்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணம்.

அனைத்துக் குழந்தைகளுக்குமே கற்றல் ஆர்வமும் படைப்புத் திறனும் ஏறத்தாழ சமமாக இருக்கின்றன. அவர்களின் படைப்புத்திறனுக்கு ஊக்கம் அளிப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய செயல் என்கிறார். இதனை மிகவும் உன்னதமான அனுபவங்கள் மூலம் தனது வாழ்நாளிலேயே நிரூபித்து உலகின் கவனத்தை ஈர்த்தார். இதற்கென விளையாட்டுகள், சோதனைகள், பேசுதல், வாசித்தல், கலை, கணிதம் எனப் பன்முகக் குழந்தை ஆற்றல்களை இனம் கண்டு சோதனைகள் நடத்தி வெற்றி கண்டுள்ளார். குழந்தைகளைத் திட்டுவதையும் அடிப்பதையும் கடுமையாக வெறுத்தார். இதற்காகக் கடுமையாகப் போராடினார்.

“பள்ளிக்கூடங்களை எனது வாழ்நாளுக்குள் மாற்ற முடியாது என்றே தோன்றுகிறது. அவை இப்படியே இருப்பதைத்தான் அரசாங்கமும் சமூகமும் விரும்புகின்றன” என்று குறிப்பிட்டுப் பேசிய அடுத்த நாளே ஆசிரியர் பணியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அமெரிக்காவில் கல்வி எவ்வளவு கீழ்த்தரமாகவும், வன்கொடுமை நிறைந்ததாகவும் இருந்தது என்பதை அவரது நூல்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன.

கல்வியைக் குழந்தைகளின் விருப்பத்துக்கும் சுதந்திரத்துக்கும் விட்டுவிட அரசுகள் ஒருக்காலும் சம்மதிக்காது என்பதைக் கண்ட ஜான் கால்ட்வெல் ஹோல்ட், பள்ளிக்கே செல்லாமல் இருப்பதுதான் அதிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார்.

இவரது சிந்தனைகளுக்கு ஐரோப்பாவில் பெரும் மதிப்பு உருவானது. இங்கிலாந்தில் ஜான் ஹோல்டின் சுதந்திரமான கல்வி முறையிலும், பள்ளிக் குழந்தைகள் உரிமையிலும் நாட்டம் கொண்ட தேசியப் பள்ளிக் கட்டமைப்பு 1972-ம் ஆண்டு, உலகின் பள்ளி மாணவர் உரிமை கோரும் முதல் மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில், குழந்தைகள் உரிமை மீட்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்கள் உலகெங்கும் உள்ள கல்வி ஆர்வலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாநாட்டுத் தீர்மானங்கள் கீழ்க்கண்ட நான்கு முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்துத் தீர்வு காண வலியுறுத்தியது.

அடிப்பது தவறு

மாணவர்களை அடிப்பது குற்றமாக்கப்படவும் உணவு இடைவேளையோடு, இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை குறைந்தபட்சம் 15 நிமிடம் ஆசுவாசப்படுத்தும் இடைவேளை கோரியும், இடைவேளையின்போது பள்ளி வளாகத்தினுள் எங்கும் சுற்றித் திரியும் சுதந்திரம் வேண்டுமென்று வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பலனாகவே இன்று உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளைத் திட்டுவதும் அடிப்பதும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இன்றி வளர்தல்' என்ற இதழ் ஒன்றையும் வெளியிட்டு வந்தார். மேலும், வயலின் இசைக் கலைஞராகவும் இருந்த ஜான் ஹோல்ட், வயலின் இசைத் துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுவந்தார்.

ஜான் ஹோல்ட் 1923-ல் நியூயார்க் நகரில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றினார். போருக்குப் பின்னர் உலக அரசு இயக்கத்தின் பல பகுதிகளில் அவர் பணியாற்றி, இறுதியாக ஐக்கிய உலகக் கூட்டாட்சி என்ற அமைப்பின் நியூயார்க் கிளையின் நிர்வாக இயக்குநரானார். பின்னர், கொலராடோ மற்றும் மசாசூசெட்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், பிற்காலத்தில் ஹார்வர்டு கல்வியியல் பட்டப் படிப்புப் பள்ளியிலும், பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலையிலும் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றினார். வீட்டுக் கல்வி இயக்கத்தின் முக்கிய ஆதரவாளராகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், இதனை வலியுறுத்திப் பல்வேறு மாநிலங்களின் சட்ட மன்றங்களில் உரை நிகழ்த்தியுள்ளார். தமது குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்றுத் தரும் பெற்றோர்களுக்காக

‘நியூயார்க் ரெவ்யூ ஆஃப் புக்ஸ்', `புக் வீக்', லுக் அன்ட் பீஸ் நியூஸ்' போன்ற இதழ்களில் ஏராளமான கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதியுள்ளார்.

- அப்பணசாமி, எழுத்தாளர், பத்திரிகையாளர், தொடர்புக்கு: jeon08@gmail.com


Sunday 13 September 2015

ஊடகங்களின் பார்வையில் கல்வி : கலகக் குரல்களே மாற்றத்திற்கான விதைகளைத் தூவ முடியும்

கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி. வீரர்கள் ஒரு சிறுவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து அவையில் நிறுத்துவார்கள். பள்ளிக்கூடக் கூரை மீது தீ வைத்தான் என்பது குற்றச் சாட்டு. "படிக்க வேண்டிய வயதில் இந்த வேலையைச் செய்யலாமா ?" என்று கேட்பார் கர்ணன் (சிவாஜி கணேசன்). நான் தாய், தந்தை பெயர் அறியாதவனாம், அனாதையாம், எனக்கு படிப்பதற்கு அனுமதி இல்லையாம். அப்புறம் எதற்கு அந்தப் பள்ளிக்கூடம் என்று பொரிந்து தள்ளுவான் சிறுவன். மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய காட்சி அது. எல்லோருக்குமான கல்வி என இன்று பேசிக் கொண்டிருக்கிறோம். இன்று அல்ல என்றுமே அது எல்லோருக்குமானதாக இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. 


கல்வி குறித்த விவாதங்களை நமது ஊடகங்கள் நிகழ்த்தத்தான் செய்கின்றன. திரைப்படங்கள், நாடகங்கள், கதைகள், தொலைகாட்சி நிகழ்வுகள் என ஊடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில், ஒவ்வொரு கோணத்தில், ஒவ்வொரு விதத்தில் கல்வி குறித்துப் பேசவே செய்கின்றன. ஆசிரியர்-மாணவர் உறவு, கல்வித் திட்டம், வகுப்பறை நிகழ்வுகள், தேர்வுகள், மதிப்பெண்கள், மாணவர்களிடையே நிலவும் உறவுமுறை, அன்பு, போட்டி, பொறாமை, சண்டை, காதல், வன்முறை என எத்தனையோ அம்சங்களை நாம் செய்திகளில் கேட்கிறோம், படங்களில் பார்க்கிறோம், எழுத்துக்களில் வாசிக்கிறோம். 


அடிப்படையில் கல்வி குறித்தே கேள்விகள் எழுப்பும் வேலையை சமூக எண்ணங்களின் பிரதிபலிப்பாகக் கதைகள் பேசி இருக்கின்றன. கல்லாமை எப்போதும் இகழப்பட்டே வந்திருக்கிறது. கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார் என்றார் வள்ளுவர். ஆனால் ஒருவர் என் படிக்கவில்லை என்பதற்கான கேள்வியை எழுப்பாமல் படிக்காதவர்களை நாம் விமர்சிக்கிறோம். இந்தக் கதையைச் சற்று வாசியுங்கள்:


படித்திருந்தால் என்ன ஆகி இருப்பாய்?


சோமர்செட் மாம் என்னும் அருமையான படைப்பாளியின் "வெர்ஜர்' என்னும் கதையின் நாயகன், ஒரு தேவாலய ஊழியன். பல்லாண்டுக் காலம் அர்ப்பணிப்போடு உழைப்பவனை, புதிய பாதிரி வேறு விதமாகப் பார்க்கிறார். எழுதப் படிக்கத் தெரியாதவனை வேலைக்கு வைத்திருப்பது சாத்தியமில்லை, விரைந்து படித்துத் தெரிந்து கொண்டு வா அல்லது வேறு வேலை தேடு என்று நேரடியாகச் சொல்லிவிடுகிறார். அந்த வயதில் பாடசாலைக்குச் செல்வதை அவன் சிந்திக்க முடிவதில்லை. திடுதிப்பென்று சந்திக்கு வந்துவிட்ட வாழ்க்கையின் அதிர்ச்சி அவனைக் கலைத்துப் போடுகிறது. உளைச்சலை புகை உறிஞ்சி சமாளிக்க ஒரு நெடுவீதியில் கடை கடையாய்ச் சென்று கேட்டும், எங்கும் ஒற்றை சிகரெட் கிடைப்பதில்லை. யாரும் விற்பதில்லை. பளிச்சென்று பொறி தட்டுகிறது. வேலையை உதறித் தள்ளிவிட்டு நகர நெடுஞ்சாலையில் ஒரு சிகரெட் கடை தொடங்குகிறார்.


அமோக விற்பனை. இரண்டரை ஆண்டுகளில் நகரின் மிகப் பெரிய புகையிலை விநியோகிப்பாளர். பெரும் பணக்காரர். வங்கியில் பண படடுவாடாவிற்குச் செல்கையில், மேலாளர் அவரை அழைத்து, பெரிய தொகையை வைப்பு நிதியாக மாற்றிப் போட அறிவுறுத்துகிறார். இவரோ நீங்களே காகிதங்களைத் தயார் செய்துவிடுங்கள், நான் கை நாட்டு போட்டுவிடுகிறேன் என்கிறார். மேலாளர் வாயடைத்துப் போகிறார். எழுதப் படிக்கத் தெரியாமலா இத்தனை வெற்றிகரமான வியாபாரியாக வளர்ந்திருக்கிறீர்கள்! ஒருவேளை நாலு எழுத்துப் படித்திருந்தால் என்னவாக ஆகி இருப்பீர்கள் என்று வியப்போடு கேட்கிறார். "தேவாலயத்தில் மணியடித்துக் கொண்டிருந்திருப்பேன்" என்று அசராமல் பதில் வருகிறது அந்த முன்னாள் தேவாலய ஊழியரிடமிருந்து. அப்படியானால் கல்வி என்பது என்ன? படிப்பு என்பதென்ன? இந்தச் சிறுகதை எழுப்புகிறது அல்லவா பல கேள்விகளை?


உன் ஆயுளில் எத்தனை காலம் வீண்?


ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னதாகக் கூறப்படும் மிகவும் புகழ் வாய்ந்த ஒரு கதையில், ஆற்றில் படகில் பயணம் செய்யும் பெரிய பண்டிதர் ஒருவர், ஒடக்காரரிடம் நீ இராமாயணம் படித்திருக்கிறாயா என்று கேட்கிறார். ஓடக்காரர் இல்லை என்று சொல்லவும், உன் ஆயுளில் கால் பங்கு வீணாயிற்று, மகாபாரதமாவது தெரியுமா என்று கேட்கிறார் மீண்டும். இல்லை என்கிறார் ஓடக்காரர். அப்படியானால் உன் ஆயுட்காலத்தில் பாதியும் வீண் என்கிறார் இவர். இப்படியான உரையாடலின் ஒரு கட்டத்தில், ஆற்றில் வெள்ளம் வந்துவிடுகிறது. ஓடம் மூழ்க இருக்கிறது. இப்போது ஓடக்காரர் பண்டிதரைப் பார்த்து வினவுகிறார், "சாமீ உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" என்று. அவரோ அய்யய்யோ தெரியாதே என்கிறார். அடடா...உங்கள் ஆயுள் பூராவும் வீணாய்ப் போச்சே' என்று சொல்லிவிட்டுக் குதித்துவிடுகிறார் ஓடக்காரர். இப்போது சொல்லுங்கள், எது கல்வி, எது படிப்பு?


எல்லோர்க்கும் இல்லையா கல்வி ?


குறிப்பிட்ட சாராரைத் தவிர மற்றோருக்கு கல்வி மறுக்கப்பட்ட கதை இன்றும் தொடர்கிறது. நிலவுடைமை சமூகத்தின் சாதிய படிநிலை நவீன காலத்திலும் உடைய மறுப்பதன் பிரதிபலிப்புகள் கல்வியில் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இன ரீதியிலான ஒடுக்குமுறைக்கு ஆளான கறுப்பின மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதைப் பேசும் ஒரு நூல், கமலாலயன் அவர்களால் தமிழில் அற்புதமாகச் சொல்லப்பட்ட "உனக்குப் படிக்கத் தெரியாது" (வாசல் வெளியீடு). மேரி பெத்யூன், சிறு வயதில் அண்டை வீட்டில் உள்ள வெள்ளைக்காரச் சிறுமியால் உனக்குப் படிக்கத் தெரியாது என்று அவமதிப்புக்கு உள்ளாவதில் தொடங்கும் நூல், அந்தத் தாக்கத்தில் அவர் எப்படி பெரிய கல்வியாளராக வளர்ந்து கறுப்பின மக்களுக்கான பெரிய பல்கலைக் கழகத்தையும், மருத்துவமனையையும் எழுப்பினார் என்பதை ஒரு சாகசமிக்க நாவலைப் போல் பேசிச் செல்கிறது.தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திலும், சாதி ஒழிப்பு நோக்கத்திலும் செயல்படும் நமது பண்பாட்டுக் களத்தில் இந்த வாசிப்பு நம்மை மேலும் உறுதி பெறச் செய்கிறது.


"பள்ளிக்கூடம்" திரைப்படத்தில் "நீ எல்லாம் எதுக்குப் படிக்க வர்ற..." என்று மாணவன் ஒருவன் ஏசப்படும் காட்சியில்தான் படம் மீண்டும் வந்து நின்று நிறைவுறும். ச தமிழ்ச்செல்வன் அவர்களது சிறுகதையில் வரும் நடராஜன் என்ற மாணவர், கணக்கு தேர்வில் எதுவும் தெரியாததால், "...நான் வைத்துக் கொண்டு வஞ்சகம் செய்யவில்லை..இதில் தன் குற்றம் எதுவுமில்லை..." என்று கடிதம் எழுதி வைப்பார். பின்னர் ஆசிரியர் என்னிடம் டியூஷனுக்கு வா என்று உத்தரவிடுவார். வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்யுமிடத்தில், விறகு தரிக்கக் கூடத் தெரியாத ஆசிரியரை, "பார்த்து சார், அரிவாள் வெட்டிப்புடும் " என்று கிண்டல் செய்வான் நடராஜன். 


கல்வி முறையைக் கேள்விக்கு உட்படுத்தும், "எங்களை ஏன் டீச்சர் ஃபெயிலாக்கினீங்க?" என்ற புத்தகம் (ஷாஜஹான் அவர்களது அருமையான மொழிபெயர்ப்பில்), தங்களுக்குத் தெரிந்த மலைத்தோட்ட வேலைகளை ஆசிரியை செய்ய முடியுமா என்று கேட்கும் மாணவர்களை அறிமுகப் படுத்துகிறது. கல்வியின் அளவுகோல் என்ன, முதல் தலைமுறை மாணவர்களை ஒரு பள்ளி எப்படி நடத்த வேண்டும், ஆசிரியர் அதிகாரப் புள்ளியாக ஏன் இருக்கக் கூடாது என்பனவற்றைப் பேசும் படங்கள் சில வந்திருக்கின்றன. 


நேர்மறை அணுகுமுறைகள் :

"டு சார் வித் லவ்" திரைப்படம் குறித்த டாக்டர் ஆர் கார்த்திகேயன் கட்டுரை (தி இந்து தமிழ்: ஜனவரி 23, 2015), இப்படி ஆரம்பிக்கிறது:

ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் குரலை இலக்கியம் வழியே ஒலிக்கச் செய்த கயானா தேசத்தின் நாவலாசிரியர் ஈ.ஆர். பிரைய்த் வைட். இவர் 1959-ல் எழுதிய நாவல் 1967-ல் திரைப்படமாக வெளிவந்து வெற்றி கண்டது. ‘டு சார் வித்லவ்’ ஒரு சுயசரிதையும் கூட.

இரண்டாம் உலகப் போர் முடிந்து ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டத்தில் பொறியாளரான பிரெய்த் வைட்டுக்குப் பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க உடனடியாக ஒரு வேலை தேவைப்படுகிறது. அதனால் குப்பத்துக் குழந்தைகள் அதிகம் படிக்கும் ஒரு பள்ளிக்கு ஆசிரியராக விண்ணப்பிக்கிறார். ஒரு தற்காலிக வேலைக்கு ஆசிரியர் பயிற்சி பெறாத ஒரு பொறியாளர் சேரும்போது ஏற்படும் அனைத்து எதிர்ப்புகளையும் எதிர்கொள்கிறார்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமில்லை. ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பதில்லை. பெற்றோர்களுக்குக் கல்வி பற்றிப் பெரிய விழிப்புணர்வில்லை. சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களிடம் உள்ள தீய பழக்கங்களும் அந்தப் பிள்ளைகளிடம் இருந்தன. பள்ளி முதல்வருக்கு நல்ல எண்ணம் இருந்தும் பெரும் நம்பிக்கை இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் பிரைய்த் வைட் வேலைக்குச் சேர்கிறார்.

சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஆசிரியர் ஒருவரின் கதை அது.

குஜராத்தி எழுத்தாளர் கிஜுபாய் பகேக எழுதிய "பகல் கனவு" என்னும் அற்புதமான நூல்,ஆசிரிய பயிற்சி மையங்களில் பாட திட்டத்தில் சேர்க்கப்படவேண்டியது. குழந்தைகளை அவர்களது ஆரவார, உல்லாசக் கொண்டாட்ட உளவியல் தளத்தில் ரசனையோடு பயணம் செய்தபடியே கல்வி கற்க வைக்க முடியும் என்பதன் நடைமுறை சாத்திய காட்சி நிரூபணம் இந்த புத்தகம். 

"குட் பை மிஸ்டர் சிப்ஸ்" என்ற அருமையான நாவல், மீண்டும் மீண்டும் திரைப்படமாக ஆக்கம் கண்டிருப்பது. அதைத் தமிழாக்கம் செய்யாமல், மிகச் சுருக்கமாக ஆனால் அற்புதமாகத் தமது வாசிப்பு அனுபவமாக பேரா ச மாடசாமி வழங்கி இருக்கும் நூல் "போயிட்டு வாங்க சார்"! ஆசிரியர்களும், மாணவர்களும் ஒரு சேரக் கொண்டாட வேண்டிய நூல்களில் ஒன்று! மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரியராக வாழ்ந்த சிப்ஸின் கதையே இந்நூல். “சிப்ஸ் திறமைசாலி இல்லை .அக்கறை உள்ளவர். திறமை கொண்டவர்கள் மேடைகளிலும் பொறுப்புகளிலும் அமரும்போது அக்கறை உள்ளவர்கள் பிறர் மனங்களில் அமர்கிறார்கள் . அப்படி அமர்ந்திருப்பது சில நேரங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை ” 

டு சார் வித் லவ் படத்தைப் போலவே தமிழிலும் வந்திருக்கும் :"நம்மவர்", "சாட்டை" திரைப்படங்களை டாக்டர் ஆர் கார்த்திகேயன் குறிப்பிடுகிறார். எத்தனை எதிரான சூழலிலும் ஆக்கபூர்வமான முயற்சிகளை இடையறாது மேற்கொள்வோர் ஆசிரியராக அமைவது ஒரு சமூகத்திற்கு வாய்க்கும் கொடை. தி ஜானகிராமன் அவர்களது "முள்முடி" சிறுகதையில் பணி நிறைவு அன்று கொண்டாட்டமாக புகழப்பட்டு ஊரே திரண்டு வந்து வழியனுப்ப வீடு வந்து சேர்ந்த ஓர் ஆசிரியரிடம், எப்போதோ ஒரு தவறு செய்த மாணவனோடு யாரும் பேசக் கூடாது என்று அவர் தண்டித்ததை நினைவு கூறும் ஒரு மாணவன், சார் நீங்க அவனை மன்னிக்கணும், அந்தத் தடையை விலக்கணும் என்று கோரிக்கை வைக்கும்போது கூனிக் குறுகிப் போகும் இடம் அதிர வைப்பது. தனது சொல்லுக்கு இத்தனை தாக்கமா, தண்டிக்கவே செய்யாத வாத்தி என்று எடுத்த பெயர் உண்மையில் தனக்குத் தகுமா என்று உறைந்து போகிறார். தண்டனைகளுக்குக் குறைவா நமது மண்ணில்?


எதிர்மறையில் அணுகி விமர்சனங்களை வைத்தவை 


அண்மையில் கல்வி பிரச்சனை குறித்து மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. "டோனி " திரைப்படம் விளையாட்டில் தன்னை நிரூபிக்கும் மகனை, பள்ளிக்கூட அளவுகோலின் வழியே தானும் பார்த்து அடித்து நொறுக்கி உடலையும், உள்ளத்தையும் காயப்படுத்தும் தந்தை குறித்தது மட்டுமல்ல, நமது கல்வி முறை மீது காட்டமான சில விமர்சனங்களை எழுப்பிய படம் அது. "தாரே ஜமீன் பர்" இந்தி திரைப்படம், மெதுவாகக் கற்பவர்கள் (Slow Learners ) குறித்தது. பள்ளியில் அந்தச் சிறுவன் திரும்பத் திரும்ப இழிவுக்கு உள்ளாவது, தந்தையிடம் அவமதிப்படைவது போன்றவற்றை, பின்னர் தகுந்த ஆசிரியர் தலையீடு எப்படி மாற்றி அமைக்கிறது என்று எடுத்துச் சொன்ன படம். தங்க மீன்கள் திரைப்படம் குழந்தைகளின் உளவியலைக் குறித்த செய்திகளை, தந்தை-மகள் உறவு குறித்த நுட்பமான விஷயங்களைப் பேசியது. கல்வி குறித்த காத்திரமான கேள்விகளை எழுப்பியது. 


மாலனின் "தப்புக் கணக்கு" எனும் அருமையான சிறுகதையை, மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா சிறப்பான குறும்படமாக வழங்கி இருந்தார். ஓர் எளிய கணக்கு ஒன்றிற்கு கணக்கு ஆசிரியை மதிப்பெண் தராததைக் குறித்த விவாதமாக எழும்பும் கதை, இறுதியில் பெண் குழந்தை மாற்றி சிந்திக்கக் கூடாது, சொன்னதைத் தான் செய்யவேண்டும், எதிர்காலத்தில் சிக்கலாகிவிடும் என்ற போதனையை முன்வைக்கும் சமூகத்தை (தகப்பன் பாத்திரம் மூலம்) அடையாளப்படுத்தி முடிகிற இடத்தில் பார்வையாளர்களை மிகப் பெரிய சலனத்திற்கு உட்படுத்துகிறது.


பள்ளிக்கூடத்தின் ஒழுக்க விதிகள் 


கடந்த ஆண்டு ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பேச்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பள்ளி ஒன்றில் அந்த நேரத்தில் சிறுநீர் கழிக்க அனுமதி கேட்ட மாணவர் ஒருவரை ஆசிரியை மிரட்டி உட்கார வைத்த செய்தியை தி ஹிந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்தது. பழ புகழேந்தி கவிதை ஒன்றில், இப்படி "அனுமதி கேட்டு அடுத்தடுத்து உயரும் விரல்களை மறுத்து உட்காரச் செய்ததும் சற்று நேரத்தில் வகுப்பறை முழுக்க நாற்றம் எடுத்தது என் அதிகாரம்" என்று வரும். அதிகாரம் பெருமை மிக்கது என்று நினைப்போர்க்குச் சாட்டை அடி இந்தக் கவிதை. 


தனது தலைமை ஆசிரியர் பணியின் அனுபவங்களைப் பேசுகையில், கல்வியாளர் ச சீ இராசகோபாலன் அவர்கள், மாணவர்க்கான நடத்தை விதிகளை பேரவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர் அமைப்பிடமே வழங்கியதாகவும், வழக்கமாக ஆசிரியர்கள் உருவாக்கும் எதிர்மறை வாசகங்களுக்கு உற்சாக மாற்றாக நேர்மறை வாக்கியங்களில் விதிகள் கட்டமைக்கப் பட்டிருந்ததாம். அதாவது, தாமதமாக வந்தால் இத்தனை ரூபாய் அபராதம் என்று எழுதுவதற்குப் பதிலாக, நாம் அன்றாடம் பள்ளிக்கூடத்திற்கு உரிய நேரத்தில் வந்து விடுவோம். வகுப்புகளில் முழுமையாகப் பங்கேற்போம் என்பது போன்ற விதிமுறைகள். அதுமட்டுமல்ல, பள்ளிக்கு வெளியேயும் கூட பொதுவெளியில் தங்களை எப்படி நடத்திக் கொள்வோம் என்றும் மாணவர் எழுதி வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதையும், இது தாங்கள் உருவாக்கிய விதிமுறைகள், இவற்றை நடைமுறையில் அனுசரித்து நிரூபிப்பதே நம்மைப் பெருமிதம் கொள்ளவைக்கும் என்று மாணவர் தலைவர் கூட்டத்தில் பேசியதையும் ச சீ இரா அவர்கள் தமது கண்கள் மின்னச் சொல்வார். 


பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததற்கு அரை மணி நேரம் தண்டனை வழங்கும் எந்தப் பள்ளியும் மாணவர் கற்க வேண்டும் என்பதை விரும்புவதாகச் சொல்லிக் கொள்ள முடியாது. அர்த்தமற்ற ஒரு பிழைக்காக, ஷானுகான் என்ற சிறுமியை தில்லி பள்ளி ஆசிரியை வெயிலில் நிறுத்தி முதுகின்மேல் செங்கற்களை வேறு அடுக்கி, கோழி மாதிரி கோணிக் குறுகி நிற்குமாறு செய்த சம்பவத்தில், கடுமையாக உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி அடுத்த நாள் மாண்டுவிட்டாள். பாடம் நடத்தும்போது கவனிக்கவில்லை என்பதற்காக ஒன்பது வயது சுடலி மீது ஆசிரியர் தம்ளர் எறிந்த திருநெல்வேலி சம்பவத்தில், சுடலிக்கு நிரந்தரமாக பார்வை பறிபோய் விட்டது. திருச்சி மணப்பாறையில் ஸ்ரீ ரோகிணி என்ற குழந்தையின் தலையில் பிரம்பால் ஆசிரியை அடித்ததில் அந்தக் குழந்தை இப்போது உயிருடன் இல்லை. அத்தோடு அந்தக் கொடுமை முடியவில்லை. பள்ளியில் இறந்த குழந்தையின் உடல், மூன்று நாள் கழித்து அருகிலுள்ள குளத்தில் மிதந்தது.


இந்தச் செய்திகளைப் பேசும் நாளிதழ்கள், தொலைகாட்சி செய்திகள், பள்ளிக்கூட வளாகத்துள் இன்றும் தொடரும் வன்முறை குறித்த விவாதங்களை ஊக்குவிக்கின்றன. 


தேர்வுகளில் 'காப்பி' அடிப்பது குறித்த அண்மைக்கால அதிர்ச்சி அனுபவத்தைத் தொலைகாட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் நாடு முழுவதும் அறியச் செய்தன. 'ஸ்பைடர்மேன்' மாதிரி மாணவர்களுடைய தகப்பன், தாய்மாமன், சித்தப்பன் மற்றும் உறவினர்கள் எல்லாம் கட்டிடத்தின் மீது ஏறி சன்னல் வழியே பதில் எழுதிக் கொடுத்து 'உதவி' செய்த கொடுமையான காட்சி வேதனைக்குரியது. தேர்வுகளைப் பற்றி எழுதுகையில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இப்படி குறிப்பிட்டிருந்தார்: "நான் எனது அறிவை நிரூபிக்கத் தேர்வு எழுதச் சென்றேன். அவர்களோ என் அறியாமையை நிரூபிப்பதிலேயே குறியாயிருந்தனர்"


தேர்வில் காப்பி அடிப்பதை, கல்வியாளர் ச சீ இரா எதிர்கொண்ட விதம் அபாரமானது. அவர் மாணவர்களிடையே வெள்ளை மனத்தோடு உள்ளம் திறந்து பேசினார். அவர்கள் சரியாகத் தேர்வு எழுதாது போனால், தங்களது கற்பித்தலில் உள்ள குறைபாடுகளைப் போக்கிக் கொண்டு மேலும் சிரத்தை எடுத்து கற்பிப்போம், காப்பி அடித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கி விட்டால், ஆசிரியர்கள் திருந்த வாய்ப்பின்றி அப்படியே நடத்திக் கொண்டிருப்போம் என்று சொன்னாராம். தேர்வு என்பது மாணவர்களுக்கு அல்ல, கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களைப் பற்றி அறிந்து கொள்ள வைக்கும் தேர்வுதான் என்று விளக்கினார். 


பாடம் நடத்துவதில் மேற்கொள்ளாத சுவாரசியமான செயல்பாடுகளை, தேர்வு நேரத்தில் மேற்கொள்ளும் மிரட்டல் முறையால் எப்படி நேர் செய்வது? தேர்வு நேரத்திலும், தேர்வு முடிவுகள் வரும் நேரத்திலும் நிகழும் தற்கொலைகள் நமது கல்வி அமைப்பின் மோசமான பிரதிபலிப்பு அல்லவா? தற்கொலை செய்தியை வெளியிட நேரும் ஒவ்வொருமுறையும், அதன் கீழே மறவாமல் தற்கொலை தடுக்க ஆலோசனை நல்கும் தன்னார்வ அமைப்பு (சினேகா) ஒன்றின் தொடர்பு எண்ணை தி இந்து ஆங்கில நாளேடு பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. ஊடகங்களின் பொறுப்புணர்வுச் செய்கை அது.



த்ரீ இடியட்ஸ் என்று இந்தியிலும், நண்பன் என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்த திரைப்படம், கல்லூரிக் கல்வியை பின்புலமாகக் கொண்டு இன்றைய கல்வி முறை, புரியாமல் உருப்போடும் தன்மை உள்பட பலவேறு அம்சங்களை நையாண்டி விமர்சனமாக வைத்தது. கலகக் குரல் எழுப்பும் மாணவர் முதல் மதிப்பெண் பெறுபவராகவும் இருக்க முடியும், படிப்பிற்கும் அடிமைத் தனத்திற்கும் நேர்விகிதத் தொடர்பு ஒன்றும் கிடையாது என்று பேசியது அந்தப் படம். 


சாதியத்திலிருந்து விடுபடாத கல்வி 


"கவர்மெண்ட் பிராம்மணன்" என்ற தலைப்பிலான தமது சுயசரிதை நூலில், கன்னட எழுத்தாளர், மைசூர் பல்கலை விரிவுரையாளர் அரவிந்த மாளகத்தி (அருமையான தமிழில்: பாவண்ணன்) ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவிலிருந்து படிக்க வரும் பிள்ளைகள் சந்திக்கும் இழிவுகளைச் சம்மட்டி அடியாகப் பதிவு செய்திருந்தார். ,மறுநாள் வகுப்பைப் பெருக்க வேண்டியவன் மாளகத்தி என்று எழுதிப் போட்டிருப்பார் ஆசிரியர். மறுக்கும்போது வகுப்பறைக்குள் கட்டி வைத்து அடிப்பார். மதுரையில் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த மாணவியை, கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் குறித்து நாம் மிக அண்மையில்தான் வாசித்தோம். பாண்டியக் கண்ணனின் "மழைப்பாறை" நாவலில் அருந்ததியர் சமூகத்துப் பிள்ளைகளை ஆசிரியைகள் எப்படி கழிப்பறை சுத்தம் செய்யவும், தங்களது வட்டித் தொகை வசூல் செய்யவும் ஏவிக் கொண்டிருந்தனர் என்பது வேதனையோடு சொல்லப்பட்டிருக்கும். படிக்க விரும்பும் அவர்களுக்கு போதிக்க விருப்பமற்ற சூழல். தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியுடே மகன் நாவல், தமிழில் சுந்தரம் ராமசாமி மொழிபெயர்ப்பில் தோட்டியின் மகன் என்று வந்தது. கல்விச் சாலையிலிருந்து விரட்டப்படும் தலைமுறையைப் பேசும் முக்கிய நாவல் அது. 


இயக்குநர் ஞானராஜசேகரன் (பாரதி, பெரியார், ராமானுஜம் படங்களை எடுத்தவர்) வழங்கிய "ஒரு கண் இரு பார்வை" என்னும் குறும்படம், சேலம் மாவட்டப் பள்ளி ஒன்றில் பொதுவான பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தமைக்காக அடிபட்டுக் கண் பார்வை பறிகொடுக்க நேர்ந்த தலித் மாணவி தனம் பற்றிய உண்மை நிகழ்வை சமூகத்திற்குச் சொன்னது. அண்மையில் கூடமத்திய பிரதேசத்தில் சிற்றூர் ஒன்றில், உயர் சாதியைச் சார்ந்த ஒருவர் மேல் தனது நிழல் விழுந்த "தீண்டாமைக்" குற்றத்திற்காக, தாழ்த்தப்பட்ட சாதி மாணவியை ஆதிக்க சாதி பெண்மணிகள் அடித்து நொறுக்கிய செய்தி பத்திரிகையில் வந்திருந்தது. 


காஞ்சிபுரம் சங்கர மடம் நடத்திவரும் சங்கரா பலகலைக் கழகத்தில் தலித் மாணவர்கள் பொது உணவிடத்தில் உண்ண முடியாதது உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை பத்திரிகைகள் அம்பலப் படுத்தின. ஆனாலும் இன்னமும் ஊடக விவாதங்களில் சாதிய ஆதிக்கப் பேச்சு, அடிப்படை காரணங்களை விவாதிக்கும் மேடை அத்தனை காத்திரமாக உருவாகவில்லை. மேலோட்டமான கருத்துக்கள். ஒருதலைப் பட்சமான எண்ணங்கள் போன்றவை பொது புத்தியில் ஏற்றப்படுவது மாற்றத்தைக் கொண்டுவர உதவாது. 


வணிக மயமான கல்வி 


கடந்த காலங்களில் தனிப்பட்ட கல்வி என்று சொல்லப்படும் டியூஷன் வகுப்புகளுக்குச் செல்பவர்கள் தலைமறைவாக, யாருக்கும் தெரியாமல் போய்க் கற்று வருவார்கள். இப்போதோ, ஆரம்பத்திலிருந்தே டியூஷன் அனுப்புவதே பெருமை என்றாக்கப்பட்டு விட்டது. 



தங்களிடமிருந்து பிரிய நேர்ந்தாலும் பரவாயில்லை என்று போர்டிங் ஸ்கூல் எனப்படும் தங்கிப் படிக்க வேண்டிய பள்ளிகளுக்குத் தொலைதூரம் அனுப்புகின்றனர் பெற்றோர். கோழிப்பண்ணை போல் நடத்தப்படும் இந்தப் பள்ளிகளில் உருப்போட வைத்து, நேரம் காலமின்றி படிப்பு படிப்பு என்று அலற வைக்கின்றனர். எழுத்தாளர் பெருமாள் முருகனை அவரது மாதொருபாகன் நாவலுக்காக குறி வைத்ததைவிடவும் முக்கிய காரணம், நாமக்கல்லை மையமாக வைத்து இத்தகு பள்ளிகளில் என்னென்ன மோசடிகள் நடக்கின்றன என்பதை அவர் காலச் சுவடு இதழில் சில ஆண்டுகளுக்குமுன் நிறுவி இருந்ததுதான். 


பிளஸ் 2 அளவிலேயே சில லட்சங்களைக் கொட்டி அழ பெற்றோர் துணிவதன் பின்னணி எதிர்காலத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு அதிகம் செலவழிக்க வேண்டாதவண்ணம் அவர்கள் அதிக மதிப்பெண்களைக் குவிப்பார்கள் என்ற நம்பிக்கை தான். இந்தக் கல்வித் தொழிற்சாலைகளில் பயிலும் பிள்ளைகள் எத்தனை உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர் என்பதை நீயா நானா என்பது போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஓரளவு மக்கள் மன்றத்தில் பேச வைத்தன. மன நல மருத்துவர் எஸ் மோகன்ராஜ், இப்படி கொடூர முறையில் படித்த மாணவர்கள் சிலர் எப்படியாவது வாசித்தவற்றை மறக்க சிகிச்சை கேட்டு தன்னை வந்து சந்தித்த நெருக்கடியான விஷயங்களை ஒரு முறை தி இந்து ஆங்கில நாளிதழில் சொல்லி இருந்தார். 


இரா நடராசன் அவரகளது ரோஜா நாவல், எந்திர கதியில் பிள்ளையை வளர்க்கும் பெற்றோர், கல்விச் சாலை, ஆசிரியர்கள் என நிறைய செய்திகளைப் பேசும். இன்றைய பெற்றோர் உளவியல், சலவை எந்திரத்திடம் மொத்தமாக துணி துவைத்தலை விட்டுவிட்ட தன்மையில், காசை எடுத்து வீசிவிட்டால் பள்ளிக்கூடத்தின் பொறுப்பில் குழந்தைகள் கல்வி கற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்க வைக்கிறது. பள்ளிக்கூடம் என்பதே சமூகவய அனுபவம் தருமிடம். அங்கே அதன் தன்மைகள் எவ்வண்ணம் இருக்கின்றன, அவற்றில் தேவையான மாற்றங்கள் என்ன என்பதை விவாதிக்க வேண்டிய தருணம் இது. பின்னர் புத்தகம் பேசுது இதழுக்கான நேர்காணலில், இரா நடராசன் சொன்னது, "எனது ஆயிஷா நாவல் ஓர் ஆசிரியரின் சுயவிமர்சனம். ரோஜா, ஒரு தந்தையினுடையது". மிகவும் நுட்பமான இந்தக் கருத்து ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் இரு முக்கிய முனைகளை அடையாளப்படுத்துகிறது.


சமூகவியல், வரலாறு, இலக்கியம், பொருளாதாரம் போன்ற துறைகளை விடவும், காசு அதிகம் கொட்டும் என்ற அதீத எதிர்பார்ப்போடு பொறியியல், மருத்துவம் நோக்கியே பெற்றோர் கவனம் திருப்பப்பட்டது. 1991ல் தொடங்கிய உலகமயம், தாராளமயம், தனியார்மயம் உள்ளடக்கிய பொருளாதாரச் சிந்தனை மாற்றம் இதற்கு முக்கிய காரணம். இப்போது உலகளாவிய பொருளாதார சிக்கல்கள், பொறியியலைக் கை விட்டு வேறு துறைகளை நாட வைக்கிறது. பணத்திற்காக என்னவும் செய்யலாம் என்ற புதிய தர்க்கம், இந்த உலகமய காலத்தின் சாபமாகும். அதனால் எவ்வளவு காசு கொடுத்தாவது கல்வி பெறலாம் என்பதும் நியாயமாக்கப்பட்டுவிட்டது. இப்படி சம்மதங்களை உற்பத்தி செய்வதை (Manufacturing the Consent) சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி தொடர்ந்து சொல்லிவருகிறார்.


ஊடக தருமம், வர்க்க விசுவாசம் 


பிரச்சனைகள் பெரிதாக வெடித்தால் மட்டுமே பேசும் ஊடகங்கள், அப்போதும் அவற்றின் அடிப்படை காரணிகளை விளக்க அதிகம் சிரமம் எடுத்துக் கொள்வதில்லை. அரசுப் பள்ளிகளின் கோளாறுகளை விரிவாக விவாதிக்கும் ஊடகங்கள் பலவும் தனியார் பள்ளிகள் குறித்த விமர்சனங்களை வைப்பதில்லை. கட்டணக் கொள்ளை பற்றி பெரிதாக செய்திகளே வருவதில்லை.அடிப்படை விஷயங்களை மாறாது பார்த்துக் கொள்வதில் முதலாளித்துவ ஊடகங்களுக்கு எச்சரிக்கை இருக்கிறது. எனவே அவை எத்தனை பேசினாலும், அடுத்தடுத்த பரபரப்புக்கு நகர்ந்து கொண்டிருக்கும் இன்றைய ஊடகங்களில் மாற்றங்களை அழுத்தமுற வைக்க சமூக சிந்தனையாளர்கள் அரும்பாடு எடுக்க வேண்டி இருக்கிறது. 


நவீன வருணாசிரமம் பணத்தை அடிப்படையாக வைக்கிறது. பணமற்றோர்க்கு இவ்வுலகம் கிடையாது என்று இப்போதும் பேசப்படுகிறது. எனவே தான் சந்தைப் பொருளாதாரத்தை முன்னுரிமை தந்து கவனிக்கும் யாருக்கும் ஆரோக்கியமான மாற்றங்கள் செய்ய ஆர்வம் இருப்பதில்லை.கலகக் குரல் எழும்பும் இடத்திலே தான் மாற்றங்களுக்கு விதை போட முடிகிறது. 


1987ல் சென்னையில் நடைபெற்ற இந்திய ஜனநாய






க வாலிபர் சங்க மாநாட்டில் உரையாற்றுகையில், மார்க்சிய சிந்தனையாளர் பி டி இரணதிவே சொன்னார்: கலகக்காரனாயிரு...எதையும் கேள்வி கேள்....மாற்றத்தை உருவாக்கு. 


அப்படியானால் மாற்றுக் கல்வி முறைக்குப் போராடுவதில் முன்னிற்கும் சவால்களை அடையாளப் படுத்திக் கொள்ள இந்த மாற்றுச் சிந்தனை, தத்துவக் கல்வி தேவையாக இருக்கிறது. மாணவர் இயக்கத்திற்கு அரசியல் சூழலை மாற்றி வளர்த்தெடுப்பதில் வரலாற்று ரீதியாகவே முக்கிய பங்களிப்பு இருந்து வந்திருக்கிறது. புரட்சிகர மாற்றத்திற்கான அடிப்படை போராட்ட களத்தில், புதிய வரலாறுகளைப் படைக்க முன்னெழுவோம்.
எஸ்.வி.வேணுகோபாலன்

Thursday 10 September 2015

வீதியில் விதைக்கப்பட்ட நம்பிக்கை

அறிவொளி இயக்கத்தின் வெற்றி என்பது கல்வியைத் தாண்டிய சாதனை

அயர்லாந்து புரட்சியை ‘மகோன்னதமான அழகு’ என்று வர்ணித்தார் கவிஞர் யீட்ஸ். ஒவ்வோர் இயக்கமும் ஒரு கவிதைதான். அந்த வகையில் அறிவொளி இயக்கமும் ஓர் அழகுதான்; கவிதைதான். கால் நூற்றாண்டுக்கு முன் 1991-ல் இதே போன்ற ஒரு செப்டம்பரில் - புத்தம் புது அனுபவமாய், கிராமத்து வீதிகளில் பிறந்தது அறிவொளி இயக்கம். எழுத்துகளும் வார்த்தைகளும் உயிர் பெற்ற அனுபவம் அது.

எளிது எளிது ட, ப எளிது

‘பட்டா’, ‘படி’ இரண்டும்தான் அறிவொளி கற்பித்த முதல் வார்த்தைகள். தமிழில் எழுதச் சுலபமான எழுத்து ‘ட’; அடுத்து ‘ப’. எனவே, இதுவரை எழுத்து அறியாதிருந்த வரும், ‘பட்டா’, ‘படி’ ஆகிய இரண்டு வார்த்தைகளையும் ஒரு தவறும் இல்லாமல் எழுதிக் காட்டினர். களைத்த முகங்களில் எழுத்தின் வெளிச்சம் மிளிரத் தொடங்கியது. “ரேகை வச்ச வெரலுக்கு / றெக்கை முளைச்ச சந்தோசம்” என்று இந்தப் பரவசத்தைக் கவிதை வரிகளாக்கினார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி.

எத்தனை மாற்றங்கள்

கட்டிடங்களுக்குள் கட்டுண்டு கிடந்த கல்வி வீதிக்கு வந்ததே முதல் பெரிய மாற்றம். வீதியில் ஒரு சுதந்திரம் இருந்தது. புத்தகங்களுக்குள் கட்டுப்படாத பாடத்திட்டம் இருந்தது. பாட்டும் சிரிப்புமான ஒரு வகுப்பறை இருந்தது. கல்வி வியாபாரிகளின் கவனம் விழாத தூரம் இருந்தது. மாற்றத்துக்கான நம்பிக்கை இருந்தது.

கல்வியில் ஆதிக்கம் செலுத்திய மத்திய வர்க்கச் சிந்தனையும் மொழியும் உடைந்த இடம் அறிவொளி. “…வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி என்னுரையை முடிக்கிறேன்” என்று அறிவொளி நிகழ்ச்சிகளில் சம்பிரதாயமாகப் பேசினால் யாரும் கைதட்ட மாட்டார்கள்; சிரிப்பார்கள்.

விவாதப் பயிற்சிப் புத்தகம் ஒன்றைத் தயாரித்தோம். ‘ஒரு முடிவெடுப்போம்’ என்பது அந்தப் புத்தகத்தின் பெயர். ஒவ்வொரு பயிற்சியிலும் ஒரு பிரச்சினையைச் சொல்லி அதற்கு நான்கு தீர்வுகளை முன்வைத்தோம். தீர்வுகள் தொடர்பாக மக்கள் பேச வேண்டும். ’யாருக்கு மாலை?’ என்பது ஒரு பயிற்சி. நான்கு விதமான மாப்பிள்ளைகளை விவரித்து, “நம் வீட்டுப் பெண்ணுக்கு யாரைத் தேர்வுசெய்வீர்கள்?” எனக் கேட்டோம்.விவாதம் தொடங்கியதுமே “ஆமா! இப்படித்தான் மாப்பிள்ளை கள் வரிசை போட்டு வாரானுகளாக்கும்! வீட்ல பொம்பளப் பிள்ளைகளுக்குக் கல்யாணம் பண்ணிப் பாருங்க! அப்பத் தெரியும்!” என்று சொல்லி விவாதத்தை முடித்தார் ஒரு மூதாட்டி. மூதாட்டி விட்டெறிந்த கல்லில் உடைந்து சிதறியது மத்திய வர்க்கச் சிந்தனைத் தளம்.



எத்தனை மலர்ச்சிகள்

நகரங்களில் பல வீடுகளில் பேச்சுச் சத்தமே கேட்பதில்லை. உறவினர் வருகையும் இல்லை. நம் வகுப்பறைகளும் இப்படித்தான் ஆகிவிட்டன. பேச்சு நிறைந்த வீடுகளும் சில உள்ளன- இந்தக் காலத்தின் அதிசயங்களாக. அறிவொளி - பேச்சு நிறைந்த வீடு போல. “குட்டப் பிள்ளைக்குக் குருணி நகை. அது என்ன?” என்று தொண்டர் விடுகதை போடுவார் (விடை: வெங்காயம்). பதில் வராது. ‘ஒம்பது பேருக்கு ஒரே குடுமி. அது என்ன? நீ சொல்லு’ என்று பதில் விடுகதை போடுவார்கள் கற்போர். (விடை: வெள்ளைப் பூண்டு). பஞ்சமில்லாமல் பேச்சும் சிரிப்பும் வகுப்பில் நிறைந்திருக்கும்!

ஒரு விதத்தில் ‘அறிவொளி’ என்பது பெண்களின் இயக்கம். படித்தோரும் படிப்பித்தோரும் பெரும்பாலும் பெண்களே! வீதியில் உட்கார்ந்து பலரும் பார்க்கப் படிப்பது ஆண்களுக்கு கவுரவப் பிரச்சினையாக இருந்தது. கற்றுக்கொடுத்த பெண்களில் பெரும்பாலோர் எட்டாம் வகுப்பு வரை படித்து நின்றவர்கள். வீட்டின் தினசரித் தேக்கங்களுக்குள் சிக்கியவர்கள். அங்கீகாரம் அற்றவர்கள். அவர்களுக்கான வாய்ப்பாக அமைந்தது அறிவொளி.

மூளைக்கோளாறு என்று சொல்லப்பட்டு வீட்டுக்குள் பூட்டப்பட்டிருந்தாள் வளர்மதி. அவளை அறிவொளி விடுதலை செய்தது. தொண்டர் ஆனாள். “என்ன சார்? பாடப்புத்தகத்தில அலுவலகம் அலுவலகம்’னு வருது. ஆபீஸ்’னு சொன்னாத்தான் சார் மக்களுக்குப் புரியுது” என்று எங்கள் பாடமொழியின் மீது அம்பெறிந்தவள் வளர்மதி; “நாங்கள் வாய்விட்டுச் சிரித்ததே அறிவொளியில்தான்” என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கடிதம் எழுதியவள் அவள்.

எத்தனை தடைகள்

பள்ளிப் பிள்ளைகள் கட்டிடங்களுக்குள் கல்வி பெறுவது, ஸ்டவ் தீ பற்றிக்கொள்வது போல; மரத்தடிகளில் உழைப்பாளி மக்கள் கல்வி பெறுவது காடு தீ பற்றிக்கொள்வது போல - என்று அறிவொளியில் பேசுவோம். “புத்தகம் கையில் எடுத்துவிடு; அதுவே உன் போர்வாள்!” என்று கலைப் பயணங்களில் பாடுவோம். இது போதாதா ஆட்சியாளர்கள் மிரள?

அறிவொளிப் பயணம் தடைகள் நிறைந்த பயணமாகவே இருந்தது. அறிவொளியின் ஒவ்வோர் அசைவின் மீதும் சந்தேகம் இருந்தது. பாடப் புத்தகத்தில் இருந்த பசி, குடிசை என்ற வார்த்தைகளின் மீது சந்தேகம் இருந்தது. பாரதியார், பாரதிதாசன் பாடல் வரிகள் மீது சந்தேகம் இருந்தது. அறிவொளி அலுவலகங்கள் பல திடீர் திடீர் என்று பூட்டப்படுவதுண்டு. இயற்கையான தடைகளும் ஏராளம் இருந்தன. எரியாத தெருவிளக்கு, மழைக்காலங் களில் ஒதுங்கக் கட்டிடம் இல்லாமை- இரண்டும் நிரந்தரப் பிரச்சினைகள். சாதிக் கலவரம்- ஆபத்தான நெருப்பு! பல நாள் பாடுபட்டு, பல ஊர்களில் உருவாக்கிய மையங்கள் எல்லாம் ஒரே நாளில் உருக்குலைந்து சாயும். மிகப் பரிதாபமானது தொண்டர்களின் மரணம்தான். பாம்பு கடித்து மாண்ட தொண்டர்களைப் பற்றிய செய்தி வந்துகொண்டே இருக்கும்.

