Thursday 26 March 2015

தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66ஏ ரத்து : அரசியல் சாசனத்துக்கு எதிரானது: உச்சநீதிமன்றம்

புதுதில்லி, மார்ச் 24-
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளப் பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப் பட்டவரைக் கைது செய்ய வழி செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் அந்தப் பிரிவை ரத்து செய்து நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளைத் தெரிவிக்கவும் வெளியிடவுமான உரிமை அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000ம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித் துள்ள நீதிபதிகள் ஜெ.செல்வேஸ்வர் மற்றும்ரோஹிண்டன் எப்.நாரிமன் ஆகியோர், “சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் தொடர்புடையவரை கைதுசெய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 66-ஏ , அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது. மேலும் இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது” என அறிவித்தனர்.கடந்த 2012-ல், சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தை விமர்சித்து பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட ஷாஹீன் தாதாஎன்ற இளம்பெண்ணும் அதற்கு விருப்பம் வெளியிட்ட அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஸ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கிலேயே தற்போது மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.நீதி கிடைத்துவிட்டது‘லைக்’ போட வேண்டிய தீர்ப்பு


எனக்கு நீதி கிடைத்துவிட்டது

கடந்த 2013ல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் கபில்சிபல் மற்றும் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் குறித்து விமர்சனங்கள் மற்றும் கேலிச்சித்திரங்களை சஞ்சய் சௌத்ரி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டார்.* மனோஜ் ஆஸ்வால் என்பவர் தனது இணைய தளத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் குறித்து ஆட்சேபகரமாக கூற்றுக்களை எழுதியதாக கைது செய்யப்பட்டார்.

மேற்குவங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அம்பிகேஷ் மஹாபத்ரா என்பவர், அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டார்.* புதுச்சேரியைச் சேர்ந்த ரவி சீனிவாசன் என்ற வணிகர் அன்றைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனைப் பற்றி விமர்சித்து எழுதியதற்காக கைது செய்யப்பட்டார்.* முகநூலிலும், டுவிட்டரிலும் ஒரு அரசியல்வாதி குறித்து விமர் சித்து எழுதியதற்காக ஏர் இந்தியா ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

 
நாடாளுமன்றம் மற்றும் அரசியல் சட்டத்தின் குறைவான திறனு டைய செயல்பாடுகள் குறித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக அசீம் திரிவேதி என்பவர் கைது செய்யப்பட்டார்.* கடைசியாக இரு கைதுகள்தான் நாட்டை உலுக்கியவை, அதில்முதலாவது, சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேயின் மறைவுக்குப் பின்னர் கடையடைப்பு நடத்தப்பட்டதால் அதனால்பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களைப் பார்த்து முகநூலில் விமர்சனங்களை சாஹதீன் தாதா என்ற பெண் பதிவிட்டிருந்தார். இந்த விமர்சனத்திற்கு ரினு சீனிவாசன் என்ற இன்னொருஇளம்பெண் லைக் போட்டிருந்தார். அதனால் அவர்கள் இரு வரும் கைது செய்யப்பட்டனர்.* இரண்டாவது சம்பவம் 16 வயது மாணவர் ஒருவர் சமாஜ்வாதிக்கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான் பற்றி தனது முகநூலில்விமர்சனங்கள் எழுதியதற்காக கைது செய்யப்பட்டார்.இப்படி ஏராளமான பேர் கைது செய்யப்பட்டதன் விளைவாக உச்சநீதிமன்றம், கடந்த 2013ல் “யாராவது ஆட்சேபகரமானதகவல்களை இணையதளத்திலோ அல்லது முகநூலிலோ அல்லது டுவிட்டரிலோ பதிவிட்டிருந்தால் அந்த நபரை போலீஸ் ஐ.ஜிஅல்லது துணை போலீஸ் கமிஷனரின் அனுமதியின்றி கைதுசெய்யக்கூடாது” என்று உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் இந்த சட்டப்பிரிவை தவறாகப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு கைதுகள் தொடர்ந்தன.
 
66 ஏ என்ன சொல்கிறது?

ஒரு கணிப்பொறி மூலமாக அல்லது தொடர்பு சாதனத்தின் மூலமாக (1) எந்த தகவலாக இருந்தாலும் அது தாக்குதலாகவோ அல்லது தொந்தரவு தரும் வகையில் இருந்தாலோ (அல்லது) (2) ஒரு தகவல் தொந்தரவு, சங்கடம், இடையூறு, அவமானப்படுத்துதல், காயப்படுத்துதல், குற்றவியல்ரீதியாக அச்சுறுத்தல், வெறுப்பு அல்லது கெட்டபெயரை உருவாக்குதல் போன்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப் பட்டிருந்தால், (அல்லது) (3) எந்த ஒரு மின்னஞ்சல் செய்தியும் தொந்தரவு அளிக்கும் அல்லது சங்கடத்தை விளைவிக்கும் நோக்கத்தோடு அல்லது அந்த தகவலைப் பெறுபவரை ஏமாற்றும் நோக்கத்தோடு அல்லது குழப்புவது ஆகிய குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.



