Sunday 22 February 2015

கல்வியில் மதவெறியை புகுத்தும் மோடி அரசுக்கு எதிர்ப்பு நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணி

புதுதில்லி, பிப். 21 -

கல்வி வணிகமயமாக்கப்படுவதையும் மதவெறிமயமாக்கப்படுவதையும் எதிர்த்து பிப்ரவரி 26ம்தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணிநடத்தப்பட உள்ளதாக இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு அறிவித்துள் ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தலைவர் டாக்டர். வி. சிவதாசன், பொதுச் செயலாளர் ரித்தபிரதா பானர்ஜி எம்.பி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:கல்வித்துறையை பொறுத்தவரை பாஜக அரசு, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் அதே வணிகமயமாக்கும் திட்டத்தைத்தான் பின்பற்றுகிறது. ஆனால் அதே சமயத்தில், மிக ஆபத்தான முறையில் கல்வியை மத வாதமயமாக்கும் திட்டத்தையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.மத்திய அரசின் மனித வள மேம் பாட்டுத்துறை பல்கலைக்கழகங்களுக்கு ஒருநோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில் செமஸ்டர் முறையையும் தேர்வின் அடிப்படையிலான மதிப்பெண் முறையையும் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. தேர்வு அடிப்படையிலான மதிப்பெண் முறை என்பது நான்கு ஆண்டு இளநிலை படிப்பை 3 ஆண்டுகளில் முடிக்கும் முறையின் நகலே ஆகும். இந்த அரசு அதே திட்டத்தை அமல்படுத்துவதில் ஈடுபாடு காட்டுகிறது. நான்கு ஆண்டுகள் இளநிலைப்பாடத் திட்டத்தை திரும்பப் பெறுவது என்பது ஒரு அரசியல் நாடகமே. தேர்வு அடிப்படையில் மதிப்பெண் பெறும் முறையானது ஊழியர்களுக்கு காபி கடையில் அளிக்கப்படும் தேர்வு உரிமையை போன்றதாகும்.

இந்த முறையில் விரும்பியதை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இது மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கும் கல்வித்துறைகளுக்கும் இடையில் அலை வதற்கே வழிவகுக்கும். இது நான்குஆண்டு இளநிலை படிப்புடன் நான்காம் ஆண்டைத் தவிரமற்ற விசயங்களில் ( அடிப்படை வகுப்பு, மையம் மற்றும் தேர்வு செய்யும் பாடங்கள் ஆகிய முறையை திரும்ப கொண்டுவருவது) ஒத்துப் போவதாக அமைகிறது. அடிப்படை யில் இந்த முறையானது அமெரிக்க முறையினை பின்பற்றுகிறது. அங்கு கல்வியானது மாணவர்களின் கடனையும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களையும் சார்ந்துள்ளது. இதுவெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்கு கவர்ந்திழுக்கும் முயற்சியே ஆகும்.

சிக்கலான திட்டம்

பாஜக அரசு `ராஷ்ட்ரிய உச்சாதர் சிக்ஷ அபியான்‘ என்ற தேசிய உயர்கல்விக்கான சிக்கலான பிரச்சாரத்தை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. இந்த பிரச்சாரம் குறித்து அதிகமான விவாதங்களும் நடந்துள்ளன. ஆனால் அதன் அமலாக்க அனுபவம் நமது கவலைகளை உறுதிப்படுத்தி விட்டது. இந்தப் பிரச்சாரம் அமல்படுத்தப்பட்ட இமாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது.

வகுப்பறையி லிருந்து தேர்வு மதிப்பிடுவது வரை கல்வித்துறையின் நிலைமை அவலமான நிலை யாகவே உள்ளது.இந்திய கல்வித் துறையானது ஏற்கனவே மிகவும் வணிகமயமாக்கப்பட்டு விட்டது. அதுஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர் களையும் மோசமாக பாதித்துள்ளது. தற் போது பொது நம்பிக்கைக்கு மாற்றாக நமது கல்வி அமைப்பானது தனியார்களினால்தான் நடத்தப்படுகிறது. அவர்களின் ஒரே நோக்கம் பட்டங்களை பெறுவதும் லாபங்களை சம் பாதிப்பதும்தான்.

அதிகரிக்கும் தனியார் பள்ளிகள்


நீண்ட காலப் போராட்டத்திற்கு பின்கல்விக்கான உரிமைச்சட்டம் அமல்படுத்தப் பட்ட பின்னரும்கூட தனியார்மயம் அதிகரித் துள்ளது. தனியார் கல்வி வணிகமயமாக மாறி உள்ளது மட்டுமின்றி அவை, சமூக நீதிக்கான நெறிகளை எப்போதுமே பின்பற்றுவதில்லை. கடந்த 2005ல் இந்தியாவின் கிராமப்புறங்களில் 17 விழுக்காடு தனியார் பள்ளிகள் இருந்தன. இவை 2013ல் 27 விழுக்காடாக அதிகரித்தன;

2014ல் 30.8 விழுக்காடாக உயர்ந்தன. தனியார்மயமாக்கப்படுவதால் அதன் பாதிப்பு பெண் குழந்தைகளின் மீது இருந்ததை அனுபவம் காட்டுகிறது. கடந்த 2014ல் 7லிருந்து 10வயது வரையிலான வயதிலுள்ள குழந் தைகளில் 35.6 விழுக்காடு சிறுவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர் .

அதே சமயத்தில் சிறுமிகள் 27.7 விழுக்காடுதான் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் சேர்ந்த 11லிருந்து 14வயது வரையிலான குழந்தைகளில்33.5 விழுக் காட்டினர் சிறுவர்கள்; 25.9 விழுக்காட்டினர் சிறுமிகள் ஆவர்.உயர்கல்வியைப் பொருத்தவரை தனியார்மயத்தின் வேகம் அதிகமாகவே உள்ளது. இன்றைக்கு உயர் நிலைக் கல்வியில்சேரும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்களே.

66 விழுக்காடு மாணவர்கள் பொதுக்கல்வியிலும் 75லிருந்து 80 விழுக்காடு வரையிலான மாணவர்கள் தொழிற் கல்வியிலும் சேர்ந்துள்ள மாணவர்கள் தனியாரிலும் சுயநிதிக் கல்லூரிகளிலும் தான் சேர்ந்துள்ளனர். கல்வி வணிகமயமாவது ஏற்கனவே கல்வி அமைப்பில் பெரிய விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் இந்த விரிசல்கள் அதிகரித்துள்ளன. சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்குவது ஆகியவைதான் எந்த ஜன நாயகத்திலும் கொள்கைகளை உருவாக்கும் தூண்களைப்போன்றது ஆகும்.

இதில் தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கு தடை யற்ற லாபம் சம்பாதிப்பதை மட்டுமே ஒரு நெறியாக கொள்ளும்பட்சத்தில் அதுவே முதல் இழப்பாக முடியும். கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்கத் தயாரில்லை அது இந்த அரசின் முதல் பட்ஜெட்டிலேயே முழுமையாக நிரூபணமானது. திருத்தப்பட்ட பட்ஜெட்டின் மதிப்பீடுகளின் படி 2014-15 ல் உயர் கல்விக்கான நிதியை ரூ. 3900 கோடி வரை குறைத்துள்ளது. கடந்த 9 மாதங்களில் ஆர்எஸ்எஸ்- பாஜக அரசின் செயல்பாடுகளை பகுப்பாய்வு செய் தால் அதன் உள்நோக்கமானது தெளிவாகிறது.

பாஜகவின் அரசியல் கடமையே கல்வியை மதவாதமயமாக்குவதாகும். இது குறித்து அதிகமாகவே விவாதிக்கப்பட்டுள்ளது. இதை பாஜக தலைவர்களும் வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கின்றனர். நாடாளுமன்றத்தி லும் கூட இதை ஏற்றுக்கொள்கின்றனர். பாஜக தலைவர்கள் பாட நூல்களையும் கல்வித் திட்டத்தையும் மாற்றும் நோக்கம் குறித்து அறிவிக்கின்றனர். கடந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசிலும் இதுபோன்ற முயற்சிகள் இருந்தன. ஆனால் தற்போதைய பாஜக அரசு மிகவும் மூர்க்கத்தனமாகவும் வீரியத்துடனும் அமலாக்கத் துடிக்கிறது. இதுவே இந்திய கல்வி முறையின் இன்றைய தீவிரமான பிரச்சனையாகும். அது பாஜக அரசின் கீழ் மேலும் சீரழிவதாக உள்ளது. ஒரு பொறுப்பான மாணவர் அமைப்பு என்ற முறையில் இந்தச் சவாலை எதிர்கொள்ள இந்த கொள்கைகளுக்கு எதிராக ஒரு வலிமையான போராட்டத்தை தொடர வேண்டும். இதை கவனத்தில் கொண்டு இந்திய மாணவர் சங்கம் தேசிய அளவில் கல்வியை வணிகமயமாக்குவதற்கும் மதவாதமயமாக்குவதற்கும் எதிராக ஒரு போராட்டத்தை தொடங்கியுள்ளது . இதனடிப்படையில் இந்தப் பேரணியானது ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
 
நன்றி: தீக்கதிர் நாளிதழ்

No comments:

Post a Comment