Tuesday 10 January 2012

பள்ளிகளில் வகுப்பு நேரம் 35 நிமிடம் அதிகரிப்பு-சமச்சீர் கல்வி குழப்பத்தால் வந்த வினை!

சென்னை: சமச்சீர் கல்வியை அமலாக்குவதில் தமிழக அரசு செய்த குழப்படி காரணமாக, இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாகத் துவங்கின. பள்ளிகள் துவங்கினாலும் புத்தகங்களே இல்லாமல் மாணவ, மாணவிகள் மாதக்கணக்கில் பள்ளிகளுக்கு சும்மா சென்று வந்தனர். இதனால் இழக்கப்பட்ட வகுப்பு நேரத்தை ஈடுகட்ட, இனி வகுப்புகள் 35 நிமிடங்கள் கூடுதலாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை 4.10க்கு பதிலாக இனி 4.45 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். இந்தத் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள், 15 நாள் தாமதமாக திறக்கப்பட்டன. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகக் கூறி சமச்சீர் கல்வியை தமிழக அரசு ரத்து செய்தது. உச்ச நீதிமன்றம் கொட்டிய பிறகே சமச்சீர் கல்வி அமலுக்கு வந்தது. அதற்கான பாடப் புத்தகங்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகே வழங்கப்பட்டன. இதனால் சுமார் 3 மாதம் புத்தகங்களே இல்லாமல் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போய் வந்தனர். இதனால் அரசுப் பள்ளிகளில் அந்தந்த தேர்வுக்குரிய பாடப் பகுதிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளி வேலை நாட்களை ஈடுகட்டவும், பாடப் பகுதிகளை முடிக்கவும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வேலை நேரத்தை 35 நிமிடங்கள் அதிகரித்து தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஏப்ரல் 30ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். வழக்கமாக தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மாலை 4.10க்கு முடிகின்றன. இனி, மாலை 4.55 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.