எத்தனை மதிப்பீடுகள்

அறிவொளி தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் பல. பலர் ஆளுக்கொரு தராசை எடுத்து அறிவொளியை மதிப்பிட வந்தார்கள். எத்தனை பேர் கையெழுத்து போடத் தெரிந்துகொண்டார்கள் என்ற ஒரு கேள்வியை அவர்களில் பலர் தாண்டவில்லை. அடிப்படைக் கற்றல் அளவுகளைப் பொருத்திப் பார்க்க வந்த நிபுணர்களும் உண்டு. எத்தனை வளர்மதிகள் விடுதலை பெற்றார்கள் என்பதை இவர்கள் எப்படி மதிப்பிடுவார்கள்?

ஒரே ஒருநாள் அறிவொளி மையம் வந்து பட்டா, படி எழுதிப் போன கற்போர்; சில நாட்கள் தொடர்ந்து வந்து கையெழுத்து போடக் கற்றோர், தட்டுத் தடுமாறிப் பத்திரிகை வாசிக்க முன்னேறியவர்கள்; தாமே தொண்ட ராக வளர்ந்தவர் என அறிவொளியின் விளைச்சல், பல நிலைகளில், பல வடிவங்களில் இருந்தது.

எதற்காகக் கல்விக்கூடங்கள்?

அறிவொளி நின்றதுமே, அதனை இயக்கிய அற்புதமான பெண்கள் பலர் கண் பார்வையில் இருந்து விலகி எங்கெங்கோ சென்றனர். அன்றாட வாழ்வு மீண்டும் வந்து கவ்வியது. வேலையும் திருமணமும் அவர்கள் சிரித்த சிரிப்பை அபகரித்துச் சென்றன. துர்மரணங்களும் நிகழ்ந்தன.

கல்விக்கூடங்கள் பிள்ளைகள் படிப்பதற்காக மட்டுமல்ல - பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகவும்தான் என்று நாங்கள் புரிந்துகொண்டதே அறிவொளியில்தான்.

இன்றும் இந்தியாவில் ஆண்டுக்கு 1,35,000 குழந்தைகள், பிச்சையெடுக்கவும், முன்பின் தெரியாத நகரங்களில் வீட்டுவேலை பார்க்கவும், பாலியல் தொழிலுக்காகவும் கடத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெண் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் யார்? பெரும்பாலோர் பள்ளிக்குச் செல்லாதவர்கள்; பள்ளியில் இருந்து இடைவிலகியவர்கள்.

பள்ளி என்றதும் ‘கற்றல்’ குறித்தே பேசுகிறோம். பள்ளியோடு இணைந்தது கற்றல் மட்டுமல்ல; குழந்தை களின் பாதுகாப்பும்தான். பள்ளிகளில் உள்ளவரை அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். பிள்ளைகளைத் தேர்வு வெற்றி தோல்விகள் முடிவின் பெயரால், ஒரே வகுப்பில் வைக்கவும் கூடாது; பள்ளியை விட்டு வெளியேற் றவும் கூடாது என்ற கல்வி உரிமைச் சட்டம் எத்தனை அவசியமானது என்பதை இன்றைய சூழலில் மீண்டும் நினைவுபடுத்தி எச்சரிக்கிறது எழுத்தறிவு இயக்கம்!

- ச. மாடசாமி
அறிவொளி முன்னாள் ஒருங்கிணைப்பாளர்,
 ‘சொலவடைகளும் சொன்னவர்களும்’ நூலின் ஆசிரியர். 

தொடர்புக்கு: smadasamy1947@gmail.com

Wednesday 9 September 2015

ஆசிரியர் தினம் : கால காலத்திற்குமான கொண்டாட்டங்கள்

துய்ஷேன் ஆகப் பெரும் படிப்பு படித்த கல்வியாளர் கிடையாது. ஆனால் சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்களது அற்புதமான படைப்பான முதல் ஆசிரியர் நாவலின் கதாநாயகனான இந்த துய்ஷேன் மட்டும் இல்லாதிருந்தால், குர்கூரெவு எனும் அந்தச் சிற்றூரில் கல்வியைப் பற்றியோ, பள்ளிக்கூடத்தைப் பற்றியோ யார் கவலைப் பட்டிருக்கப் போகிறார். வலுக்கட்டாயமாகத் திருமணச் சிறைக்குள் தள்ளப்பட இருந்த அந்தச் சிறுமி அல்தினாய் உலைமானவ்னா எப்படி தப்பி வெளியேறி நகரத்திற்குப் பெயர்ந்து படிக்கவும் செய்து, பின்னாளில் தனது கிராமத்தில் உருவாகும் புதிய பள்ளியைத் திறந்துவைக்க அழைக்கப்படும் அளவு உருவாக முடிந்தது? புரட்சிகர மாற்றம் கல்வியில் இருந்தே உருவாகிறது என்பது தன மண்டைக்குள் புகுந்து படாத பாடு படுத்தியது தவிர அந்த எளிய மனிதர் துய்ஷேன் எங்கே வேறுபட்டு நின்றார்! தன்னலமற்ற இலட்சிய வேகத்திற்குச் சொந்தமான அனைத்து ஆசிரியர்களுமே துய்ஷேன்கள் தாம், அவர்களுக்கு நமது ஆசிரியர் தின வாழ்த்துக்கள். 

வீதியில் எத்தனையோ மனிதர்கள் கடந்துபோய்க் கொண்டிருந்தாலும், பணி நிறைவுக்குப் பின்னும் அடையாளம் கண்டு பேசப்படுபவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர். பெற்றோரை விடவும் அதிகம் தங்களோடு உரையாடுபவர் ஆசிரியர் என்பதைக் குழந்தைகள் அறிவர். ஆசிரியர்களுக்குப் பிள்ளைகள் என்று சொன்னால் தமது குழந்தைகளைவிடவும் தம்மிடம் படிப்பவர்களே சட்டென்று கவனத்திற்கு வருவார்கள். வாழ்க்கையின் முக்கிய கட்டங்களில் தமக்கு வழிகாட்டியாகவோ, நல்ல ஆலோசனை நல்கியவராகவோ ஓர் ஆசிரியர் எல்லோரது வாழ்விலும் இருக்கவே செய்வார்.பள்ளிக்கு வெளியிலும், கல்விக்காலம் முடிந்த பிறகும் ஓர் ஆசிரியர் ஆசிரியராகவே மாணவரது நெஞ்சில் உறைந்துவிடுகிறார், முன்னாள் ஆசிரியர் என்ற பதவி இறக்கம் அவர்களுக்கு நேர்வதில்லை. 

வாழ்க்கையில் சோர்வை சந்தித்த வேளையில் முதலில் தனது ஆசிரியரைத் தேடித் பகிர்ந்து கொண்ட மாணவர்கள் பெரும்பாலும் காப்பாற்றப் பட்டிருக்கின்றனர். கல்வி என்பது பாடத்திட்டம் மட்டிலுமே அல்ல என்பதை உணர்ந்திருக்கும் ஆசிரியர்கள் மிக இலகுவாக எதிர்காலத் தலைமுறையினரின் ஏற்றத்திற்குப் பங்களிப்பு செய்கின்றனர். பரந்து பட்ட மாணவர்கள் உத்தரவாதமாக அன்பை எதிர்பார்க்கும் இடமாக உருவெடுக்கும் ஆசிரியர்கள் பணிச்சுமை தெரியாது வேலை பார்க்க முடிவது வியப்புற முடியாத வியப்பு. 

பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் எப்போதும் சவால்களுக்கிடையே பணியாற்ற வேண்டி இருக்கும் என்று நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்ட ஒரு மருத்துவர், "எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. மருத்துவரது அத்தனை திட்டங்களையும் கவிழ்த்துப் போடும் இடம் டெலிவரி டேபிள்" என்றார் அவர். ஓர் ஆசிரியருக்கும் அது கிட்டத்தட்ட பொருந்தும். வகுப்பறைக்குள் நுழையுமுன் அதனுள் என்னென்ன கேள்விகள், என்னென்ன தர்ம சங்கடங்கள், என்னென்ன அதிர்ச்சிச் செய்திகள் காத்திருக்கின்றன என்பது ஆசிரியர்கள் ஊகிக்க முடியாதது. இயல்பற்று இருப்பதுதான் இயல்பு, ஆனால் சட்டென்று இயல்பு நிலைக்கு நாம் மீண்டுவிட வேண்டும் என்று அண்மையில் பேசுகையில் உளவியல் ஆலோசகர் டாக்டர் ஆர் கார்த்திகேயன் குறிப்பிட்டார். அப்படி பொருந்தும் சவாலான வேலையை மிக இலகுவாக அன்றாடம் சாதித்துக் கொண்டிருக்கிறார் ஓர் ஆசிரியர்.

உள்ளம் திறந்த அணுகுமுறைக்குத் தயாராகும் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தமது பாதுகாப்பை சுவாசிக்கத் தொடங்குகின்றனர். ஆசிரியர்களது அறிவுத் திறனை மெச்சிக் கொண்டாடக் கூட, அவரது அன்பின் நுழைவாயில் திறக்க வேண்டியிருக்கிறது. இனிமையான கற்றல் அனுபவத்தை மாணவர்கள் ஒருபோதும் இழக்க இசைவதில்லை. தாமதமான வருகை, சொல்லாமல் நிற்றல், தேர்வுகளைப் புறக்கணித்தல் எல்லாமே கற்றலின் சுமையாலோ, குடும்ப பிரச்சனைகளின் எரிச்சலாலோ நேரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆசிரியரின் அன்பான வினவுதல் அத்தனை காயங்களையும் ஆற்றிவிடும் வலிமை கொண்டிருக்கிறது. 

இவ்வாண்டு ஆசிரிய தினத்தையொட்டி இந்த வெள்ளிக்கிழமை மாணவர்களோடு காணொளி மூலம் நேரடி உரையாடலில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி கேட்க தேர்வு செய்யப்பட்டது, ஏதேனும் சாதனை செய்த மாணவர்கள்தானாம். ஒவ்வொரு குழந்தையும் எதையேனும் சாதிக்கவே செய்கிறது. சாதனையாள மாணவரது கண்களில் நட்சத்திரம் மின்னுவதை ஆசிரியர்கள் பார்க்கட்டும் என்றாராம் மோடி. மற்ற மாணவர்கள் கண்களில் என்ன தெறிக்கும் என்பதை யார் பார்ப்பது. அனைத்துக் குழந்தைகளையும் அளவுகோல்களுக்கு அப்பால் பார்க்கும் ஆசிரியர் பேசாக் குரல்களையும் ஒலிக்க வைக்கிறார். சிரிக்கத் தயங்கும் முகங்களையும் புன்னகையால் அலங்கரிக்கச் செய்கிறார்.

தவிர்க்கத் துடிக்கும் ஒரு காயைக் கூடக் கதைகளைப் பேசி ஊட்டும் ஒரு தாய் குழந்தையை உண்ண வைத்துவிடுகிறாள். ஆனால், தாங்கள் எந்த உணவை உண்ணுகிறோம் என்பதைத் தாங்களாக ரசித்து, ருசித்து உண்ணக் கற்பிக்க வேண்டும் குழந்தைகளுக்கு என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். தண்ணீரில் முதன்முதல் உடம்பு வெடவெட என்று நடுநடுங்க நிற்க வைக்கப்படும் குழந்தை பின்னர் எப்படி உற்சாகமாக நீச்சல் போடத் தொடங்குகிறது ! கல்வியில் அந்த மாயத்தைத்தான் ஆசிரியர்கள் நிகழ்த்துகின்றனர். 

சமூகத்தின் இயங்கு விதிகளை குழந்தைகள் தமது பள்ளிக்கூடப் பருவத்திலேயே பதிய வைத்துக் கொள்கின்றனர். பகிர்தலின் பெருமையை அவர்கள் அங்கேதான் பழக்கிக் கொள்கின்றனர். கேள்வி எழுப்புதலை, சிந்தித்தலை உள்ளத்திற்குப் பயிற்சியாக்கிக் கொள்ளும் மாணவர்கள் உடற்பயிற்சியின் தொடக்க பாடங்களை பள்ளியிலேயே பெறுகின்றனர். இவற்றில் அருமையான பங்களிப்பு செய்யும் ஆசிரியர்கள் காலகாலத்திற்கும் கொண்டாடப் படுகின்றனர். 

மற்ற எல்லோர் தினங்களையும் அவரவர் கொண்டாடிக் கொள்கின்றனர். ஆசிரியர் தினத்தை சமூகம் கொண்டாடுகிறது. சமூகத்தைக் கொண்டாடும் ஆசிரியர்கள் தங்களை மேலும் சிறப்பித்துக் கொள்கின்றனர். குழந்தைகளை நேசிக்கும் யாவருக்கும் உரித்தாகிறது ஆசிரியர் தினம். எளிய மனிதர் துய்ஷேன், அதனால் தான் முதல் ஆசிரியர் ஆனார்.


எஸ் வி வேணுகோபாலன் 

ஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்!


