Sunday 1 June 2014

ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: மதிமுக தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், உயர் நிலைக்குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னை தாயகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தமிழக அரசுக்கு வலியுறுத்தல்...

* தமிழக அரசு, 2013-14 கல்வி ஆண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டு, முதற்கட்டமாக ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்கியது. நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்க உள்ளது.

இதன்மூலம், பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையில் இருந்து முற்றாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுவது கண்டனத்திற்குரியது ஆகும். இந்நடவடிக்கை முழுக்க முழுக்கத் தமிழ் மொழிக்கு எதிரானதாகும்.

தாய்மொழி வழிக் கல்வியை இழந்துவிட்டால், தமிழ் இனம் தனது அடையாளத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் முற்றாக இழந்துவிடும் கேடு நேர்ந்துவிடும். எனவே, தமிழ் மொழிக்கு எதிரான, ஆங்கில வழி கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment