Friday 11 July 2014

தனியார் பள்ளிகள் vs அரசுப் பள்ளிகள் - ஸ்ரீராம்

உணவு, சீருடை, கல்வி, புத்தகங்கள் என்று அனைத்தையும் அரசுப் பள்ளிகள் இலவசமாக வழங்கினாலும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள்கூட, கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு என்ன காரணம்? ஏன் அரசுப் பள்ளிகளால், தனியார் பள்ளிகளின் தரத்தை எட்டிப் பிடிக்கமுடியவில்லை?
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்  தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள்
சம்பளம் : ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத் தொகை ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை.   தனியார் : ரூ. 3,000 முதல் ரூ. 7,000 வரை.
பணி நிரந்தரம் : பலமான சங்கம் இருப்பதால் அவ்வளவு சுலபத்தில் ஒழுங்கு நடவடிக்கையோ பணி நீக்கமோ செய்யமுடியாது. தனியார் :  பள்ளி நிர்வாகம் தன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பல இடங்களில் 10 மாத ஒப்பந்தத்துடன் பணியில் அமர்த்துகிறார்கள். இரு மாத கோடை விடுமுறையின் போது சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை அல்லவா?
தரம் : பி.எட். (தற்போது டி.எட்.)  முடித்திருக்கவேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். தனியார் : அருகிலுள்ள பள்ளிகளோடு  போட்டிபோடும்போதும் அல்லது பெற்றோர் வற்புறுத்தும்போதும் உயர் படிப்பு படித்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
பயிற்சி : அரசு செலவில் அடிக்கடி நடத்தப்படும். தனியார் : ஒரு சில பிரபல பள்ளிகள் தவிர மற்றவை ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள்அளிப்பதில்லை.
ஊக்கம் : நன்றாக வகுப்பெடுப்பதற்கு எந்தவித ஊக்கமும் அளிக்கப்படுவதில்லை. தனியார் : நன்றாக வகுப்பெடுக்கும்படி நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் தருகிறது.
பிற பணிகள் : தேர்தல் சமயங்களில் பணியாற்றவேண்டும். கணக்கெடுப்பில் ஈடுபடவேண்டும். தவிர்க்கமுடியாது. தனியார் :    பிற வேலைகள் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஆனால், அதிக நேரம் பணியாற்றுமாறு கோரப்படுவார்கள். வீட்டிலும் வேலையை எடுத்துச் சென்று செய்யவேண்டியிருக்கும்.
பணி மாற்றம், பதவி உயர்வு : ஆசிரியரின் விருப்பத்தை அறியாமல் பணி மாற்றம்  செய்யமுடியாது. குறிப்பிட்ட இடத்தில் பணி காலியாக இருந்தால், விண்ணப்பித்து பணிமாற்றம் செய்துகொள்ளலாம். தனியார் : பணிமாற்றம் சாத்தியமில்லை. பதவி உயர்வு பெரும்பாலும் சாத்தியமில்லை.

No comments:

Post a Comment