Wednesday 14 December 2011

அடுத்த ஆண்டில் தமிழக பள்ளிகளில் டிரைமெஸ்டர் முறை- அரசாணை வெளியீடு

சென்னை: அடுத்த கல்வியாண்டு முத்ல தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை டிரைமெஸ்டர் தேர்வு முறை பின்பற்றப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, பள்ளிக் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைத்து, அவர்களின் உடல் ரீதியான குறைபாடுகளை தவிர்க்கவும் முப்பருவ தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. 2012-2013 கல்வி ஆண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்புவரை இந்த முறை நடைமுறைக்கு வருகிறது. மேலும், முழுக் கல்வி ஆண்டுக்குரிய பாடப்புத்தகங்கள் 3 பருவங்களுக்கு ஏற்ப பிரிக்கப்படுகிறது. 

மூன்று புத்தகங்கள் : முதல் பருவம் என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரையும், இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையும், மூன்றாம் பருவம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையும் இருக்கும். இதற்கேற்ப பாடப்புத்தகங்கள் 3 பாகமாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டு முறையுடன் கூடிய தேர்வு நடத்தப்படும். இதனால் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படும். மேலும் ஆண்டு இறுதியில் பாடங்கள் மற்றும் மாணவர்களின் தனித்திறன்கள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தொடர்மதிப்பீட்டு முறைகள் : இதற்காக தொடர் மதிப்பீட்டு முறைகள் (சிசிஇ) கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டும், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு 2013-2014ம் கல்வி ஆண்டிலும் கொண்டு வரப்படும். முப்பருவ தேர்வு முறையில் பாடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளதால் கற்கும் மாணவர்களின் முழுத் திறனும் வெளிப்படும். மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படும். கலந்துரையாடும் தன்மை, எளிதில் கற்கும் தன்மை, போன்றவற்றை மாணவர்கள் பெறுவார்கள். ஆசிரியர்களுக்கும் அதிக பாடங்களை நடத்த வேண்டிய சிரமம் குறைகிறது. மேலும் பருவ முறை பாடத்துடன் மாணவர்களின் தனித்திறன்களும் தொடர் மதிப்பீட்டு முறையில் கொண்டு வரப்படுவதால், தரமான கல்வியை வழங்க முடியும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

தமிழக பள்ளிகளில் கடந்த ஆண்டுவரை மாநில பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறையில் கல்வி கற்பிக்கும் முறை இருந்தது. இதனால் மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுகிறது என்று திமுக ஆட்சி காலத்தில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி முறை பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை முழுக் கல்வி ஆண்டும் படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க முப்பருவ முறையை தற்போதய அரசு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த கல்வி முறை என்றாலும் ஏட்டுச்சுரைக்காயாக மட்டும் இல்லாமல் மாணவர்களின் வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய வகையாக இருந்தால் சரிதான் என்கின்றனர் பெற்றோர்கள்.


Monday 24 October 2011

‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''

எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Saturday, October 22, 2011




ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்

தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு?

எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது. இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல. எழுதிக் கொண்டே களப்பணி செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் களப்பணியே அதிகமாகிவிட்டது. படைப்பாளியின் நோக்கம் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதுதான். நாம் பார்த்த கண்டடைந்த வாழ்வனுபவங் களை சகமனிதர்களுக்குச் சொல்வது தானே எழுத்து. இருந்தும் கதை வழியாகச் சொல்வதைவிட, நேரடியாகச் சொல்வது உடனடி தேவை என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. மேலும் சுதந்தரத்திற்குப் பிறகு நடந்த மாபெரும் பண்பாட்டு இயக்கம் அறிவொளி இயக்கம். அப்படிப்பட்ட மக்கள் இயக்கம் அழைக்கும்போது வீட்டில் சும்மா இருக்கமுடியாது. அதனால் களப்பணிக்கு வந்தேன். இப்போது நேரமின்மையால் எழுத முடியவில்லை. ஆனால் நான்கு இரவுகள் கிடைத்தால் போதும் ஒரு சிறுகதை எழுதிவிடுவேன்.

தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் போனதில் வருத்தம் உண்டா?

கதை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் ஒவ்வொரு நாளும் எனக்குள் இருக்கிறது. நாம் யார் என்ற அடையாளம் இருக்கிறது. எனக்கு சிறுகதை எழுத்தாளர் என்ற அடையாளம் உள்ளது. ஆனால் நேரம் தான் போதுமானதாக இல்லை. இப்போது நிறைய பேர் எழுத வந்துள்ளனர். இது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மின்னணு ஊடகம் வந்த பிறகு மக்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. நல்ல நூல்களை வாசிக்கும் வாசகர்கள் குறைந்துவிட்டனர். இப்போது மேலோட்டமாக வாசிக்கும் மனநிலை வாசகர்களிடையே உள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மனநிலை. சுவாரசியமான சேனல் பார்க்கலாம்; இல்லையெனில் மாற்றிவிடலாம். ஆனால் அதேநிலையில் புத்தகங்களையும் மேற்கொள்ள முடியாது. உள்ளே போனால் படித்து தான் ஆகவேண்டும். அதற்கான காலம் எடுத்துதான் வாசிக்கவேண்டும். மேலும் தற்போது வெகுஜன இதழ்களில்கூட கதைக்கான இடம் என்பது இல்லாமல் போய்விட்டது. சில இதழ்களில் ஒரு பக்க கதை மட்டும் போடுகின்றனர். காரணம் சந்தையில் மதிப்பு இல்லை என்பதுதான். சீக்கிரம் சலிப்படைவது என்பது இன்றைய காலத்தின் மனநிலையாக இருக்கிறது.

ஒரு கலாச்சார இயக்கமாக தமுஎகசவின் செயல்பாடுகள்,தமிழகத்துக்கு செய்திருக்கும் பங்களிப்புகள் பற்றிக் கூறுங்களேன்?

தமிழ்நாட்டில் ஏழே கால் கோடி பேர் உள்ளனர். அதில் சில லட்சம் பேர்களைத் தொடுபவர்களாக நாங்கள் இருக்கிறோம். தமுஎகச தமிழ்ச் சமூகத்தின் மனச்சாட்சி. அந்தந்த நேரத்தில் மனச்சாட்சி என்ன பேசுமோ அதை எழுத்தாளர்கள் பேச வேண்டும். எழுத்தாளர்கள் என்ன பேசவேண்டும் என்பதை தமுஎகச சொல்லிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக விவசாயிகள் தற்கொலைகள் நடக்கும்போது, அதைப் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்கிறோம். எந்த ஊடகமும் சாதாரண விவசாயிகள் பற்றியோ, தொழிலாளிகள் பற்றியோ பேசுவதில்லை. முதல் பக்கத்தில் அவர்களைப் பற்றிய முக்கியமான செய்திகூட போடுவதில்லை. நாங்கள் மக்களின் மனச்சாட்சியாக இருந்து அதைப்பற்றி பேசுகிறோம். அன்று 35 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்தளவு வளர்ச்சி உள்ளது. பங்களிப்பைப் பொறுத்தவரை கலை இலக்கிய இரவு என்ற பண்பாட்டுத் திருவிழாவை நடத்து கிறோம். அதன்மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் திறன் வாய்ந்தவர்களை அந்த மேடையில் ஏற்றுவோம். அடுத்து தெரு சினிமா இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். நல்ல திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தெருக்களில் போட்டுக் காண்பிப்பது. இதன் மூலம் மக்களின் சினிமா ரசனையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அடுத்து நாட்டுப்புற ஆய்வுகள் இயக்கம் தொடங்கி யுள்ளோம். 1960&ல் ஜீவானந்தம் தலைமையில் பேராசிரியர் நா.வானமாமலை பொறுப்பில் நாட்டுப்புற இலக்கியங்களை, கலைகளை தொகுத்து வளர்த்தெடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இவை எத்தனையோ மாவட்டங்களில் தொகுக்கப்படாமல் உள்ளன. விடுகதை, சொலவடை, நாட்டுப்புறக் கதைகள், பொருட்கள் சார்ந்த பண்பாடு என நிறைய பிரிவுகள் உள்ளன. இதில் எப்படி ஆய்வு செய்வது, தொகுப்பது என்பது பற்றி பயிற்சி கொடுத்துள்ளோம். அடுத்து உள்ளூர் வரலாறு எழுத பயிற்சி கொடுக்கிறோம். இதையெல்லாம் தமுஎகசவால் மட்டுமே செய்யமுடியும். நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியம் கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதற்கு தமுஎகசவின் போராட்டம்தான் காரணம்.

கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்து இருக்கிறீர்கள். தமிழகம் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் யாரும் சொந்த ஊர்களில் இல்லை. ஏனெனில் பிழைப்பிற்கு இங்கே வழியில்லை. பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து அலைகின்றனர். நான் பார்த்த பெரிய துயரம் இது. அடுத்த துயரம் அழிக்கமுடியாத சாதிய உணர்வு. அது மக்களிடையே இறுகிப் போய் உள்ளது. சிறுபான்மையினராக இருக்கும் மக்களான அருந்ததியினர், அரவாணிகள் எல்லோரும் தங்கள் குரலை வலுவாக உயர்த்தி வெளிவந்துள்ளனர். மாற்றுத்திறனாளி கள் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட அனைவரும் இன்று வெளிவந்துள்ளனர். அடுத்து அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கம் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த முறையில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற, அறிவில்லாத நாற்கர சாலைகள் வந்துள்ளன. இதனால் கிராமங்கள் துண்டாகிக் கிடக்கின்றன. இதில் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அடுத்து தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. தொழிலாளிகள், படைப்பாளிகள், இளைஞர்கள் என அனைவரும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஏனெனில் பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிரச்னைகளைச் சமாளிக்க தெரியாமல் அல்லாடுகின்றனர். பொருளாதாரப் பிரச்னைகளை பண்பாட்டுத் தளத்தில் வைத்துத் தீர்க்க முயற்சி செய்கின்றனர். இதனால் அதிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையாவதும், கோவிலுக்குச் செல்வதும், சினிமாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதும் அதிகரித்துள்ளது.

அறிவொளி இயக்கத்தில் உங்கள் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?

அறிவொளி இயக்கம்தான் கல்வி என்பது முக்கியம் என்பதை மக்கள் மத்தியில் அழுத்தம் திருத்தமாக உணர்த்திய இயக்கம். அறிவொளி இயக்கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். முதியோர் கல்வி என்பது வேறு. அறிவொளி இயக்கம் என்பது வேறு. நாங்கள் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே சேர்த்து நடத்தினோம். ஏனெனில் இவர்கள்தான் நாளைய பெற்றோர். இவர்கள் படிக்கமுடியவில்லை என்றாலும் அவர்களது குழந்தைகளின் கல்வியை உணர்த்தினோம். இதனால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகமானது. பள்ளிகளின் தேவையும் அதிகமானது. கல்வி குறித்து மக்களிடையே அக்கறை ஏற்பட்டது. பள்ளிகள் ஏன் இப்படி இருக்கின்றன என்ற கேள்வியையும் மக்களிடையே எழச் செய்தது. கல்விக்காக இன்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மக்கள் வந்ததற்கு அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம். இதனால் அரசும் பல திட்டங்களை வகுத்தது. தமிழகம் முழுவதும் கல்வி சம்பந்தமான நிறைய மாற்றங்கள் வந்தன.

தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லாமல் போய்விட்டதே... என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

இடதுசாரி இயக்கங்கள் இன்று நிறையவே வளர்ந்துள்ளார்கள். ஆனால் மற்ற கட்சிகள் அதைவிட வேகமாக வளர்ந்துள்ளன. காரணம் இடதுசாரிகள் உண்மையான, அடிப்படையான பொருளாதார மாற்றத்திற்குப் போராடி வந்தனர். ஆனால் மக்கள் பண்பாட்டு ரீதியாகப் பேசுபவர்கள் பக்கம் போய்க் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டு ரீதியான விஷயங்களில் இடதுசாரிகள் கவனம் செலுத்தினால்தான் வேகமாக முன்னேறமுடியும். திராவிட இயக்கம் மொழி சார்ந்து பேசி வளர்ந்தது. இன்று தலித் அமைப்புகள் ஓரளவு வளர்ந்துள்ளன. ஆனால் எந்த அமைப்பும் தலித் மக்களுக்கு நிலம் தேவை என்று பேசவில்லை. நிலம் கிடைத்தால்தான் முன்னேற முடியும் என்பது அடிப்படை உண்மை. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு நிலம் வேண்டி போராடி வரும் ஒரே கட்சி இடதுசாரி இயக்கம் தான். ஆனால் தலித் மக்கள் தலித் அமைப்புகளுக்குப் பின்னால்தான் சென்றனர். காரணம் அன்றாடம் அவர்கள் அனுபவிக்கிற ஒடுக்குமுறையை அந்தக் குரல் வெளிப்படுத்தியது. அவர்கள் பொருளாதாரத்தைப் பேசவில்லை; உணர்ச்சிகளை மட்டுமே பேசினர். உணர்ச்சிகரமான மக்களாக இந்திய மக்கள் இருப்பதால் உண்மையான அரசியலைப் பேசும் இடதுசாரிகள் வளரவில்லை. இப்போதுதான் அவர்கள் பண்பாட்டுத் துறையில் கவனம் செலுத் தத் தொடங்கியுள்ளனர். சாதிய பிரச்னை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை ஏற்படுத்தியுள்ளோம். உத்தபுரம் ஆரம்பித்து இதுவரை 25 சாதிய சுவர்களை இடித்துள்ளோம். கலை இலக்கியத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் எதிர்காலத்தில் இடதுசாரிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

அரசு விருதுகள் தேர்வுக்குழுவில் இடதுசாரிகள் இருந்துகொண்டு அமைப்பு சார்ந்த சராசரியான எழுத்தாளர்களுக்கு விருதுகளைத் தருகிறார்கள் என்ற விமர்சனம் உள்ளதே?

தேர்வுக்குழுவின் தகுதியைப் பொறுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. பெயரை மட்டும் அறிவிக்காமல் எதற்காக கொடுக்கிறோம் என்பதை வெளிப்படையான விளக்கத்தோடு அறிவிக்கவேண்டும். அப்போதுதான் கேள்வி எழுப்ப முடியும். தமுஎகச ஆரம்பித்து 36 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் அமைப்பு சார்ந்து யாருக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததில்லை. இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுத்ததில்லை. தமுஎகசவில் இருந்து முதல் முறையாக சாகித்ய அகாதெமி வாங்கியது மேலாண்மை பொன்னுச்சாமி மட்டும்தான்.

உ.ரா. வரதராஜனின் தற்கொலையை முன்வைத்து உங்கள் கட்சி ஒழுக்க வாதப் பிடியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது பற்றி?

அவர் தற்கொலை செய்துகொண்டது ரொம்ப தவறான முடிவு. அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான வழிகாட்டி. எனக்கு அந்தச் சம்பவம் மனரீதியாக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்த தவறு உறுதியான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் நடவடிக்கை என்பது திருந்துவதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு. அவரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. இருந்த பொறுப்பில் இருந்து அடுத்தகட்ட பொறுப்பிற்குப் போட்டனர். அதனைச் சரி செய்து திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். இதுமாதிரி நிறைய உதாரணங்கள் உள்ளன. சில விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வந்தோம். என்னுடைய நலனை பொதுநலன் மற்றும் கட்சியின் நலனிற்கு உட்படுத்துவேன். கட்சியின் நலனை மக்களின் நலனிற்கு உட்படுத்துவேன் என எழுதி கையெழுத்திட்டுதான் வந்துள்ளோம். இதனை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சும்மா கட்சியைத் திட்டுவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தை நாங்கள் ஒழுக்கரீதியாகப் பார்க்கவில்லை. இருந்தும் மக்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள்? என்பது முக்கியம். மக்களிடையே கம்யூனிஸ்ட் பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் இப்படி இருக்கலாமா? என்றுதான் நினைப்பார்கள். எந்த மக்களுடன் வேலை செய்கிறோமோ அங்கே கம்யூனிஸ்ட் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.

ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பொதுநலன்தான் முக்கியம் என்று இருக்கவேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் என்பவன்தான் வாழும் காலத்தில் மனித குலம் சேகரித்து வைத்துள்ள அத்தனை அறிவையும் உள்வாங்கவேண்டும். அறிவாளியாக, படைத்தளபதியாக இருக்கவேண்டும். உலகத்திலேயே மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் சபலம், சலனம் இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். சுயஒழுக்கத்தை அவனே உருவாக்க வேண்டும். விமர்சனம், சுயவிமர்சனம் என்பதை கறாராக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். சுற்றி நடப்பதை, இருப்பவர்களை, சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும். தன்னையும் சுயவிமர்சனப்படுத்திக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது மனரீதியான விஷயம். மிகப்பெரிய ஞானிகளால் கூட ஒரு சரியான கம்யூனிஸ்ட் தோழரின் மனஇடத்திற்குப் போக முடியாது. எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட். இவன் அடைகிற மனஉளைச்சல் யாரும் அடையமுடியாது. அடுத்தவர்களுக்காக அடி, உதை வாங்குவதில் ஏற்படும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை என்று நினைப்பவர்களும் அவர்கள் தான்.

இராணுவப் பணி உங்கள் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிக் கூறுங்கள்?

நான் இராணுவத்திற்குப் போகும்போது காந்தியவாதியாகப் போனேன். அந்த வாழ்க்கை என்னை மார்க்சியவாதியாக மாற்றியது. இந்த நாட்டின் சொத்து களை, மக்களைப் பாதுகாக்க தேச எல்லையில் இருந்து பணியாற்றுகிறோம். ஆனால் உண்மையில் கோடிக்கணக் கான மக்கள் சொத்தோ சுகமோ இல்லாமல்தான் வாழ்கின்றனர். பிறகு யார் சொத்தைப் பாதுகாக்க தேச எல்லையில் நிற்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. தேசம் என்பது மக்கள்; எல்லையல்ல. மக்களின் நல்வாழ்வு தான் தேசம். எல்லோருக்கும் நல்வாழ்வு கிடைக்க மக்களோடு இருந்துதான் போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் ஐந்தரை ஆண்டு பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.

தாத்தா தொடங்கி சகோதரர்கள் வரை நாடகம், எழுத்து என்ற தொடர்பைக் கொண்ட குடும்பம் உங்களுடையது. உங்களுக்கும் கோணங்கிக்கும் முருகபூபதிக்கும் படைப்புரீதியாக உரையாடல்கள் நடக்குமா?

இதில் எங்கள் அப்பாவை விட்டுவிட்டீர்கள். அவரும் எழுத்தாளர் தான். இரண்டு நாவல், ஒரு சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார். எல்லோருமே இலக்கியத் தொடர்பு உள்ள ஆட்கள் தான். இப்போது வீட்டில் நான்கு எழுத்தாளர்கள் உள்ளோம். நாங்கள் நாலு பேருமே நாலு திசையில் இருக்கிறோம். அவரவர் பாணியில் மக்களை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறோம்.

கோணங்கியின் கதைகள் புரியவில்லை என்று சொல்லப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

புரியாத தன்மை இருக்கிறது. ஆனால் அதுமட்டும்தான் இலக்கியம் என்று கோணங்கியின் எழுத்துகளை மட்டுமே படிப்பவர்கள் ஐநூறு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்து முறை புரிகிறது; பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு அதில் விமர்சனம் இருக்கிறது. அப்படி எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஓரளவு வாசிப்புள்ள மக்களுக்காவது அந்த எழுத்து புரிய வேண்டும். ஆனால் அவர்கள் (கோணங்கியும் முருகபூபதியும்)எது இலக்கியம் என்று நினைக்கிறார்களோ அப்படி எழுதுகிறார்கள். அதை சாதாரணமாக எழுதவில்லை. அதில் கடுமையான உழைப்பும் இருக்கிறது.அது அவர்களின் சுதந்திரம்.

இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழகப் பின்னணியில் இடதுசாரிகளின் தேவையும் பங்களிப்பும் என்ன?

இடதுசாரிகள் இல்லை என்றால் மக்களை நூறு சதவிகிதம் அடிமையாக்கிவிடுவார்கள். ஒரு கட்டம் வரை குட்ட குட்ட குனிந்துகொண்டேதான் இருப்பார்கள் மக்கள். சுதந்தர காற்று தமிழகத்தில் இருப்பதற்கு கம்யூனிஸ்ட் மட்டும்தான் காரணம். இன்று வேலை செய்யும் அத்தனை பேருக்கும் சங்கம் என்ற ஒன்றை வைத்து குரலை உண்டாக் கியது கம்யூனிஸ்ட் கட்சிதான். இல்லை யென்றால் குரலே இல்லாமல் இந்தச் சமூகம் அடிமையாகியிருக்கும்
ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல் – 2011 அக் 30-த சண்டே இந்தியன் இதழில்
நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்

Sunday 25 September 2011

சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் காலாண்டுத் தேர்வு தொடங்கியது

சென்னை: 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் காலாண்டுத் தேர்வு இன்று தொடங்கியது. 

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு கடுமையான சட்டப் போராட்டத்தை சந்திக்க வேண்டி வந்தது. இறுதியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 இந்தக் குழப்பம் காரணமாக பள்ளிகள் திறப்பு்ம், பாடத் திட்டம் வழங்குதல் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு தாமதம் ஏற்பட்டன. இதனால் மிகக் குறுகிய காலத்திற்குள் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் கூட பல பள்ளிகளில் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 இந்த நிலையில் செப்டம்பர் 22ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கின. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வு இன்று தொடங்கியது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. அதேசமயம், தனியார் பள்ளிகளில் ஏற்கனவே தேர்வு தொடங்கி விட்டது. 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் காலாண்டுத் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday 21 August 2011

சமச்சீர் கல்வியை ஏற்க மறுக்கும் மெட்ரிக் பள்ளிகள்: தவிக்கும் மாணவர்கள்


நெல்லை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகும் நெல்லையில் உள்ள ஒரு சில மெட்ரிக் பள்ளிகளில் பழைய பாடதிட்டம பின்பற்றப்பட்டு வருகிறது. அரசு தேர்வு எழுதும் 10-ம் வகுப்புக்கு கூட மெட்ரிகுலேஷன் பாடம் நடத்துவதால் மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது. மெட்ரிக் பள்ளிகளை பொறுத்தவரை ஆங்கில வழி புத்தகங்களுக்குரிய கட்டணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக் கொள்ளலாம் அல்லது 26 பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் பல பள்ளிகள் இன்னும் புத்தகங்களைப் பெறவில்லை. இந்நிலையில் நெல்லையில் உள்ள ஒரு சில மெட்ரிக் பள்ளிகளில் மெட்ரிகுலேஷன் பாடத்தையே தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. அரசுத் தேர்வு எழுதவிருக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கூட மெட்ரிகுலேஷன் பாடங்களைத் தொடர்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Wednesday 10 August 2011

சமச்சீர் கல்வித் திட்டம்-அரசின் குழப்பத்தால் அநியாயமாக வீணாகிப் போன 60 நாட்கள்!

