Tuesday 15 October 2013

தாய்மொழி வழிக்கல்வி ஏன்? எப்படி?

தாய்மொழி வழிக் கல்வி எனப் பொதுவாகச் சொன்னாலும் தமிழ் பயிற்றுமொழி என குறிப்பாகச் சொன் னாலும் பலருக்கு முகம் சுளிக்கிறது. ஆங்கிலம் இல்லாமல் அகிலத்தில் ஏதும் செய்ய இயலாது. ஆங்கில வழிக் கல்வியே அறிவின் திறவுகோல் என்று மக்கள் நம்பவைக்கப்பட்டிருப்பதன் வெளிப்பாடுதான் இது. இது சரியா? உண்மையா? என்கிற கேள்விகளை உணர்ச்சி நிலையில் நின்று அல்ல; அறிவுப்பூர்வமாக சிந்திக்கத் தூண்டுவது மீண்டும் மீண்டும் தேவையாய் இருக்கிறது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சுமார் 40 ஆண்டுகளுக்குமுன் சில அரசியல் இயக்கங்கள் ஆவேசத்துடன் பேசி, எழுதி இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது அதிலே உணர்ச்சிப் பிழம்பாக நின்றது ஒரு தலைமுறை. அந்தத் தலைமுறைக்கு நியாயம் வழங்கப்படவில்லை. மத்திய ஆட்சி மொழிச் சட்டம் பற்றி 1968ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது,“நீதி, நிர்வாகம், கல்வி என்ற மூன்று நாற்காலிகளிலும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்டால் தமிழ் மக்களுக்கு பீதி இருக்காது; பயம் இருக்காது”என்று தோழர்கள் ஏ. பாலசுப்ரமணியம், என். சங்கரய்யா, திரு. மா.பொ.சி. ஆகியோர் வலியுறுத்தினார்கள். ஆனால் நடந்தது என்ன?“மழை பெய்கிறபோது குடை கிடைக்காவிட்டால் மேல்துணியை (தலையில்) வைத்துக்கொள்வது போல உடனடியாக இந்தி வந்துவிடாமல் ஆங்கிலத்தை வைத்துத்தடுக்கிறோம்” என்று அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா தமக்கே உரிய பாணியில் இலக்கிய நயத்தோடு பதில் சொல்லி ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளித்தார்.

அப்போது விரிக்கப்பட்ட குடை இன்றுவரை மடக்கப்படவே இல்லை. மாறாக ஆரம்பக் கல்வியிலும் ஆங்கிலம் பயிற்றுமொழி என மேலும் விரிந்திருக்கிறது.தமிழுக்கு உரிய இடம் நீதியில், நிர்வாகத்தில், கல்வியில் வழங்கப்படாத தால் இரண்டு தலைமுறைகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்தியை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றதன் இடத்தில் தமிழை வைத்துப் பார்க்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள். மாறாக ஆங்கிலமே எப்போதும் என் பதற்கு அழுத்தம் கொடுத்ததன் விளைவு அதிலிருந்து விட்டு விடுதலையாக முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது.“இவர்கள் இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும் அறிவு, ஒழுக்கம், ரசனை, கருத்து போன்றவற்றில் ஆங்கி லேயர்களாகவும் இருக்க வேண்டும்” என்று பிரிட்டிஷ் காலனிய கல்விக் கொள்கையை உருவாக்கிய மெக்காலேயின் எண்ணம் ஈடேறிக்கொண்டே இருக்கிறது.“ஆங்கில மோகம் என்பது வெறும் மொழி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது ஓர் பண்பாட்டுத் தாக்கம். காலனி ஆட்சியாளர்கள் உருவாக்கிய அரசியல் அம்சத்தைவிட அதன் கலாச்சார அம்சம் இன்னும் பயங்கரமானது. அதனால்தான் இன்றைக்கும் தாய் மொழியைக் கூட புறக்கணித்து அடிமை தன் விலங்குகளைத் தானே தழுவி கட்டிக் கொள்வதுபோல ஆங்கிலத்தைக் கட்டித் தழுவும் அளவுக்கு ஆங்கில மோகம் நம்மை ஆட்கொண்டுள்ளது”என்று அண்ணல் காந்தியடிகள் எழுபது ஆண்டுகளுக்கு முன் சொன்னது இன்றும் எதார்த்தமாக இருக்கிறது.

உலக நாடுகளோடு தொடர்பு கொள்ளவும் அறிவியல் நூல்களைக் கற்கவும் ஆங்கிலம் தேவைப்படும்போது, அம்மொழியை நாடிச் செல்வது எப்படி மோகமாகும் என்ற எதிர் கேள்வி எழுகிறது. 600 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் தொகை வெறும் 47 கோடிதான் என்பது கசப்பான உண்மை. பிரிட்டிஷ் காலனியம் பல நாடுகளைக் கவ்வியதால் முற்காலத்தில் ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றது. நவீன காலனியம் மூலம் அமெரிக்கா தற்போது அதே வேலையைச் செய்வதால் மீண்டும் ஆங்கிலம் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வளவே! 140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் மாண்டரின் என்கிற அவர்களின் தாய்மொழிதான் ஆட்சி மொழி. நீதியில், நிர்வாகத்தில், கல்வியில் அதற்குத்தான் அரியணை.ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் ஆங்கிலம் ஆட்சி மொழியும் அல்ல; பயிற்று மொழியும் அல்ல. சிறுசிறு நாடுகளின் கொத்தாகத் திகழ்கிற தென் அமெரிக்க நாடுகளிலும் ஆங்கிலம் இல்லை; ஆங்கிலத்தைவிட அதிக மக்களால் பேசப்படுவதும் பயிலப் படுவதும் ஸ்பானிஷ் மொழி என்பது வியப்பளிக்கும் செய்தி.