இந்த ‘தகவல்கள்’ கீழ்க்கண்ட வடிவங்களில் இருந்தால்...செய்தியாக, படங்களாக, ஆடியோ ஒலியாக, காணொலியாக, எந்த மின்னணுப் பதிவும் செய்தியும் பரிமாறப்பட்டிருந்தால்.இச்சட்டப்பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் குற்றத்தின் தன்மையைப்பொறுத்த அபராதமும் விதிக்கப்படும். இச்சட்டம் கடந்த 2000ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டு, 2008ல் பிரிவு 66ஏ என்பதனைக் கொண்டு வருவதற்காக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 2009ல் குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. பிரிட்டிஷ் தகவல் தொழில் நுட்பச்சட்டத்தினை முன்மாதிரியாக கொண்டு இது இயற்றப்பட்டது.

  ‘என் மகளுக்கே பெருமை சேரும்’

மும்பை, மார்ச் 24-
சட்டப் பிரிவு 66-ஏ ரத்தானதற்கான பெருமை தன் மகளையே சேரும் என இச்சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட கார ணமாக இருந்த இளம் பெண் ஷாஹீன் தாதாவின் தந்தை முகமது ஃப்ரூக் தாதா தெரிவித்துள்ளார்.அவர் அளித்துள்ள பேட்டியில், “சட்டப்பிரிவு 66-ஏ ரத்ததானதற்கான பெருமை என் மகளையே சேரும். பேஸ்புக் பகிர்வுக்காக அவர் கைது செய்யப்பட்டபோது அவரை நான் கடிந்துகொள்ளவில்லை. அவர் எந்த தவறும் செய்யவில்லை என எனக்குத் தெரியும். எனவே அவருக்கு நான் எப்போதும் ஆதரவாகவே இருந்தேன். இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



இந்த தீர்ப்பை நான் வெகுவாக வரவேற்கிறேன்“ எனக் கூறினார்.பாதிக்கப்பட்ட இளம் பெண்களில் ஒருவரான ரினு சீனிவாசன், “எனக்கு நீதி கிடைத்துவிட்டது. இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த மக்களுக்கு கிடைத்த வெற்றி இது. நான் லைக் செய்த பதிவு தவறானதும் அல்ல; யாரையும் புண்படுத்துவதாகவும் இல்லை. இதனை புரிந்துகொண்டு ஆரம்பம் முதலே என் குடும்பத்தினர் எனக்கு துணை நின்றனர்” எனக் கூறியுள்ளார்.

லைக்’ போட வேண்டிய ஒரு சிறப்பான தீர்ப்பு

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் ஜனநாயகத்தின் புதிய பரிணாமமாக விரிந்துள்ளது. குடிமக்கள் குறிப்பாக இளைஞர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இதையொட்டி விரிவான அளவில் விவாதங்களும் நடைபெறுகின்றன. ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கத்தினரும் இயன்றவரை கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கவே முயல்கின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக் கள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ கொண்டுவரப்பட்டது.

இந்தச்சட்டப்பிரிவு அரசியல் சட்டத்திற்கு முரணானது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் செவ்வாயன்று வழங்கி யுள்ளது. இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ஏ பொதுமக்களின் கருத்துச்சுதந்திரத்தை நேரடியாகவே பறிப்பதாக உள்ளது என்று மிகச்சரியாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்தச் சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்கத்தக்கதல்ல. ஒருவருக்கு அவதூறாகத் தெரியும் ஒரு விஷயம் மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம்.

எனவே அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமைக்கு எதிரான இச்சட்டப்பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ள னர். கருத்துரிமையை உறுதி செய்யும் வகையில்வெளிவந்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. 2012ம் ஆண்டு சிவசேனை முன்னாள் தலைவர் பால்தாக்கரே மறைவைத் தொடர்ந்து சிவசே னைக் கட்சியினர் மும்பை உள்ளிட்ட நகரங் களில் மக்களை மிரட்டி கடையடைப்பு செய்ய வைத்தனர். இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதை விமர்சிக்கும் வகையில் ஷாஹீன் தாதா என்ற இளம் பெண் கருத்து தெரிவித்திருந்தார். அவரதுதோழி ஒருவர் இதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.

அவர்களைக் கண்டித்து சிவசேனைக் கட்சியினர் வன்முறையில் இறங்கினர். அவர்களை தாஜா செய்ய இளம் பெண்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஸ்ரேயா சிங்கால் என்ற மாணவி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்களை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தவர்களும் மிரட்டப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இந்தப்பின்னணியில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியமானது.

இந்த சட்டப்பிரிவு துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்ற ஒரே காரணத்திற்காக இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வது முறையல்ல என்ற அரசுத்தரப்பு வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக முக்கியமானது, வரவேற்கத்தக்கது என்றாலும் சமூக வலைத்தளங்களில் செயல்படுவோர் தங்களுக்குத் தாங்களே ஒரு சுய தணிக்கையை மேற்கொள் வது அவசியமாகும். அன்றாடம் விமர்சிக்க வேண்டிய, கண்டிக்க வேண்டிய எத்தனையோ சமூகவிஷயங்கள் உள்ளன. அதை விடுத்து சாதிய, மதவெறி அடிப்படையிலான கருத்துப்பரிமாற்றங்களுக்கும், மூட நம்பிக்கைகளை பரப்புவதற்கும்சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாமல் இருப்பது அவசியமாகும்.

  

No comments:

Post a Comment