கடந்த 60 நாட்களாக விடை தெரியாமல் நீண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனால் இனிமேல்தான் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரச்சினையே ஆரம்பமாகப் போகிறது. 
 
அரசு - உனக்கு இலவச லேப்டாப் வேணுமா?
மாணவன் - வேண்டாம் 
அரசு - இலவச சைக்கிள் வேண்டுமா? 
மாணவன் - வேண்டாம் 
அரசு - வேற என்ன வேணும்? 
மாணவன் - படிக்க ஏதாவது ஒரு புக் கொடுங்க போதும் 

இதுதான் கடந்த 60 நாட்களில் தமிழகத்தை அதிகமாக வலம் வந்த எஸ்.எம்.எஸ்-ஸாக இருக்க முடியும். அந்த அளவுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும், விரக்தியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. 

மிக மிக எளிதாக அணுகப்பட்டிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை மிகப் பெரிய சட்டச் சிக்கலாக்கி கடைசியில் தனக்குப் பாதகமாக அதை முடித்துள்ளது தமிழக அரசு. மக்களின் மிகப் பெரிய வரவேற்புடன், அமோக ஆதரவுடன், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுக்கு இது நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவுதான், சறுக்கல்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

Saturday 6 August 2011

10-ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்கள் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வரும் 10-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வினியோகிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமச்சீர் கல்விக் குறித்த வழக்கு, நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் முன்பாக விசாரணைக்கு வந்தது. சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்துமாறும், ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்குமாறும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி கட்ட விசராணை நேற்றுடன் முடிந்தது. 

இதையடுத்து சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகடங்களை மாணவர்களுக்கு வினியோகிக்க வரும் 10-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. நேற்று நடந்த இறுதிகட்ட விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ் கூறியதாவது, சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் சமச்சீர் கல்வி முறையின் மூலம் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்பதலேயே அதை இந்தாண்டு நடைமுறைபடுத்தவில்லை. சமச்சீர் கல்வியை செயல்படுத்த தகுந்த விதிமுறைகள், தரமான பாடப்புத்தகங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, அடுத்தாண்டு அல்லது அதன் பின்னரோ அமல்படுத்த வேண்டும், என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் இன்னும் இயற்றப்படாததால் இந்தாண்டு அமல்படுத்தவில்லை. முந்தைய அரசு அவசர அவசரமாக சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதே தவிர அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 

தமிழக அரசு திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ எதிரானது அல்ல. சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் கருணாநிதி புகழ்பாடப்பட்டுள்ளது. அவரது புகழை நிலைநாட்ட சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை பயன்படுத்தியுள்ளனர். தமிழக அரசு தரமான சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது. இதை அடுத்த ஆண்டிலோ அல்லது வரும் ஆண்டுகளிலோ செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். சமச்சீர் கல்வி திட்டத்திற்கு முந்தைய அரசு வெறும் அரை மணி நேரத்திலேயே ஒப்புதல் அளித்தது என்று தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன் தெரிவித்தார். ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்தன. சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வரும் 10-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து ஆட்சேபம் இருப்பின் இரு தரப்பினரும் அதை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்பிக்கலாம் என்றனர். மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
நன்றி:tamil.oneindia.com

Thursday 21 July 2011

சமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்தது. நடப்பு ஆண்டிலேயே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜூலை 22-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

அதன்படி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்தது. அந்த மனுவில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடத்துடன் உள்ளன. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். 

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 26-ம் தேதி நடக்கிறது.

Saturday 16 July 2011

சமச்சீர் கல்வித் ரத்து செய்யப்படவில்லை, தரமான பாடத் திட்டத்துடன் அமல்படுத்துவோம்- தமிழக அரசு


சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யவில்லை. இந்த ஆண்டுக்கு மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தரமான பாடத் திட்டத்துடன் அதை அமல்படுத்துவோம் என்று தமிழக அரசு விளக்கியுள்ளது. 

சமச்சீர் கல்வித் திட்டம்தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் விசாரித்தது. தற்போது விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது இன்று தெரிய வரும். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தாக்கல் செய்து அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் பேசுகையில், முந்தைய அரசு வகுத்த சமச்சீர் கல்வி பாடத்திட்டமும், அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களும் தரமற்றவைகளாக இருக்கின்றன. அதனால்தான், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி நிபுணர் குழுவும், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை நடப்பு கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனவே, முறையான பாடத்திட்டமும், தரமான பாடப்புத்தகங்களும் தயாரித்த பிறகுதான் சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவேதான், சமச்சீர் கல்வி சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. 

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யவில்லை. தற்போது ஒத்திதான் வைத்துள்ளது. முறையான பாடத்திட்டம், தரமான பாடப்புத்தகங்களை கொண்டு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றார். தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்வது என்பது குறித்து நிபுணர் குழுவை அமைத்துப் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் குழு தனது பரிந்துரையை அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன் மீது ஒரு வாரகாலத்திற்கு விசாரணை நடந்தது. தற்போது தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 மாதங்களாகி விட்ட நிலையில் 1 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு புத்தகமே இல்லாத நிலையில் வகுப்புகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 2 July 2011

செயல்வழி கற்றல் உருவானது எப்படி? புரட்சி அல்ல இது: பரிணாம வளர்ச்சி

தமிழக அரசு நடத்தும் 37 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளுள் ஏதாவது ஒன்றில் நுழைந்தால், முந்தைய பாரம்பரிய வகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் வித்தியாசமான சூழலை, இப்போதெல்லாம் உணர்கிறேன்.



தொழிற்சாலைகள் உள்ள ரோபோக்கள் போல, குழந்தைகள் எழுந்து நின்று, “குட்மார்னிங் சார்…’ சொல்வதில்லை. மாறாக, தங்கள் செயல்பாடுகளில் உன்னிப்பாக ஈடுபடுகின்றனர். இது, வகுப்பறைகளில் இரண்டு பெரிய, நல்ல மாற்றங்களை உணர்த்துகின்றன; கற்கும் முறையில் குழந்தைகள் ஆழமாக ஈடுபடுகின்றனர் என்பதும், பழைய முறையிலான அடிபணியும் கலாசாரத்திலிருந்து, பள்ளிகள் மாறிவிட்டன என்பதும்!

இந்த மாற்றத்தை, கல்விப் புரட்சி என்று கூறக் கூடாது; பள்ளி கல்வியின் பரிணாம வளர்ச்சி என்றே கூற வேண்டும்! செயல்வழிக் கற்றல் திட்ட சீர்திருத்தம், கற்பித்தலில் தொடங்கி கற்றல் வரை, பல முக்கிய படிகளை தாண்டி வந்துள்ளது. பாரம்பரிய வகுப்புகள், கற்பிக்கும் சூழ்நிலையில் அமைந்திருக்கும். ஒரு ஆசிரியர் அதிகாரத்துடன் பாடம் நடத்தி கொண்டிருப்பார். அவர் நடத்தும் பாடத்தை, மாணவர்கள், பயத்துடன், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாத வகையில் கேட்டு கொண்டிருப்பர். செயல்வழிக் கல்வித் திட்ட வகுப்பு, கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. இங்கு, மாணவன் தான் ஹீரோ; தன் சொந்த முயற்சியில் பாடங்களைக் கற்றுக் கொள்ள அவனுக்கு முழு அதிகாரம் உண்டு. கற்கும் முறையில் அவனுக்கு உதவுவது மட்டுமே ஆசிரியர் பணி. இது, மிகவும் நுட்பமான, ஆனால், குறிப்பிடத்தக்க மாற்றம். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? ஒரே நாளில் நிகழ்ந்ததா? இதற்கு யார் யாரெல்லாம் பொறுப்பு? இது குறித்து வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது, இது புரட்சியல்ல; நூறு ஆண்டுகளாக முயன்று அடித்தளம் போட்டு, அதன் காரணமாக உருவான பரிணாம வளர்ச்சி என்பதை நாம் உணர்வோம்.

