Saturday 16 July 2011

சமச்சீர் கல்வித் ரத்து செய்யப்படவில்லை, தரமான பாடத் திட்டத்துடன் அமல்படுத்துவோம்- தமிழக அரசு


சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யவில்லை. இந்த ஆண்டுக்கு மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தரமான பாடத் திட்டத்துடன் அதை அமல்படுத்துவோம் என்று தமிழக அரசு விளக்கியுள்ளது. 

சமச்சீர் கல்வித் திட்டம்தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் விசாரித்தது. தற்போது விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது இன்று தெரிய வரும். இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைத் தாக்கல் செய்து அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் பேசுகையில், முந்தைய அரசு வகுத்த சமச்சீர் கல்வி பாடத்திட்டமும், அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களும் தரமற்றவைகளாக இருக்கின்றன. அதனால்தான், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழக அரசு அமைத்த சமச்சீர் கல்வி நிபுணர் குழுவும், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை நடப்பு கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனவே, முறையான பாடத்திட்டமும், தரமான பாடப்புத்தகங்களும் தயாரித்த பிறகுதான் சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழக மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவேதான், சமச்சீர் கல்வி சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. 

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யவில்லை. தற்போது ஒத்திதான் வைத்துள்ளது. முறையான பாடத்திட்டம், தரமான பாடப்புத்தகங்களை கொண்டு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றார். தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்வது என்பது குறித்து நிபுணர் குழுவை அமைத்துப் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் குழு தனது பரிந்துரையை அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன் மீது ஒரு வாரகாலத்திற்கு விசாரணை நடந்தது. தற்போது தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 மாதங்களாகி விட்ட நிலையில் 1 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்றவர்களுக்கு புத்தகமே இல்லாத நிலையில் வகுப்புகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment