Sunday 30 November 2014

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை திட்டம் முடக்கம்

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை திட்டம் முடக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை திட்டத்தை அனைவருக்கும் கல்வி இயக்கம் அறிமுகம் செய்தது. பள்ளி மாணவர்கள் சிறப்பானவராகவும், கற்பனைத் திறன் மிக்கவராகவும் உருவாக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 4ம் வகுப்பு வரையிலான மாண வ, மாணவிகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, நடப்பு கல்வியாண்டில் தேவைப்படும் கற்றல் அட்டைகள் தொடர்பான எண்ணிக்கைக்காக பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இதில் தமிழ்வழி பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் கணக் கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்தனர். இதில் 1,838 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2,765 செட் கற்றல் அட்டைகள் தேவைப்பட்டது. ஆனால், தற்போது வரை 100 தொடக்கப்பள்ளிகளுக்கு 120 செட் கற்றல் அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,738 பள்ளிகளுக்கு 2,635 செட் கற்றல் அட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால், தொடக்க பள்ளி மாணவர்களிடம் கல்வித்தரம் குறைந்துள்ளது எனவும், இதனால் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை திட்டம் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து கோவை மாவட்ட எஸ்எஸ்ஏ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது“, சென்னை மைய அலுவலகத்தில் இருந்து 120 செட் கற்றல் அட்டைகள் மட்டும் வந்துள்ளது. மீதமுள்ள கற்றல் அட்டைகள் வந்தவுடன் அந்தந்த பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும்“, என்றார்.

No comments:

Post a Comment