சென்னையில் ஏராளமான மரம், செடி - கொடிகள் சூழ அமைந்த அரிதான பள்ளிகளில் ஒன்று ஜே.கிருஷ்ணமூர்த்தி நிறுவிய ‘தி ஸ்கூல்’. குட்டிப் பிள்ளைகளுக்கு அந்தப் பள்ளி வளாகம் ஒரு குட்டிக் காடுதான். நடந்து செல்லும் பாதைகள் எங்கும் பூக்களும் முதிர் இலைகளும் மரப்பட்டைகளுமாக உதிர்ந்து கிடக்கும். காலடிகளைக் கவனமாக எடுத்துவைக்க வேண்டியிருக்கும். பட்டுப்பூச்சிகள் பாதையினூடே கடந்து செல்லும். அன்றைக்கு ஒரு காரியமாக அந்தப் பள்ளி பக்கம் சென்றபோது, ஏதோ யோசனையில் ஆட்பட்டவனாக ஆலமரத்தடியில் உலவிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். ஒரு மணி நேரம் இருக்கும். வேலை முடிந்து திரும்பும்போதும், அவன் அங்கேயே இருந்தான். மரத்தடியில் உட்கார்ந்து கைகளில் அழகழகான கருப்பு - சிவப்பு ஆல விதைகளைக் குவித்து உருட்டிக்கொண்டிருந்தான். பள்ளி நேரம் அது என்பதால், ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அந்த மரத்தடிப் பள்ளி முதல்வரின் அறையின் ஜன்னல் பார்வைத் தூரத்தில் இருந்தது. இதனிடையே அவனைக் கடந்த இரு ஆசிரியர்கள் அவனிடம் ஏதோ பேசிவிட்டு, கடந்து சென்றனர். பிறகு, மரத்தடியில் இரு முரட்டு வேர்களின் நடுவே ஏதோ சாய்வு நாற்காலியால் வசதியாகப் படுத்துக்கொள்வதைப் போல அவன் சரிந்துகொண்டான். ஆர்வமிகுதியில் விசாரித்தபோது, மூடு சரியில்லை என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டு, மரத்தடிக்கு வந்த கதையைச் சொன்னான். ஆச்சரியமாக இருந்தது. பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தால், “இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது; பிள்ளைகள் ஒரு நியாயமான விஷயத்தை நம்மிடம் கொண்டுவரும்போது அதற்குக் காது கொடுப்பதுதானே நியாயம்?” என்றார்கள்.

உண்மைதான். இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஒரு பிள்ளை, ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்தால், கொஞ்சம் அமைதியாக, தனித்திருக்க விரும்பினால், பள்ளி வளாகத்திலேயே அனுமதிப்பதில் என்ன ஆச்சரியம் கிடக்கிறது? ஆனால், நம்முடைய இன்றைய பள்ளிகளின் அசாதாரண சூழல் சாதாரண விஷயங்களைக்கூட நம் சமூகத்தில் ஆச்சரியமானவையாக்கிவிடுகிறது.

நல்ல பள்ளி ‘தி ஸ்கூல்’. ஆசிரியர்களைப் பிள்ளைகள் அண்ணா, அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். பொதுத் தேர்வுகள் வரை தேர்வுகள் கிடையாது. மதிப்பெண்கள் கிடையாது. பரிசுகள் கிடையாது. தண்டனைகளும் கிடையாது. துரதிருஷ்டம் என்னவென்றால், தமிழ்நாட்டில் ஒரு ‘தி ஸ்கூல்’தான் இருக்கிறது. ஒரு வகுப்புக்கு 25 பிள்ளைகளைத்தான் சேர்ப்பார்கள். அப்புறம், ஆண்டுக் கட்டணம் ஐம்பதாயிரத்தைத் தாண்டும். நம்முடைய அரசுப் பள்ளிகள் சூழலை ‘தி ஸ்கூல்’ சூழலுடன் ஒப்பிடுவது முற்றிலும் முரணானது என்றாலும், இன்றைக்கு நம்முடைய சமூகச் சூழலில் கொஞ்சமேனும் பிள்ளைகளுக்கான சுதந்திரச் சூழல் மிச்சமிருப்பது அரசுப் பள்ளிகளில்தான். ஆண்டுக்கு பத்துப் பதினைந்து பள்ளிகளுக்காவது செல்ல நேர்கிறது; காற்றோட்டமான வெளியில் தொடங்கி உற்சாகமான உரையாடல்கள் வரை அரசுப் பள்ளிகளில் உள்ள சுதந்திரமான சூழல் தனியார் பள்ளிகளில் காணக் கிடைக்காதது. இப்போது அந்த அரசுப் பள்ளிகளிலும் பிள்ளைகள் வதைபட ஆரம்பிப்பதுதான் பெருந்துயரம்.

பள்ளிகள் என்பவை வகுப்பறைகளும் கரும்பலகைகளும் பாடப்புத்தகங்களும் மட்டுமே அல்ல. இந்த உலகத்தையும் வாழ்க்கையையும் எப்படி அணுகுவது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதுமே பள்ளிகளின் மிக முக்கியமான, அடிப்படைப் பணி. உலகத்தையும் வாழ்க்கையையும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்த நாளை அந்தப் பிள்ளைகள் பயன்பட வேண்டும் என்றால், அவர்களுக்குள் இருக்கும் படைப்பூக்கம் வெளிக்கொணரப்பட வேண்டும். படைப்பூக்கம் வெளிவர சுதந்திரச் சூழல் எவ்வளவு முக்கியம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்; மறுபுறம் நேரம் எவ்வளவு முக்கியம்!

பிறவியிலேயே ஒரு குழந்தையிடம் இசை ஞானமும் இன்னொரு குழந்தையிடம் கண்டுபிடிப்பாற்றலும் இருப்பதாகக் கொள்வோம். அந்தக் குழந்தைகள் பாடிப் பழகவும் எதையோ செய்துபார்க்கவும் அன்றாடம் நேரம் இருப்பது எவ்வளவு அவசியம்! இன்றைய குழந்தைகளுக்கு, அவர்களுக்கே அவர்களுக்கான நேரம் எந்த அளவுக்கு இருக்கிறது?

இந்தியாவில் தனியார் பள்ளிகளில் ‘பொதுத்தேர்வுச் சதவெறி’ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுக்கப்பட்டுவிட்ட சூழலில், அரசுப் பள்ளிகளையும் இப்போது மதிப்பெண்கள் துரத்துகின்றன. ஆசிரியர்கள் வெறும் மதிப்பெண் உற்பத்தி இயந்திரங்களாக மாற்றப்படும் சூழலில், அதே இயந்திரமயமாக்கலை மாணவர்களை நோக்கி அவர்கள் திருப்புகிறார்கள். ஒவ்வொரு பிள்ளைக்கும் பிரத்யேகக் கவனம் அளித்துக் கற்பிக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில் பெருந்திரள் கூட்டத்தை எதிர்கொள்ளும் ஆசிரியர்கள் முன்பு இதுபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டிருந்தால், பிரம்பைக் கையில் எடுத்திருப்பார்கள். இப்போது பிரம்பை எடுக்க முடியாத சூழலில், பிள்ளைகளை நோட்டுகளை எடுக்கச் சொல்கிறார்கள். நண்பர்களே, நம்மில் எத்தனை பேர் நம் பிள்ளைகளின் புத்தகப் பைகளை முழுமையாகப் பார்க்கிறோம் என்று தெரியவில்லை. நம்முடைய தலைமுறையினர் கற்பனையே செய்திராத அளவுக்கு இன்றைக்கு நம் பிள்ளைகள் எழுதவைக்கப்படுகிறார்கள். எழுத்து வேலை நம் பிள்ளைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லரித்துக்கொண்டிருக்கிறது.

ஒரு சராசரி குழந்தையின் எடையில் 10%-க்கும் மேல் அவர்கள் சுமக்கக் கூடாது; அவர்களுடைய புத்தகப் பைகள் அதற்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்காகவே கல்வியாளர்கள் தொடர்ந்து பாடப்புத்தகங்கள் சுமையைக் குறைக்க வலியுறுத்துகிறார்கள். அரசாங்கமும் அதற்கேற்ற மாற்றங்களைச் செய்கிறது. ஆனால், பெருகிக்கொண்டே போகும் நோட்டுப் புத்தகங்களை யார் தடுப்பது? ஒவ்வொரு குழந்தையின் பையிலும் குறைந்தது 10 - 15 நோட்டுப் புத்தகங்களாவது இருக்கின்றன. எல்லாப் பக்கங்களையும் கூட்டினால், ஆயிரங்களைத் தொடுகிறது. கேட்டால், பள்ளியிலும் எழுத்து வேலை, வீட்டுப்பாடத்திலும் எழுத்து வேலை என்கிறார்கள். எழுத்து வேலை பள்ளியிலும் வீட்டிலுமாக அவர்களை விடுமுறை நாட்களில்கூடத் துரத்திக்கொண்டே இருப்பதால், உடல் பாதிப்புகளைத் தாண்டி பெரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். கட்டாய மனப்பாடத்தைவிட மோசமான கற்பிப்பு முறை இது. எழுத்து மீது, புத்தகங்கள் மீது என்று கல்வி மீதே பிள்ளைகளுக்குப் பெரும் வெறுப்பை உருவாக்கிவிடக்கூடிய முறை இது. கொடுமையிலும் கொடுமை, இதை யாரிடமுமே அவர்கள் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு இங்கு வீடுகளிலும் சூழல் மோசமாகி இருப்பது. எந்தப் பள்ளியில் பிள்ளைகளுக்கு அதிக வேலை தரப்படுகிறதோ, அந்தப் பள்ளியைத்தானே சிறந்த பள்ளிகளாகக் கருதுகிறார்கள் பெற்றோர்கள்! ஆக, அதீத எழுத்து வேலைகள் வேகவேகமாகச் சிதைக்கின்றன நம் பிள்ளைகளை, அவர்களுடைய குழந்தைமையை, அவர்களுடைய படைப்பூக்கத்தை, அவர்களுடைய கனவுகளை…

அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று இது. ஆட்சியாளர்கள் இதுபற்றி யோசிக்க வேண்டும். “நானெல்லாம் என் பள்ளி நாட்களில் குளத்தில் அப்படிக் குதியாட்டம் போட்டிருக்கிறேன்; தோட்டத்தில் மாங்காய் அடித்துச் சாப்பிட்டிருக்கிறேன்; நுங்கு வண்டி செய்து ஓட்டுவேன்; விடுமுறை நாளில் தெருவில்தான் கிடப்பேன்” என்று வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஜல்லியடிக்கும் பெற்றோரும் பொதுச் சமூகமும் இதுபற்றி யோசிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், ஆசிரியர்கள் இதுபற்றி யோசிக்க வேண்டும். கட்டிடங்கள் அல்ல; பிள்ளைகள் நடுவே ஒரு ஆசிரியர் உட்காரும்போதுதான் மரத்தடியும்கூடப் பள்ளி வகுப்பறையாக மாறுகிறது. பிள்ளைகளிடம் நாள் கணக்கில் பேசி பெற்றோர் உருவாக்க முடியாத எத்தனையோ விஷயங்களைப் பள்ளிப் பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர்களுடைய ஆசிரியர்கள் பேசும் சில வார்த்தைகள் கண நேரத்தில் உருவாக்குவதை இன்னமும் கண்ணெதிரே பார்க்கிறோம். குழந்தைகள் அவ்வளவு மதிக்கிறார்கள் ஆசிரியர்களை. அவ்வளவு உயர்பீடத்தில் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர்களை. இந்த மதிப்புக்கு ஆசிரியர்கள் நியாயம் செய்ய வேண்டும்.

ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடித வரிகள் நினைவுக்கு வருகின்றன: “ஆசிரியரே, புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்துகாட்டுங்கள். அதேவேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்!”

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

Tuesday 18 August 2015

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை: கொஞ்சம் கல்வி......அதிக நிர்வாகம்.. ( Less Education…..More Governance)

இது இந்த அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்த முழுமையான விளக்கமும் விவாதமும் விமர்சனமும் அல்ல. கல்விக் கொள்கை எவ்வாறு விவாதத்துக்கு விடப்பட்டுள்ளது என்ப்து குறித்த விமர்சனமும் அதில் பங்கேற்பதற்கான வழிமுறைகளும் மட்டுமே முதற்கட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்ன் பின்னர் கல்வியின் நோக்கமும் மாற்றுத் திட்டமும் நமது கண்ணோட்டமும் பின்னர் வைக்கபப்டுவதாக தீர்மானிக்கப்பட்டது.




திருவாளர் மோடி அவர்களின் மத்திய அரசு திட்டம் உருவாக்குதலை மிகப் பெருமையாக மேலிருந்து கீழ் என்ற பழைய அரசுகளின் முறையில் இருந்து மாற்றி கீழிருந்து மேல் என்ற முறையில் கலந்தாலோசித்து இக் கொள்கை தயாரிக்கப்பட உள்ளது எனக் கூறுகிறது. ஆனால் உண்மையில் இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தை மக்களிடம் விவாதிப்பது என்ற போர்வையில் திட்டமிட்ட கேள்விகள் மூலம் செய்திருப்பதே அதற்கு சாட்சியாகும். 

மேலும் ஆரம்பக்கல்வி குறித்த பல்வேறு அறிக்கைகளைப் புறந்தள்ளியும், கல்வி உரிமைச் சட்டத்தை மீறியும் இக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் என்ற அடிப்படையில் ஆரம்பக்கல்விக்கு 13 வகையான தலைப்புகளிலும் உயர்கல்வியில் 20 வகையான தலைப்புகளிலும் கேள்விகளை அரசே கொடுத்து பல கேள்விகளுக்கு விடையவே multiple choice அடிப்படையில் கொடுத்திருப்பதே அதற்கு சாட்சி ஆகும்.

2015, ஏப்ரல்-மே மாதங்களில் கிராமப் பஞ்சாயத்தில் (2.5 லட்சம் கூட்டங்கள்), ஜூன்-ஜூலையில் மாதங்களில் ஒன்றிய அளவிலும்,நகர அளவிலும் (10,300 கூட்டங்கள்), ஆகஸ்ட் மாதத்தில் மாவட்ட அள்வில் (676 கூட்டங்கள்) செப்டம்பர் மாதத்தில் மாநில அள்வில் தலா மூன்று கூட்டங்கள் என 36 மாநில, யூனியன் பிரதேசங்களில் (சுமார் 100 கூட்டங்களும்) கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இது தவிர இணைய வழி கருத்துக் கேட்பும் ஜனவரி 26 முதல் 30 ஏபரல் வரை நடத்தப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. 

இதன் பின்னர் ஆறு மண்டலங்களில் மாநிலங்களின் பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு அகில இந்திய அளவில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பிரிவுத் தலைவர்களால் இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NCTE, NUEPA, NCERT, AICTE, UGC ஆகிய அமைப்புகளின் உதவியோடு தொகுக்கப்படும் எனக் கூறுகிறது. 

இதன் பின்னர் தேசிய அளவில் சம்பந்தபப்ட்டமத்திய அமைச்சர்கள் உட்பட் பல்வேறு கல்விப் பங்கேற்பாளர்களுடன் ஒரே ஒரு கருத்துருவாகத் தயாரிக்கபப்ட்டு தேசிய கல்விக் கொள்கை செயல்பாட்டுக் குழுவுக்கு (National Educational Task Force) பரிந்துரைக்கப்படும். இக் குழு இதனைப் பரிசீலித்து தேசிய கல்விக் கொள்கை-2015 முன் பரிந்துரைக் கொள்கையாக மத்திய கல்வி ஆலோசனைக் குழுமத்திடம் (CABE-Central Advisory Board on Education) சமர்ப்பிக்கபப்டும். 

புதிய கல்விக் கொள்கை குறித்த பொதுவான விமர்சனங்கள்:

திறன் என்ற கல்வித் தரம் (Quality Measurement ) : தற்போதைய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் எந்தவிதமான மாற்றம் தேவை என்பதில் தெளிவு இல்லை எனபது மட்டுமல்ல அது தவறுதலாகவும் சித்தரிக்கப்படுகிறது. இந்தத் தவ்று 1990 களில் இருந்தே இருக்கிறது. அதாவது குறைந்தபட்ச அடைவுகள் (MLL) என்ற கொள்கை. குறைந்தபட்ச அடைவுகள் மட்டுமே தரமான கல்வி என்று நாம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலயில் திறன் மட்டுமே தரமான கல்வி என இக் கொள்கை பிரேரித்து,அதற்கு என்னென்ன செய்யலாம் என கேள்விகளை வடிவமைத்து இருக்கிறது.

அளவு நிர்ணயித்தல் ( Quantification) : மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியின் அளவு நிர்ணயிக்கபப்ட்டுள்ளது. 

மையப்படுத்துதல் ( Centralization) : விவாக்க முறையில் கல்ந்தாலோசித்தல் என்று சொல்லிவிட்டு கல்வியை ஒருமுகப்படுத்தி மையபப்டுத்துதல் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. 20 சதவீத மாற்றமே மாநில அரசுகள் செய்துகொள்ள முடியும் எனக்கூறி இருக்கிறது. எடுத்துக்காட்டாக மையப் பல்கலைக் கழகங்கள் அடை காக்கும் ( Incubation) நிறுவனங்களாக மாற்றப்படுதல். கல்லூரி, பல்கலை ஆசிரியர்களை தேசிய அளவில் தேர்ந்தெடுத்தல், பொதுப் பாடத்திட்டம், மைய தர மதிப்பீடு, மைய நிர்வாகம் என உயர்கல்வியில் மையபப்டுத்துதல் என்பதே பெரும்பான்மையான பரிந்துரையாக உள்ளது. இத்ற்கு ஏற்றவாறு கேள்விகள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.. 

நிர்வாகமயமாக்குதல்: எல்லா மட்டங்களிலும் கல்வித் திறன் மேம்பட நிர்வாகம் சிறப்பானதாக இருந்தால் தான் முடியும் என்ற கருத்து மேலோங்கி ஒலிக்கிறது. ஆசிரியர் , மாண்வர்களின் நிர்வாகக் கண்காணிப்பு குறித்து அதிகம் கூறப்படுகிறது. பள்ளிக் கல்வியில் பணி உயர்வு அவ்ர்களின் செயல்திறன் சார்ந்ததாக இருக்கலாம என்ற கேள்வியையும் (ஆரம்பக் கல்வி-பக்கம் 11) உயர்கல்வியில் ஆசிரியர்களின் வேலை சிறப்பாக இல்லையென்றால் அவர்களை வேலை நீக்கம் செய்யலாமா, கல்வியில்லாத துறைகளுக்கு மாற்றலாமா போன்ற உள்ளிட்ட கேள்விகளை முன் வைக்கிறது (உயர் கல்வி-பக்கம் 6).அதே போல் திறமையான ஆசிரியர்களைக் கண்டறிய காண்ட்ராக்ட் முறையைக் கைகொள்ளலாமா அல்லது மைப்படுத்தப்பட்ட ஆசிரியர் தொகுப்பு உருவாக்கி அதிலிருந்து ஆசிரியர்களை அனுப்பலாம் எனக் கேள்விகளை முன் வைக்கிறது. 



ஒரே சீராக்குதல் ( Uniformity): அனைத்து மட்டங்களிலும் ( நகரம், கிராமம், மலைப் பகுதி, கடலோரம்) ஒரே மாதிரியான அள்வுகளைப் பெற நினைத்தல் என்பது பல்வேறு பன்முகஇயற்கை, சமுதாயம்,கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டில் இது கேலிக்கூத்தாக உள்ளது. 



சர்வதேச மயமாக்கல் (Internationalization): பள்ளிக் கல்வியில் முதல் (ஆரம்பக் கல்வி பக்கம்-4) உயர்கல்வி வரை சர்வதேசத் தரம் என்றும், உலகப் பாடத்திட்டம் (Global Syllabus) என உளறி உள்ளது. அந்நியப் பல்கலைகழகங்களுக்கு திறந்து விடும் நோக்கம் பளிச்செனத்தெரிகிறது (உயர் கல்வி-பக்கம் 47)



தொழில்மயக் கல்வி (Vocationalisation): கல்வி என்பது அறிவை விருத்தி செய்யும் கருவியாகும். தொழில் கல்வி எனபது ஒரு வேலையைச் செய்வதற்கான அறிவைப் பெறுவது என்பது போய் வேலைக்கான திறனைப் பெறுவதே இதன் நோக்கமாக உள்ளது (ஆரம்பக்கல்வி-பக்கம் 8) வேலை, வேலைச் சந்தை எனச் சுற்றிச் சுற்றிப் பேசி எட்டாம் வகுப்பில் இருந்து தொழில்மயக் கல்வியைத் துவக்க உள்ளது. தற்போது வேலை வாய்ப்புகள் (Feasible Employment), வேலைக்கேற்ற திறன் (Employability) என்று எல்லோரும் விரும்பும் பொதுப் புத்தியைப் பயன்படுத்தி இந்த சூழ்ச்சியைச் செய்துள்ளது. 

இதனால் பெரும் பகுதியினர் எட்டாம் வகுப்புடன் தண்டவாளம் மாறி செல்ல உள்ளனர். தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அறிவு-தொழிநுட்ப பிரிவினர் என இரு சாதியினர் உருவாக உள்ளனர். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் அறிவு சாதியினராகவும் பெரும் பகுதியினர் தொழிற்கல்வி கற்ற கூலி வேலைக்கர்ரர்களாக மாற உள்ளனர். மாண்வர்களின் எண்ணிகைக்கு ஏற்றவாறு கல்லூரிகள் அதிகரிக்கப்படாமல் கலை அறிவியல் கல்லூரிகள் மூடப்பட்டு சமுதாயக் கல்லூரிகளாக மாற்றப்பட உள்ளன.

தகவல், தொடர்பு, தொழில்நுட்ப வழிக் கல்வி ( Information, Communication, Technology) : கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த்ப் பேசாமலும் அது கல்விக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என பரிந்துரைக்காமலும் கல்வியவே தகவல், தொடர்பு, தொழில்நுட்ப வழி கொடுக்க முனைவதே இந்த கொள்கையின் பரிந்துரையாக உள்ளது (ஆரம்பக் கல்வி-பக்கம் 6) அதாவது ஆன் லைன் படிப்பு, திறந்த வெளிப் பல்கலைப் படிப்பு எனப் பரிந்துரை செய்கிறது. 

சந்தைமயமாக்கல் ( Market oriented) : அறிவு என்பது சந்தைக்கானதாகக் கருதப்படுகிறது. அறிவியல், கணிதம் பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் (ஆரம்பக் கல்வி-பக்கம் 6) கொடுக்கிறது. அது அறிவியலுக்கானதாக இல்லாமல் வணிகத்திற்கானதாக மாறும் வாய்ப்புள்ளது எனவே கல்வியை சந்தைக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளது. அதன் பின்னர் வணிகம், கன்சல்டன்சி போன்ற கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பேட்டண்ட் பெறுதல் போன்ற அறிவைத் தனியுடமை ஆக்கும் முயற்சிக்கு வழி வகுக்கிறது. சமூக அறிவியல் புறந்தள்ளப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளது. 

மூன்று “பீ”க்கள்-”PPP” ( Public Private Partnership): நிதி ஒதுக்கீடு பற்றி எந்தவிதமான பரிந்துரைகளும் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் ஆரம்பக்கல்வி (ஆரம்பக் கல்வி- பக்கம் 6) முதல் உயர் கல்வி வரை மூன்று “பீ”க்கள் வர இருக்கிறது. தனியார் பங்களிப்பு போதிய பயன் தரவில்லை எனக் கூறி தனியார் நிறுவனங்கள் கலை அறிவியல் கல்லூரிகள் மீது பணத்தை போட விரும்பாத போது அவை தொழில் நிறுவன வணிகக் கல்வி நிறுவனங்களாக ( Entrepreneurial Business School) மாற்றப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. தனியாருக்கு அனைத்து வகையிலும் அவுட் சோர்சிங் செய்யப் பரிந்துரைக்கிறது. தனியார் பங்களிப்பு போதிய பயன் தரவில்லை எனக் கூறும் இந்தக் கொள்கைக்குறிப்பு இதை விலக்கிக் கொள்ளாமல் எப்படி இதனை பயன்படுத்தலாம் என்ற வகையில் விவாததிற்கு விட்டுள்ளது.

சமூக நீதி (Social Justice) இல்லாமை: எந்த இடத்திலும் சமூக நீதி என்ற வார்த்தையே இல்லை. ஆனால் கல்வியில் விடுபடுபவர்களை தலித், மலை ஜாதியினர், சிறுபான்மையோர், பெண்கள், சிறப்புக் கவனம் பெற வேண்டியவர்கள் ஆகியோர்களை Gaps என்ற வகையில் குறிப்பிடுகிறது. இவர்களுக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என கேள்விகளை முன் வைக்கிறது. அதில் ஒரு கேள்வி: கல்வி உரிமைச் சட்டம் மைனாரிட்டி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளதால் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் என்னென்ன என உள் குத்து விட்டிருக்கிறது. (ஆரம்பக்கல்வி-பக்கம் 21)

Inclusion என்ற பெயரில் தகுதி அடிப்படையில் வர இயலாதவர்களை உள்ளிழுத்துக் கொள்வது அரசின் பெருந்தன்மை என்று குறிப்பிடுகிறது. சமூக நீதி என்ற கடமை கைவிடப்படுகிறது. கல்வி என்பது அடிப்படை உரிமை எனப்தும் மறுக்கபப்டுகிறது. கற்பவர்கள் பயனாளிகள் என்ற கண்ணோட்டம் உருவாக்கப்படுகிறது. தலித், மலை ஜாதியினர், சிறுபான்மையோர், பெண்கள் ஆகியோருக்கான சமூக நீதி இதில் இல்லை. விவசாயம், கைத்தொழில்கள் பற்றிய அக்கறை எங்கும் இல்லை.