இத்தனைக்குப் பிறகும் தாய் மொழியைத் தவிர்த்து ஆங்கிலம் அவ சியம் என்று கருதப்படுவதற்குக் காரணம் அம்மொழியில் பயின்றால் வேலை வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணம்தான். வெறும் மொழித்திறன் மட்டுமே வேலை வாய்ப்பை வழங்கிவிடாது. சிந்தனைத் திறனும் அவசியம். மொழியை எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் சிந்தனை ஊற்றினை இளம் வயதில்தான் பெறமுடியும்.“நான் ஆரம்பக் கல்வியைத் தமிழ் வழியிலேயே கற்றேன். பிற்காலத்தில் அறிவியல் துறையில் சாதித்திட எனக்கு இது மிகவும் ஊக்கமாக இருந்தது. மொழி என்பது இனத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சேமிப்புக் கிடங்கு; தகவல் சுரங்கம். காலம், தலைமுறையைக் கடந்து நிற்பது தாய்மொழிதான்”என்கிற ஏவுகணை தொழில்நுட்ப சாதனையாளரும் முன்னாள் குடி யரசுத் தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாக்குமூலத்தை நாம் புறந் தள்ளிவிடப் போகிறோமா?நிலவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சந்திராயனின் திட்ட இயக்குநராக இருக்கும் மயில்சாமி அண்ணாதுரை தமிழ்வழி பயின்று அறிவியல் துறையில் முன்னேறி மிளிர்கின்ற மேலும் ஒரு உதாரண மனிதர் அல்லவா?உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள பி. சதாசிவம் அவர் களின் தாயார் “தமிழ் வழியில் படித்து இன்று நம் நாட்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டது எனது அளவில்லாத சந் தோஷமாக உள்ளது” என்று கூறுவதில் உள்ள பூரிப்பு தாய்மொழி வழி கல்விக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தானே!சென்னை உயர்நீதிமன்றத் தலை மை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வுபெற்றுள்ள நீதிபதி கே. சந்துரு, வரலாற்றுப் பேராசிரியர் முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி போன்று தாய்மொழி வழி பயின்று புகழுச் சியைத் தொட்டவர்களின் பட்டியல் நீள்கிறது.“தாய்மொழி வழியில் கல்வி கற் பிக்கப்படும் பள்ளிகளில் அறிவு என்பது வகுப்பறையில் உருவாக்கப்படுகிறது. அதன் பின் அந்த அறிவை குழந்தைகள் ஆங்கிலத்திற்கோ வேறு மொழிகளுக்கோ மாற்றிக்கொள்ள முடியும்”என்ற பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியின் கருத்துக்கு எடுத்துக்காட்டுகளாக இன்னும் எத்தனையோ பேர் திகழ்கின்றனர்.

