Sunday 3 November 2013

மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்துக்கு எதிர்ப்பு

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2013,23:47

சென்னை: ""மக்கள் வரிப்பணத்தில், தனியாருக்கு பள்ளிகள் கட்டிக் கொடுக்கும், மத்திய அரசின் மாதிரி பள்ளிகள் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும்,'' என, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி கூறினார். மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம், தமிழக கல்வி உரிமை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, அரசு - தனியார் மாதிரி பள்ளிகள் அமைக்கும், மத்திய அரசின் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தை, சென்னை, எழும்பூர், "இக்சா' மையத்தில் நடத்தின.

இதில், வசந்தி தேவி பேசியதாவது: மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள, 6,000 வட்டாரங்களில், மாதிரிப் பள்ளிகளை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், 3,500 பள்ளிகள், மத்திய, மாநில அரசுகள் இணைந்தும், 2,500 பள்ளிகள், தனியாருடன் இணைந்தும் அமைக்கப்படுகின்றன. தனியாருடன் அமைக்கும் மாதிரிப் பள்ளிக்கு, நிலம், கட்டடம் ஆகியவற்றுக்குத் தேவையான நிதியில், 40 சதவீதத்தை, மத்திய, மாநில அரசுகள் அளிக்கின்றன. 10 ஆண்டுகள், அரசு - தனியார் இணைந்து நடத்தும் இப்பள்ளிகள், அதன்பின் தனியாருக்கு அளிக்கப்படும். மக்கள் வரிப்பணத்தில், துவங்கும் இப்பள்ளிகளை, தனியாருக்கு தாரை வார்க்கும், மத்திய அரசின் திட்டம் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் நடைமுறையில் உள்ளன. இதற்கு மாறாக, மாதிரிப் பள்ளிகளை துவங்குகின்றனர். இப்பள்ளிகளில், ஆறாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை இருக்கும். இதில், 40 சதவீத மாணவர்கள் இட ஒதுக்கீட்டிலும், 60 சதவீத மாணவர்கள், பள்ளியை நிர்வகிக்கும் தனியாரின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் நடக்கும். இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு, அரசு கல்விக் கட்டணத்தை அளிக்கும். மீதமுள்ளவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

இதனால், மாதிரிப் பள்ளிகள் மாணவர்கள் மத்தியில், பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில், அரசின் இட ஒதுக்கீடு முற்றிலும் கைவிடப்பட்டு, தனியார் பள்ளிகளாகி விடும். எனவே, அரசு - தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை, உடனே கைவிட வேண்டும். இவ்வாறு, வசந்தி தேவி பேசினார்.

நன்றி: தினமலர்

No comments:

Post a Comment