வளர்ந்து கொண்டிருக்கும் மரம், மண்ணுக்கு அடியில் தன் வேரை பரப்பி, பலமான அடித்தளம் அமைக்கும்; பலமான வேர் அமையும் போது தான், மரமும் செழிக்கும். நம் கண் முன் தெரிவது, மண்ணுக்கு மேல் உள்ள மரம் தான்; பலமாக அமைந்துள்ள வேரை, யாரும் காண்பதில்லை. எனவே, இந்த செயல்வழி கற்றல் திட்டத்தை உருவாக்க காரணமாக அமைந்த, சில முக்கிய வேர்கள் குறித்து நாம் இப்போது பார்ப்போம். கற்பிக்கும் அதிகார மையங்கள், கல்வி இயக்கங்கள் மற்றும் நிர்வாக/ அரசியல் அதிகார மையங்கள் என மூன்று பிரிவாக, இந்த வேர்களை பிரித்து, அறிந்து கொள்வோம். இதில் ஒவ்வொரு பிரிவும், பரிணாம வளர்ச்சி குறித்த வரலாறு சொல்லும்.

கற்பிக்கும் மையங்களின் பரிணாம வளர்ச்சி: எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் வகையிலான பரிணாமத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன; இயற்கை விஞ்ஞானத்தில் இதற்கான ஆதாரம் உண்டு. பள்ளியில் நுழைவதற்கு முன் தாய்மொழியை அவர்கள் கற்று விடுகின்றனர். அப்போது, பள்ளி என்பது எந்த சூழலில் அமைய வேண்டும்? குழந்தைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் அல்லவா? குழந்தைகளை மையமாகக் கொண்ட கற்கும் சூழலை, 1907ல் முதன் முதலாக ஏற்படுத்தியவர், இத்தாலியை சேர்ந்த மரியா மாண்டிசொரி. “கற்பது என்பது, மனிதன் தன்னிச்சையாக மேற்கொள்ளும் நடவடிக்கை. வார்த்தைகளை கொண்டு மட்டும் கல்வியை அடைய முடியாது; அனுபவத்தால் அறிந்து கொள்வது தான் கல்வி’ என்று அவர் நம்பினார்.

அவருடைய பள்ளியில், பல விதமான கருவிகள் மற்றும் கைவேலைகள் மூலம், சுற்றுச்சூழலுடன் ஒருங்கிணைந்து, குழந்தைகள் தாங்களாகவே பாடம் கற்றனர். இந்தியாவில், பிரிட்டன் நிர்வாகத்தால் துவக்கப்பட்ட, பிரதான கல்வி அமைப்பின் பொருத்தமற்ற முறையை, மகாத்மா காந்தி அடையாளம் கண்டார். 1937ல், அடிப்படை கல்வி தத்துவத்தை அவர் பரிந்துரைத்தார். கல்வி குறித்த அவரது அடிப்படை தத்துவம் என்னவெனில், செயல்முறையை அடிப்படையாக கொண்ட கல்வி; அந்த கல்வி உறுதியானதாக, ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும்; தொடர்பில்லாமல், தனியாக இருக்க கூடாது; அந்த கல்வியும் தாய்மொழியிலேயே அமைய வேண்டும்; குழந்தையின் சமூக, கலாசார சூழலோடு ஒருங்கிணைந்ததாக அமைய வேண்டும் என்பது தான்.

காந்தியின் தத்துவமும், மான்டிசொரி கல்வி முறையும் ஒரே கொள்கையை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. 1939ல், தியாசாபிக்கல் சொசைட்டிக்கு, மாண்டிசொரி அழைக்கப்பட்டார். இரண்டாம் உலக போர் காரணமாக, அவர் இங்கு ஏழு ஆண்டுகள் தங்க நேர்ந்தது. அப்போது அவர், 16 பயிற்சி வகுப்புகள் நடத்தினார். மான்டிசொரி இயக்கத்தை இந்தியாவில் வேரூன்ற செய்தார். ஆந்திராவில், 1926, ரிஷி வேலி பள்ளி துவக்கப்பட்டது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வி தத்துவத்தின் அடிப்படையில், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா (கே.எப்.ஐ.,) அமைப்பால் இந்த பள்ளி துவக்கப்பட்டது. தொழில்நுட்பத் திறனை அடிப்படையாக கொண்ட கல்வி முறையுடன் கூடிய மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே, இந்த தத்துவத்தின் அடிப்படை. போட்டிச்சூழல் அற்ற, மாணவர்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக் கொள்ளும் கூட்டுக் கற்றல் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனவே, 1947ல் நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே, மாண்டிசொரி, காந்தி, ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிந்துரைத்த, செயல்வழி கல்வி முறையை, இந்தியாவின் தென் மாநிலங்கள் பின்பற்றத் துவங்கி விட்டன.

இரண்டாம் உலகப் போரின் போது, டேவிட் ஹார்ஸ்பர்க் என்ற ஆங்கிலேயர், இந்தியாவில் ராணுவ அதிகாரியாக பணியாற்றினார். அவருக்கு பள்ளி கல்வி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ரிஷி வேலி பள்ளியில் சில ஆண்டு காலங்கள் தங்கினார். பின், ஆந்திராவிலேயே, 1972ல், நீல் பாக் என்ற பள்ளியை துவக்கினார். குழந்தைகள் தாங்கள் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து படிப்பதற்கும், செயல்வழி கல்விக்கும், இந்த பள்ளி முக்கியத்துவம் கொடுத்தது. ஒவ்வொரு மாணவரும் வித்தியாசமான முறையிலும், வித்தியாசமான நடையிலும் கல்வி பயில, இந்த பள்ளி அனுமதி அளித்தது. ஆசிரியர்களுக்கென, உறைவிட பயிற்சியும் நீல் பாக் பள்ளியில் அளிக்கப்பட்டது. இந்தியாவில் தற்போதுள்ள முன்னணி கல்வியாளர்கள் பலர், இப்பள்ளியில் ஆசிரியர்களாக பயிற்சி பெற்றவர்கள் தான். பழைய புத்தக படிப்பு முறையை விட, செயல்வழி கல்வி முறை தான், கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்தது என்பதை, நீல் பாக் பள்ளியின் அனுபவத்தின் மூலம் உணர முடிந்தது. பின், நீல் பாக் பள்ளியை, ரிஷி வேலி கிராம கல்வி மையம் எடுத்து நடத்த துவங்கியது. ஆந்திரா, மதனப் பள்ளியில் உள்ள கிராம பள்ளிகளுடன் இணைந்து செயல்படத் துவங்கியது. 1990 முதல் கிராமப்புற மாணவர்களுக்கும் பள்ளி கல்வி கிடைக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த கல்வி முறை, ஆந்திராவில் உள்ள அரசு பள்ளிகளிலும் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. 20ம் நூற்றாண்டில் இறுதியில், கர்நாடகாவிலும் இம்முறை பின்பற்றப்பட்டது. மாணவர்களை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த கல்வி முறை, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அனைத்து பகுதிகளிலும் அல்லாமல், இங்கொன்றும், அங்கொன்றுமாகவே செயல்படுத்தப்பட்டது. அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ இந்த நடைமுறையை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்த முன் வரவில்லை.

தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்க வரலாறு: தமிழக்தில் முதன்முறையாக, பெரிய அளவில் துவக்கப்பட்டது வயது வந்தோர் கல்வி திட்டம் தான். 1970 – 80 ஆண்டுகளில் அறிவொளி இயக்கம் என்ற அமைப்பால், இது உருப்பெற்றது. எனவே, அவர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையிலும், எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையிலும், கற்பித்தல் முறையை கையாள்வது, இந்த திட்டத்தின் அவசியம் ஆனது. ஆசிரியர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் கிராம திட்டங்களையும், அறிவொளி இயக்கம் செயல்படுத்தியது. தமிழகத்தில், 80 -90 ஆண்டுகளில் உருவான அடுத்த பெரிய கல்வி இயக்கம், மக்களின் அறிவியல் இயக்கம் தான். கேரள சாஸ்திரீய சஹஸ்த பரிஷத் மற்றும் தமிழ்நாடு அறிவியல் அமைப்பு (டி.என்.எஸ்.எப்.,) ஆகியவை இணைந்து ஆடல், பாடல், நாடகம் ஆகியவற்றின் மூலம் அறிவியல் கல்வியை போதித்தன. அறிவியல் கொள்கைகளை, செயல்வழி கல்வி மூலம் விளக்கும் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு இயக்கங்களுமே, தானாக முன்வந்து செயல்படும் வகையில் அமைந்தன; ஆசிரியர், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைத்து, தங்கள் திட்டங்களை செயல்படுத்தின. இந்த இயக்கங்களுக்கு, மாநிலத்தின் அரசியல் மற்றும் தொழிலதிபர்களின் ஆதரவும் கிடைத்தது

கற்பித்தல் முறையில் மாற்றங்களும், கல்வி சீர்திருத்தமும் ஒருங்கிணைந்தது எப்படி? கற்பித்தல் முறையில் நடத்தப்பட்ட தனித்தனி பரிசோதனைகளால் தமிழகத்தில் கல்வி சூழலில் தேக்கம் ஏற்பட்டு, கல்வி இயக்கங்களும் பெருகிய நிலையில், பிரதான கல்வி சூழலில், குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாக்க வேண்டிய நேரம் வந்தது. ஆனால், இந்த அடிப்படை மாற்றத்தை உருவாக்க, சிறந்த அறிஞர் தேவைப்பட்டார். அதற்கான சிறந்த உதாரணமாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயகுமார் கிடைத்தது, தமிழகத்தின் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். சமூக மாற்றத்துக்கு, சீர்மிகுந்த பள்ளி கல்வி அவசியம் என்பதை, அவர் அனுபவமாக உணர்ந்திருந்தார். முதல்வரின் தனிச் செயலர், மாவட்ட கலெக்டர் உட்பட பல பதவிகள் வகித்த அவர், பள்ளி கல்வியில் தனி ஈடுபாடு காட்டினார்.

கடந்த 90ல் வேலூரில் கலெக்டராக இருந்த போது, பள்ளி செல்ல வேண்டிய வயதை அடைந்த நிறைய குழந்தைகள், வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் பாடம் பயில்வதை அறிந்தார். அவர்கள் அனைவரும், அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என்பதையும் அறிந்தார். இக்குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் ஈர்க்க, “யுனிசெப்’ ஆதரவுடன், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் ஆதரவு திட்டம் (கிளாஸ்) ஒன்றை துவங்கினார். வேலூரை சேர்ந்த சண்முகம், பிச்சையா உட்பட சிறந்த ஆசிரியர்களையும் இத்திட்டத்தோடு இணைத்துக் கொண்டார். இவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல; தமிழ்நாடு மாணவர் அமைப்பு மற்றும் அறிவொளி இயக்கம் ஆகியவற்றின் தொண்டர்களும் கூட; கற்பித்தலில் உள்ள பல முறைகளை அறிந்தவர்கள். “கிளாஸ்’ திட்டம் அரசு பள்ளி வளாகத்திலேயே நடத்தப்பட்டது. ஆடல், பாடல் போன்ற செயல்வழிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதை நேரில் கண்ட அரசு பள்ளி மாணவர்களும், இதனால் ஈர்க்கப்பட்டனர். விளைவு, இவர்களுக்கான ஆசிரியர்களும், இது போன்ற கற்பித்தல் பயிற்சியை எடுத்து கொள்ள வேண்டிய சூழல் உருவாயிற்று.

இது தான், “மகிழ்ச்சியுடன் கற்கும் முறை’ தமிழகத்தில் உருவாக காரணம் ஆயிற்று. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடிந்தது. வகுப்பறையையோ, பாடத் திட்டத்தையோ மாற்ற முடியவில்லை. இதனால், இந்த முறைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. “கிளாஸ்’ திட்டத்தின் மூலம் பாடம் நடத்தியவர்கள், ரிஷி வேலி பள்ளிக்கும் சென்று, கற்பிக்கும் நடைமுறைகளை கற்று கொண்டனர். செயல்வழிக் கல்வி சூழலை உருவாக்கும் ஆசிரியர்கள், முதல் அக்கல்வி முறையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி திட்டங்கள், கற்பித்தல் அடிப்படையில் அமைந்தவையாகவும், இப்பயிற்சியை பெறுபவர்கள், செவிவழி அறிவை பெறுபவர்களாகவே மட்டும் இருந்தனர். தமிழக பள்ளி கல்வித் துறையின் கூடுதல் செயலராக இருந்த விஜயகுமார், இந்த முரண்பாட்டை நன்கு புரிந்து கொண்டார்.

சென்னையில் உள்ள ஆசிரியர் தொழிற்பயிற்சி நிறுவனமான “ஸ்கூல்ஸ்கேப்’ நிறுவனர் ஆமுக்தா மஹாபாத்ராவின் உதவியுடன், செயல்வழி மற்றும் பங்கெடுப்பு முறையிலான ஆசிரியர் பயிற்சி முறை ஒன்று உருவாக்கப்பட்டது. ஆமுக்தா மஹாபாத்ரா, முன்பு நீல் பாக் பள்ளியில், டேவிட் ஹார்ஸ்பர்கிடம் நேரடி பயிற்சி பெற்றவர். தொடர்ந்து, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனராக விஜயகுமார் பணியமர்த்தப்பட்டது, பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்தது. 300 பள்ளிகளில் மாற்றம் கொண்டு வர தீர்மானித்தார். ரிஷி வேலி பள்ளிக்கு சென்று, அங்குள்ள பயிற்சி முறைகளை கண்டறிந்து, அவற் றை தமிழகத்தில் செயல்படுத்த தீர்மானித்தார். மேலிருந்து கீழ் என்ற அணுகுமுறையை கைவிட்டு, அடிப்படை மாற்றத்தையே செயல்வழித் திட்டம் போலச் செயல்படுத்தினார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தன்னார்வ ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, 13 பள்ளிகளில் பரிசோதனை அடிப்படையில், செயல்வழிக் கல்வியை அறிமுகப்படுத்தினார். இப்போது இத்திட்டம், செயல்வழிக் கல்வி திட்டம் (ஆக்டிவிட்டி பேஸ்டு லேர்னிங்) என்றழைக்கப்படுகிறது. விஜயகுமாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பள்ளி ஆசிரியர்களும், ரிஷி வேலி பள்ளிக்கு சென்றனர். அங்கு நடைமுறையில் உள்ள கற்பித்தல் முறையை பயின்று திரும்பினர். மிகுந்த போராட்டங்களுக்கிடையில், இக்கல்வி முறையை தங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தினர்.

சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள மாந்தோப்பு பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி என்பவர், இத்திட்டத்தில் திருப்தி அடையவில்லை. விஜயகுமாருடன் வாக்குவாதம் செய்தார். பள்ளியில் இத்திட்டத்தை அமல்படுத்தி, இத்திட்டம் ஏன் வெற்றிகரமாக செயல்படாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து, தன்னிடம் தெரிவிக்குமாறு, விஜயகுமார் பணித்தார். இதை சவாலாக ஏற்ற அந்த ஆசிரியை, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவர் எதிர்பாராத வகையில், இத்திட்டம் மாபெரும் வெற்றி கண்டது. உற்சாகம் அடைந்த விஜயகுமார், சென்னை கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், செயல்வழிக் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த தயாரானார். இதற்கான உபகரணங்களை தயார் செய்ய, இந்த 13 பள்ளி ஆசிரியர்களும் பணிக்கப்பட்டனர். பள்ளி ஆசிரியர்களின் திறமை மீது, விஜயகுமாருக்கு அபார நம்பிக்கை உண்டு. பள்ளி கல்வி அமைப்பின், மிக முக்கியமான அங்கம் ஆசிரியர்கள் தான் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்த மறுமலர்ச்சியில், இவர்களின் பங்கு மிக முக்கியமானதாக விளங்க வேண்டுமென விரும்பினார். இவர்களை உற்சாகப்படுத்த, அரசு துறையில் உள்ள அனைத்து உயரதிகாரிகளையும் அழைத்து, இவர்களின் திறமையான செயல்பாடு குறித்து காட்டினார். இதனால் ஆசிரியர்கள் பெருமை அடைந்ததோடு, பள்ளி கல்வி மறுமலர்ச்சிக்கான சொந்தக்காரர்கள் என்ற கவுரவமும் கிடைத்தது.

இதையடுத்து, சென்னை கார்ப்பரேஷன் பள்ளிகள் அனைத்திலும், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. விஜயகுமாரின் திறமையா அல்லது விதியா என தெரியவில்லை; மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டமான, “சர்வ சிக்ஷா அபியான்’ திட்டத்தின் தமிழக திட்ட இயக்குனராக விஜயகுமாரே பணியமர்த்தப்பட்டுள்ளார். செயல்வழிக் கல்வி திட்டத்தை மாநிலம் முழுதும் அமல்படுத்தக் கூடிய அனைத்து சாதனங்களும் தயார் செய்த விஜயகுமார், வேலூர் முதல் சென்னை உட்பட ஆசிரியர் குழுவையும் கைவசம் வைத்துள்ளார். கல்வியாளர்கள் ஆமுக்தா மஹாபாத்ரா, அனந்தலட்சுமி போன்றோருடன் பணி செய்யும் திறனையும் கொண்டிருக்கிறார். இதோடு, கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் அமைப்பின் பள்ளியான, “தி ஸ்கூல்’ ஆசிரியர்களையும் துணைக்கு அழைத்திருக்கிறார். “சர்வ சிக்ஷா அபியான்’ திட்டத்தின் துணை இயக்குனர்கள் லதா, கண்ணப்பன், இளங்கோவன் ஆகியோர், பள்ளி கல்வி மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள்; திறமையாக செயல்படக் கூடியவர்கள். ஆலோசனைக்கென, வேலூரிலிருந்து சண்முகம், பச்சையப்பன், சென்னை கார்ப்பரேஷன் கல்வி அதிகாரியான மாலதி, ஆசிரியர் பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரி ரத்னவேல் ஆகியோரும் உள்ளனர்.

கற்பிக்கும் அனுபவம், கல்வி கோட்பாடு மற்றும் நிர்வாக அனுபவம் ஆகியவை இந்த அணியின் பலம். இந்த மறுமலர்ச்சி திட்டம் நல்ல முறையில் வெற்றி பெற, இவர்களின் அனுபவமும், முயற்சியும் இன்றியமையாதவை. புதிய முறையை அமல்படுத்த, மாடல் பள்ளிகள் தேர்தெடுக்கப்பட்டன. பின், ஆரம்ப பள்ளி அனைத்திலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. பயிற்சி பெற்ற 13 பள்ளி ஆசிரியர்களின் போன் எண்கள், மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் ஆதரவு இல்லையெனில், இத்திட்டம் நிறைவேறி இருக்காது. தமிழக கட்சிகள் அனைத்தும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தற்போதைய பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு பள்ளிக்கு சென்றார்; அங்கு மாணவர்கள் பயிலும் விதத்தை கண்டு ஆச்சரியமடைந்தார். விடுதலை சிறுத்தை அமைப்பை சேர்ந்த ரவிகுமார் எம்.எல்.ஏ., இத்திட்டம் அடிப்படை சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். குறுகிய காலத்தில், அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளின் ஒத்துழைப்பினால், பள்ளிகளில் மிகப்பெரிய மாறுதலை உருவாக்க முடிந்தது. துவக்க நிலையில் உள்ள இத்திட்டத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு குழப்பமாகவே தோன்றும். ஆழமாக பார்க்கும் போது, ஆசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமையும், சக்தி வாய்ந்த, ஆரோக்கியமான திட்டம் இது என்பது விளங்கும். தொடர் மதிப்பீடுகளும், கண்காணிப்புகளும் இத்திட்டத்திற்கு இன்றியமையாதவை. அதிகார வர்க்கத்தின் மூலம், அரசு செயல்பாட்டிலேயே மாற்றம் கொண்டு வந்துள்ள, அபூர்வ திட்டம் இது. இத்தகைய மறுமலர்ச்சியின் வரலாற்று பின்னணியையும், திட்டத்தின் தற்போதைய செயல்பாட்டையும் பார்க்கும் போது, பள்ளி கல்வியில் ஏற்பட்ட புரட்சி என்று சொல்வதை விட, பரிணாம வளர்ச்சி என்று சொல்வதே பொருத்தம்!

Source & Thanks : dinamalar

Monday 28 February 2011

தமிழ் கற்றல்

 

சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பள்ளித் தமிழாசிரியர்களுடன் உரையாட நேர்ந்தது அல்லது வாய்த்தது.அவர்களில் பலருக்கும் தமிழாசிரியர் என்றால் பள்ளிகளில் யாரும் மதிப்பதில்லை.அறிவியல் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு இருக்கும் மரியாதையும் மதிப்பும் எங்களுக்கு இல்லை என்று மிக வருந்திப் பேசினார்கள்.மொழிப்பாடம் என்று வந்தாலும் ஆங்கில ஆசிரியர்களுக்கு இருக்கும் மரியாதை எங்களுக்கு இல்லை.காலை வகுப்புக்கள் எல்லாம் கணிதம்,அறிவியல் போன்ற பாடங்களுக்கே ஒதுக்குகிறார்கள்.தமிழ் வகுப்புக்கள் எல்லாம் மதிய நேரமே தருகிறார்கள்.கேட்டால் ’தமிழ்தானே’ என்கிறார்கள். என்று பலவிதமான மனக்குமுறல்களை அவர்கள் ’கொட்டினார்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழகமெங்கும் பஞ்சாயத்துக் கட்டிடங்கள் உட்பட அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் நியான் விளக்குகள் தமிழ் வாழ்க என்று மின்னிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் செம்மொழி மாநாட்டைப் பார்த்த அலுப்பே நமக்கு இன்னும் தீராத ஒரு பின்னணியில் இந்தத் தமிழாசிரியர்களின் உள்ளத்துக் குமுறல்களைக் கேட்க நேர்ந்தது.

நாம் பின்னோக்கிப் போனால் ஒரு காலத்தில் படிப்பென்றாலே அது தமிழ் இலக்கியம் படிப்பதுதான் என்று இருந்ததை அறிகிறோம்.உ.வே.சாவின் என் சரித்திரத்தில் அவர் கற்ற கதையை விரிவாகச் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.ஆனாலும் நீண்ட்ந் நெடுங்காலமாகத் தமிழ் கற்றல் அல்லது கற்பித்தல் என்றாலே ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வாக்குண்டாம், நல்வழி,நன்னெறி போன்ற போதனா இலக்கியப்பாடங்களை நெட்டுருச்செய்யும் பணி என்றே இருந்துள்ளது.நவீன காலத்தில் இந்தியா நுழைந்தபின்னும் கூட தமிழ் கற்பித்தலில் அறிவியல்பூர்வமான மாற்றங்கள் நிகழவில்லை.

அதற்கு முக்கிய காரணம் நம் சூழல்தான். தமிழ் என்பது மொழியாக மட்டுமின்றி ஒரு அரசியல் அணிதிரட்டலுக்கான சாதனமாகவும் பயன்படுத்தப்பட்ட சூழல் இந்தக் கற்பித்தல் முறையையும் பாதித்துள்ளது. மொழி இனத்தோடும்,இன உணர்வு கொள்வதோடும் இணைக்கப்பட்டதில் மாற்றங்களை மறுத்துப மொழியின் புனிதம் / தூய்மை காக்கிற மனநிலையோடும் பிணைக்கப்பட்டது.நாங்கள் அறிவொளி இயக்கத்தில் முதல் பாடமாக ஆனா ஆவன்னா வைக்காமல் பட்டா,படி என்று வைத்தபோதும் தமிழ்சார் அறிவாளிகளிடத்திருந்து எதிர்ப்பு வந்தது.70களில் இலங்கையில் தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைப் புகுத்திய போது தமிழறிஞர்களிடமிருந்து வந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது பற்றி ஒரு கட்டுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார்.

திராவிட இயக்க அரசியலின் ஒரு பகுதியாக தமிழாசிரியர் என்பவர் இன உணர்வு மிக்கவராக /இன உணர்வை ஊட்டுகிற சமூகக்கடமையை ஆற்றுபவராக சமூகத்தில் மதிக்கத்தக்க ஒரு மனிதராக முன்னிறுத்தப்பட்டார்.ஆகவே தமிழாசிரியர்கள் ஒரு காலகட்டம் வரை தமிழகத்தில் மதிப்புப் பெற்றவர்களாகவே இருந்தனர்என்பது உண்மை.மு.வ, நா.பார்த்தசாரதி போன்றோரின் பல நாவல்களில் கதாநாயகர்களாகத் தமிழ் படித்த இளைஞர்களும் தமிழாசிரியர்களும் நடமாடினார்கள்.

காலமாற்றத்தில் திராவிட இயக்கத்தாரின் கேமிரா தமிழாசிரியர்களை விட்டு விட்டு வேறு திசைகளை நோக்கிக் கவனம் குவிக்கப் போய்விட்ட பின்னணியில் தமிழாசான்கள் ‘கைவிடப்பட்டவர்கள்’ ஆனார்கள்.பட்டிமன்றங்களின் பேசுபொருளாக தமிழ்க் காவியங்களும் காப்பியங்களும் இருந்தவரைக்கும் அங்கேயும் தமிழாசிரியர்களின் கொடி பறந்த காலம் இருந்தது.மாமியாரா மருமகளா பழைய சினிமாவா புதிய சினிமாவா என்று பட்டிமண்டபத்துப் பாடு பொருள்களும் மாறிவிட்டபோது அவர்களுக்கு அங்கேயும் இடமில்லை.தெருக்களில் தமிழ் கேட்கக் கூட்டமுமில்லை என்றானது.எல்லாம் ஒருசேரத் தமிழகத்தில் நடந்து முடிந்த போது வெந்த புண்ணில் வேல்பாய்ச்ச மைய அரசின் கல்விக்கொள்கைகளில் மாற்றம் ஏற்பட தொழிற்கல்வி முக்கிய இடம் பிடிக்க மருத்துவம்,பொறியியல் நோக்கித் தமிழகமே தொங்கோட்டம் ஓடத் தமிழின் நிலையும் தமிழாசிரியர் நிலையும் கல்விப்புலத்துக்கு உள்ளேயும் சமூக வெளியிலும் படு கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டன.ஆங்கிலத்திலும் கூட அமெரிக்கன் ஆங்கிலம்தான் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் அவதானிக்க வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக தமிழாசிரியர்கள் பாவம் ,மரபு வழிப்பட்ட தமிழ் கற்பித்தல் மூலம் ஆசிரியர்களாகி, வேறு ஏதும் தெரியாத அப்பாவிகளாக பள்ளிகளில் உலவிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. அறிவியல்,கணிதம்,பொருளாதரம் கற்றோருக்குக் கொஞ்சமாவது தமிழும் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் தெரிந்துதான் இருக்கிறது.ஆனால் தமிழாசிரியருக்கோ தமிழைத்தவிர வேறு எதுவுமே தெரியாது.தமிழிலும் நவீன இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது.70களுக்குப் பிறகுதான் நமது பல்கலைக்கழகங்கள் சிறுகதை,புதுக்கவிதை போன்றவற்றையும் இலக்கியம்தான் தமிழ்தான் என்று ஏற்றுப் பல்கலைப்படியேற அனுமதித்தன.

இன்று தமிழ் இலக்கிய உலகில் ஆண்மொழி,பெண் மொழி,உடல்மொழி,ஆதிக்கசாதி மொழி , ஒடுக்கப்பட்டோர் மொழி என்று என்னவெல்லாமோ வந்து விட்டது.அது எதுவுமே நமது தமிழாசிரியர்களுக்குத் தெரியாது.மொழியியலில் எத்தனை தூரம் சென்று விட்டார்கள்.நமக்குத் தெரிந்த நோம் சாம்ஸ்கியும் லெவிஸ்ட்ராசும் தமிழாசிரியர் யாருக்குமே தெரியாது. நாஞ்சில்நாடனைக்கூடத் தெரியாத தமிழாசிரியர்கள்தான் நம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கிறார்கள்.

சூழலும் சரியில்லை.தாமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை நம் அன்புக்குரிய தமிழாசான்களுக்கு எவரேனும் புரியும் வகையில் எடுத்துரைத்து அவர்கள் கரை சேர வழி வகுக்க வேண்டும்.தமிழ்ப் பாடம் கற்பிப்போர் வெறும் மொழியை-அதன் கட்டமைப்பை மட்டும் கற்றுத்தருபவர்களாக அல்லாமல் சிந்தனையைத் தூண்டுபவராக பிள்ளைகளின் படைப்பாற்றலைத் தூண்டுபவராக வளர்த்தெடுப்பவராக சதா தன்னைத் தற்காலப்படுத்திக்கொள்பவராக சகல துறைசார் அறிவும் பெற்றவராக இருப்பது மிக மிக அவசியம்.வேறு பாட ஆசிரியர்களைப்பார்க்கிலும் தமிழாசிரியரே நமக்கு மிக மிக முக்கியமானவர் என்பதைத் தமிழ்ச் சமூகமும் உணர வேண்டும்.மொழி ,பண்பாட்டின் விளைபொருளாகவும் பண்பாட்டை உருவாக்கும் முக்கியக் கூறாகவும் பண்பாட்டு அடையாளமாகவும் பண்பாட்டு அம்சங்களைத் தலைமுறை தலைமுறைக்கும் எடுத்துச்செல்லும் சக்திமிக்க(காலத்தை ஊடறுத்துப்பாயும்) ஊடகமாகவும் திகழ்கிறது என்பதை தமிழர்களாகிய நாம் உணரவில்லை என்பதன் அடையாளமாகத்தான் இத்தனை பலவீனமான தமிழாசிரியர்களை நம் பிள்ளைகளுக்கு நாம் தந்திருக்கும் நிலை இருக்கிறது.

இது ரொம்ப ரொம்ப முக்கியமான ,கவலைக்குரிய ஒன்றாக எனக்குப்படுகிறது.
ச.தமிழ்ச்செல்வன்