அமெரிக்காவின் தெற்குக் கரோலினா பகுதியைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் 160 மொழிக் குடும்பங்களைக் கொண் டுள்ள 22 நாடுகளில் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை இவ்வாறு கூறுகிறது!“தாய்மொழி வழிக் கல்வியால் குழந்தைகள் விரைவாக வாசிக்கப் பழகுகின்றனர். அதற்குக் காரணம் அந்த மொழியின் கட்டமைப்பு பற்றிய அறிவு அவர்களிடம் ஏற்கனவே இருக்கிறது. எனவே சரியான முறையில் அவர்களால் ஒலிக்க முடிகிறது. மேலும் நிறைய சொற்களை அவர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் உரிய வயதில் பள்ளியில் சேர விரும்புகிறார்கள்.தாய்மொழியில் கற்பிக்கும்போது கல்விக்கான செலவு குறைகிறது. தாய்மொழியை நன்கு கற்று, தேர்ச்சி பெறுபவர்களால் மிக எளிதாக இன்னொரு மொழியைக் கற்க முடிகிறது.தாய்மொழிவழி பயிலும் குழந்தை களுக்கு சொந்த பண்பாட்டு அறிவும் பாரம்பரிய அறிவும் கிடைக்கிறது. சொந்த அடையாளம் பற்றிய வலுவான புரிதல் உண்டாகிறது. இத்தகைய குழந்தைகள் முன்பின் அறியாத மொழியில் பயில்பவர்களைவிட பள்ளியில் மட்டு மின்றி வாழ்க்கையிலும் சாதனை படைப்பவர்களாக இருக்கிறார்கள்.”1937ஆம் ஆண்டு வார்தாவில் காந்தி தலைமையில் நடைபெற்ற அடிப்படைக் கல்வி தொடர்பான அகில இந்திய மாநாடு, 1952ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஏ.எல். முதலியார் ஆணையம் 1964 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட டி.எஸ்.கோத்தாரி ஆணையம் - 1986ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேசிய கல்விக்கொள்கை - 1989ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குழந் தை உரிமைகளுக்கான ஐ.நா. சபை யின் தீர்மானம். 2005ம் ஆண்டு வெளி யிடப்பட்ட யுனெஸ்கோ அறிக்கை என அனைத்திலும் தாய்மொழிவழிக் கல்வி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறை இவற்றுக்கு நேர்மாறானதாக இருக்கிறதே ஏன்?இதற்கு மிக முக்கியமான காரணம் தாய்மொழி வழிக்கல்வி வேலை வாய்ப்புக்கு வழிவகுக்கவில்லை; உயர்கல்வி தமிழில் இல்லை, தமிழில் தேவையான நூல்கள் இல்லை என்பது தான். கணினி பயன்பாட்டுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அதற்கான தமிழ் அகராதியை மணவை முஸ்தபா என்ற தனி நபரால் உருவாக்க முடிந்துள்ளது. மிகப்பெரிய அரசு நிர்வாகம் இதைச் செய்ய முடியாதா? முடியும். அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுடன் படிப்பை நிறைவு செய்யும் முதல் தொகுப்பில் உள்ள 120 மாணவ-மாணவியருக்கு அரசு வேலை உறுதி என்று சொல்லப்படுகிறது. (தி இந்து செய்தி 19.9.13-பக். 3). தமிழ்வழி படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற அரசாணைதான் (எண். 45, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தேதி 30.9.2010) இதற்குக் காரணம். இந்த ஆணை அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் அரசுப்பணிகளுக்கும் பொருந்தும்.

எனவே தாய்மொழி வழி பயில்வதற்கு ஊக்குவிப்பும், தேவையான நூல்கள் உருவாக்கமும், பொறியியல் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வரை தாய்மொழியே பயிற்று மொழி என்ற உறுதிப்பாடும் இதற்கேற்ப பொதுப்பள்ளிகள் - அருகாமைப் பள்ளிகளுக்கு நடவடிக்கை எடுப்பதும், அறிவியல் மொழியாகத் தமிழையும் மற்றவர்களின் தாய் மொழிகளையும் வளர்ப்பதும், தமிழ் பயிற்றுமொழி என்பதோடு ஆங்கிலம் ஒரு பாடமொழியாக்கப்படுவதும், அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமனமும்தான் இப்போதைய தேவை.மனப்பாடக் கல்வி முறையை மாற்றி சிந்தனைத் திறன்மிக்க புதிய தலைமுறையை உருவாக்க தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம். இது மொழி சார்ந்த உணர்ச்சிப்பூர்வ விஷயம் அல்ல; அறிவியல்பூர்வமான அக் கறையின்பாற்பட்டது.நாடு விடுதலையடைந்து கல்விபரவலாகி உள்ளது. கல்வித் தாகம் கொண் டவர்களாக மக்கள் மாறி இருக்கிறார்கள். எனினும் விடுதலைக்குப் பிறகும் மெக்காலேயின் ஆங்கிலக் கல்விமுறை மீது எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாத நிலையில் இன்றைய கல்விமுறை வரலாற்றுப் பூர்வமாக கடந்த இருநூறு ஆண்டுகால காலனி ஆட்சியின் ஓர் இறுகிய கட்டுமானமாகவே திகழ் கிறது. தாய்மொழிவழிக் கல்வி எனும் கோரிக்கை இக்கட்டுமானத்திற்கு எதிரான தாக்குதலாகவும் கல்வியில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக நட வடிக்கையின் ஓர் அம்சமாகவும் அமையும்.மேலும், 1990களுக்குப் பிறகான தீவிர உலகமயம், தனியார் மய காலத்தில் பொருளாதாரம், தகவல் தொடர்பு, நிர்வாகம் சார்ந்த தேவைகளுக்காக ஒற்றை மொழியை, ஒற்றை அரசை முன்வைக்கும் ஒருமைப் போக்கு தொடர்கிறது.

தாய்மொழிவழிக் கல்விக்கான இயக்கம் ஒற்றை மொழியை நிறுத்தும் கார்ப்பரேட் அமைப்புகளை எதிர்த்த இயக்கமாக, தனியார் மயத்தை ஆதரிக்கும் அரசுகளை எதிர்த்த இயக்கமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.இந்த நோக்கத்தோடு சென்னையில் அக். 16ல் நடைபெறும் தமுஎகசவின் தாய்மொழிவழிக் கல்விக்கான மாநில சிறப்பு மாநாட்டில் அணிதிரள்வதும் அதன் தீர்மானத்தைப் பரவலாக்குவதும் அவசியம், அவசரம்.
எழுத்தாளர்.மயிலைபாலு
நன்றி: தீ.ர்

No comments:

Post a Comment