கலாச்சார ஒருங்கிணைப்பு ( Cultural Integration): கலாச்சார ஒருங்கிணைப்பு என்ற பெயரில் உயர்கல்வியில் ஃப்வுண்டேசன் கோர்ஸ் குறித்தும், இண்டாலஜி (Indology) ஆகியன பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக இருக்கலாம என்ற கேள்விகளை முன் வைத்துள்ளது. மேலும் மொழி மூலமாக ஒருங்கிணைப்பு சாத்தியமா என்பதையும் அனைத்து பல்கலைக் கழ்கங்களும் முக்கிய மொழித் துறை ஆரம்பித்து அதில் சாகும் தறுவாயில் உள்ள மொழிகள் அல்லது மறந்து போன மொழிகள் குறித்த முக்கிய கவனம் செலுத்தலாமா என்ற கேள்வியையும் போடுள்ளதின் உள் நோக்கம் புரிகிறதா? (உய்ர்கல்வி-பக்கம் 39)  

இறுதியாக ஆரம்பக்கல்வியில் பல்வேறு கொள்கைகள், அமுலாக்கல், மதிப்பீடுகள் என பல வகையான தரவுகள் உள்ளன..கோத்தாரிக் கமிஷன், ஆச்சார்யா ராமமூர்த்தி அறிக்கை, யஷ்பால் அறிக்கை, 1986 கல்விக் கொள்கை, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி இயக்கம், கல்வி உரிமைச் சட்டம் இருந்தும் எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

இதே போல் உயர்கல்வியில் உருப்படியான ஆய்வுகள், அறிக்கைகள் இல்லாவிட்டாலும் யுஜிசி அமைத்தது, புதிய பொருளாதாரக் கொள்கை, பிர்லா- அம்பானி அறிக்கை, தேசிய அறிவுக் கமிஷன் (National Knowledge Commission) என சிற்சில அனுபவங்கள் இருந்தும் அவைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மேலும் நமது கல்வியில் பலமும் பல்வீனமும் தொடர்ந்து இருந்து வந்து கொண்டே இருக்கிறது. அதனை ஆராய்ந்து புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படவில்லை. மக்களில் பலர் குறிப்பாக மத்திய தர வர்க்கத்தினர் நமது கல்வி மீது நம்பிக்கை இல்லாமல் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பது உண்மை. இதைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு இக்கல்விக் கொள்கையைத் தயாரித்து உள்ளது. ஆனால் அதே சமயத்தில் நமது சமூகத்தில் 40% மேல் உள்ள சாதாரண மக்களின் கருத்துக்களைக் கண்டு கொண்டதாக இல்லை. 

நாமும் கல்வியில் மாற்றம் வேண்டுமென விரும்புகிறோம். கல்வியில் உள்ள பிரச்சினைகள், சவால்கள் ஆகியனவற்றைக் கணக்கில் கொள்ளாமல் கல்வியினால் வேலைக்கான வாய்ப்பில்லை ( Un employable) என்றும் கல்வி பெற்று வருபவர்கள் வேலைக்கான் திறன் பெறவில்லை ( Employability) என்ற ஒரே கருத்தை மையப்படுத்தி மட்டுமே இக்கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது. கல்வி என்பது வேலை சார்ந்தது மட்டுமல்ல அறிவு வளர்ச்சி, சமூக மாற்றம் ஆகியன சார்ந்தது உயரிய கண்ணோட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

எனவே இக் கருத்துக்களின் அடிப்படையில் கருத்துக் கேட்கும் கூட்டங்களில் நாம் பங்கேற்க வேண்டும். ஆனால் அரசின் விவாதத்திற்கு விடப்பட்டுள்ள தலைப்புகளுக்கு (Themes) மாற்றாக பின் வரும் தலைப்புகளில் நாம் மக்களிடம் விவாதிக்கலாம் எனத் திட்டமிடபப்ட்டுள்ளது:

பள்ளிக் கல்வி:  கல்வியின் நோக்கம், பாடத்திட்டம், கல்வியின் படிநிலைகள், கற்பிக்கும் முறை , அமைப்பின் பிரச்சினைகள் , சமமான, தரமான கல்வி உரிமை,  ஆசிரியருக்கான கல்வி, தேர்வு முறை, உடற் பயிற்சி & உடல் நலம், பாரம்பரியம் (Heritage) , கைத்திறன் (Crafts), கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு, வேலைசார் கல்வி, நிதி , வயது வந்தோர் கல்வி, சமூகப்பங்கேற்பு. 

உயர்கல்வி : உயர்கல்வியின் இலக்கு ,உயர்கல்வியின் விரிவாக்கம் , சமூகப்பிரச்சினைகள் , ஆசிரியர், அவர்களின் திறன் வளர்ப்பு , சமூகத்திற்கான ஆராய்ச்சி & கண்டுபிடிப்பு , கல்வியில் தொழில்நுட்பத்தில் பங்கு, தொழிற் நிறுவனங்களின் பங்கு , பரவலாக்குதல் (Decentralization) கொள்கை , ஒழுங்குபடுத்துதல் ( Regulation) , வேலை வாய்ப்புகள் உருவாக்குதல் 

(சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்புபின் (AIPSN) தென் மண்டலக் கூட்டத்தில் 2015 ஜூலை 4&5 விவாதிக்கப்பட்ட்டது) 
பொ.இராஜமாணிக்கம்
துணைத் தலைவர்
 அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (AIPSN)

Sunday 16 August 2015

தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு ஆய்வுக்கட்டுரை தலைப்பு அறிவிப்பு

தினமலர் நாளிதழ், ஆக.17.2015 கம்பம்: 

எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைக்கான மையப் பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் கூறியதாவது:கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறைகளையும், அறிவியல் கல்விக்கான புதிய ஆலோசனைகளை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவுமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 2003 முதல் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புக்களால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த ஆண்டிற்கான மையப் பொருளாக 'செயல்பாடுகளின் மூலம் அறிவியல் கற்றல்,' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. துணைப் கருப்பொருள்களாக செலவில்லாத மற்றும் புதுமையான கற்றல் கற்பித்தல் கருவிகள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை பள்ளிகளில் இருந்து சமூகத்திற்கு கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள், சுயசார்பிற்கான அறிவியல், புதுமையான மதிப்பீட்டு உத்திகள், புதுமையான அறிவியல் தொழில்கல்வி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டியில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள், ஆசிரிய பயிற்றுனர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்கலாம்.

ஆய்வுச்சுருக்கம் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 5, ஆய்வுக் கட்டுரைகள் முடிவுகள் செப்டம்பர் 15 ல் வெளியிடப்படும். தேசிய அளவிலான மாநாடு டிசம்பரில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும்.

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
A.P.Deshpande, NationalConvenor, 8 th NTSC, c/o Marathi Vidnyan Parishad, Vidnyan Bhavan, V.N. Purav Marg, Sion-Chunabhatti (E), MUMBAI 400 022 E.mail : mvp@8thntsc.org indub.puri@nic.in

Wednesday 12 August 2015

8th National Teachers' Science Congress, at IISER, Pune on 17-19 December, 2015 - Call for papers

The National Council for Science & Technology Communication (NCSTC), Department of Science & Technology, Government of India started National Teachers' Science Congress (NTSC) in the year 2003, as a biennial activity. NTSC aims at providing a platform to the science and mathematics teachers to communicate their ideas, share newer experiments in teaching methodology and science education.




  • To provide an opportunity to science teachers to present their innovative approaches in science teaching, before the teaching community;
  • Allow teachers to pick up good ideas of other teachers and use them in their teaching practices;
  • To attend and imbibe lecture sessions of scientists/educationist and get inspiration from them.

Science and technology awareness and education is a challenging task before the nation. The success of science education depends largely on the effective teaching done at the school level. It has to be understood that science is both a process as well as a product. The method of science involves formulation of a hypothesis, testing, data collection, observation, analysis and drawing inferences based on the gathered information.

The challenge before the teachers is that learners should imbibe the methods of science for learning. In today's scenario, where both the teachers and the students are heavily burdened by the curricula, the students often resolve to rote learning rather than imbibing the method of science. As a result, the learning is compromised, and in order to improve the science communication, teachers experiment with the innovative methods of teaching and learning.

Keeping this premise in view, the focal theme of 8th NTSC has been chosen as Learning Science by Doing. Findings of many researches reveal that learners retain much more and comprehend easily through practice of learning science by doing. The theme for the present edition of NTSC will give an opportunity to the teachers to learn newer practices in communicating science and technology through learning by doing and hands-on experimentations.
  • 1. Innovative use of low cost / no cost teaching learning materials
  • 2. Challenges of Science, Technology, Engineering and Mathematics (STEM) education - from schools to society
  • 3. Science for self-reliance
  • 4. Innovative assessment techniques
  • 5. Inclusive STEM education
  • 6. Innovative vocational science education
Teachers of upper primary, secondary and Sr. secondary levels will be encouraged to present papers on the above mentioned themes and sub themes, the core approach should be that of "Participatory learning". The teachers will be further required to give details of their tools adopted for imparting innovative teaching learning experiences, learning science by doing and experimentation.

Besides teachers educators of vocational/open schools/teachers educators/DIET faculty/B.Ed and university researchers, scientists, technologists and activists are also eligible to submit their papers.
NCSTC is contemplating Regional Orientation Workshops to orient teachers on the theme and spirit of 8th NTSC - Learning Science by Doing. The workshops aim at enabling teachers to fine-tune their paper submission process. Accordingly, it is proposed to hold FIVE Regional Orientation Workshops at the Regional Institutes of Education - Ajmer, Bhopal, Bhubaneswar, Mysore, and Shillong.

The interested teachers can register themselves for the Workshop. Due to limited number of seats, the selection would be on the merit, based on a write-up of about 500 words of their work on any of the sub-themes, mentioned hereinabove. The teachers should give brief details of their innovative teaching methodologies, techniques and models used, in either English or Hindi language. And send it as a hard copy to the National Convenor, 8th NTSC, c/o Marathi Vidnyan Parishad, Vidnyan Bhavan, V N Purav Marg, Sion-Chunabhatti (E), Mumbai 400 022, or email as soft copy tomvp@8thntsc.org, and indub.puri@nic.in, latest by June 30, 2015.
**** All those, who have submitted papers, have been selected for orientation workshops ****
RegionDatesStates involvedOrganizer
NorthJuly 20-21, 2015Delhi, Punjab, Haryana, Rajasthan Uttar Pradesh, Uttarakhand, Jammu & Kashmir, Himachal PradeshRegional Institute of Education, Ajmer
Capt.D.P.Chaudhari Marg, Ajmer,Rajasthan
Prof.V.P.Singh- 09818102115
North-EastAugust 19-20,2015Assam, Tripura, Mizoram, Meghalaya, Nagaland, Manipur, Arunachal Pradesh, SikkimRegional Institute of Education,Shilong
Umiam,Barapani,Shilong
Prof.S.C.Roy - 09436701103
EastJuly 31 and Aug 1, 2015Bihar, West Bengal, Odisha, Jharkhand, ChhattisgarhRegional Institute of Education, Bhubaneshwar, Sachivalaya Marg,
A.G.Colony,Acharya Vihar, Bhubaneshwar,
Prof.A.K.Mohapatra - 09583201794
SouthAugust 7-8,2015Tamilnad,Karnatak,Kerala,Andhra, Pradesh,Telangana,Lakshadweep, Pondicherry,Andaman & NicobarRegional Institute of Education,Mysore
Manasgangotri,Mysore,Karnataka
Prof.V.V.Anand - 09448869859
WestAugust 13-14, 2015Maharashtra,Gujarat,Madhya Pradesh,Goa,Daman & Div, Dadra Nagar HaveliRegional Institute of Education,Bhopal,
Shyamala Hills,Bhopal,Madhya pradesh
Prof.L.K.Tiwary - 09424237431
Teachers can also submit their papers directly, i.e., without participating in the Orientation Workshop. Shortlisted papers would be invited for either oral or poster presentation during the 8th National Teachers' Science Congress, to be held during the month of December 2015. The dates and the venue for the national level event would be uploaded on the websites www.dst.gov.in and www.8thntsc.org

Full paper for the 8th NTSC should be of 2000 words maximum, along with an abstract of 200 words and 4-5 key words. The paper should be typed in Arial, 12 point font size, 1.5 line spacing, single side, black colour, in MS word format. As mentioned earlier, papers and subsequent presentations can be in either English or Hindi language. Time given for oral presentation would be 15 minutes, followed by 10 minutes for interaction. For poster presentation, 4 posters of 70 x 55 cm size, each would be allowed. Last date for paper submission is September 10, 2015.

Each participant can submit only one paper. There is a limited provision for providing local hospitality and travel assistance to the invited participants.

Registration Form:
Please click on the following link to download our Registration Form

For more Details: National Teachers Science Congress-2015