Saturday 11 April 2015

அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன?

இந்தியா விடுதலை அடைந்தது முதல் வயதுவந்தோர் கல்விக்காக (ஆரம்பத்தில் முதியோர் கல்வி என்று பெயர் இருந்து) எத்தனையோ பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்ட்டிருக்கின்றன. ஆனால், முழு எழுத்தறிவு இயக்கம் என்ற மக்கள் இயக்கம்தான் அகில இந்திய அளவில், வயது வந்தவர்கள் அனைவரும் கல்வி பெற்றே தீர வேண்டியதன் அவசியத்தை மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் உட்பட ஒவ்வோர் அணுவிலும் கொண்டு சென்று சேர்த்த மாபெரும் இயக்கம்.

இது ஒரு கவர்ண்மென்ட் ஸ்கீமாக இருந்தாலும் இதை வழி நடத்தியது அறிவியல் இயக்கம் என்ற மக்கள் இயக்கம். அறிவொளி இயக்கத்தையும் மக்கள் இயக்கமாகவே எடுத்துச் சென்றது. மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மக்களாலேயே மக்களுக்காக நடத்தப்படும் ஒரு இயக்கமாக மாற்றியது. இதில் அரசு அதிகாரிகளையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டது. அரசாங்க மக்கள் நலத்திட்டங்கள் கடைநிலை மக்கள் வரை எப்படி எடுத்துச்செல்வது என்பதற்கு அறிவொளி இயக்கம் ஒரு முன் மாதிரியாக இருந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை தென் மாநிலங்களில்தான் முழு வீச்சில் அறிவொளி நடைபெற்றது. இதற்குக் காரணம் தென் மாவட்டங்களில் உள்ள பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் உள்ளதுதான். வட இந்தியாவைப் பொருத்தவரை தன்னார்வம் மிகவும் குறைவு என்பதால் இத்திட்டம் போதுமான அளவு செயல்படவில்லை என்பது த.வி.வெங்கடேஸ்வரனின் கருத்து.

சாதாரண மக்களும், பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்களும் அரசாங்கம் அறிவொளி இயக்கத்திற்காக செலவிட்டதைவிட இரண்டு மடங்குத் தொகை செலவு பண்ணியிருக்காங்க. எப்படின்றீங்களா? அறிவொளி இயக்கத் தொண்டர்கள், வீதி நாடகக் கலைஞர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து கொடுப்பது, மேடை, மைக் செட் ஏற்பாடு செய்து கொடுப்பது, நோட்டீஸ் போடுவது போன்ற உதவிகளைச் செய்தனர். அப்பறம் நம்ம கற்போர் எப்ப வேணா நமக்கு எதுக்கு படிப்பு, இனிமே படிச்சு என்னாத்த கிழிக்கப்போறோம்ன்னு சோர்ந்து போயிடுவாங்க. அவங்கள திரும்பவும் உற்சாகமா படிக்க வைக்க அவங்களுக்கு பரிசளிப்பதன் மூலமாக செய்ய முடியும். அந்தப் பரிசுகளை வாங்கித் தருவார்கள்.

முன்னயெல்லாம் பிள்ளைகளை ஏதாவது ஒர்க் ஷாப்பில் விட்டால் பெரிதாகும்போது பெரிய மெக்கானிக்காக வருவான் என்று பெற்றோர் சின்னப்பிள்ளைகளை ஒர்க் ஷாப், கடைகள் என்று வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். ஆனா இந்த அறிவொளி இயக்கம் செயல்பட ஆரம்பித்த பிறகு சுமார் 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளில் பார்த்தால் தங்கள் பிள்ளைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்பிய அளவு மிக அதிகம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை குமரி மாவட்டம்தான் முதல் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தின் மலைவாழ் ம்ககளாகக் கருதப்படும் காணிக்காரர்கள் மத்தியில் கூட இன்று எழுத்தறிவு பரவ முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அறிவொளி இயக்கம்தான் என்று தச்சமலை என்ற மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர் ஈஸ்வரி கூறியுள்ளார்.

என்னய மாதிரி பத்தாம் வகுப்பு பாசானவங்க எட்டாம் வகுப்பு பாசானவங்க கிட்ட இருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கி எங்களாலயும் படிப்பு சொல்லிக்கொடுக்க முடியும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டிய இயக்கம். வீட்டு சமையல் அறைகளிலும் கூடங்களிலும் தேங்கிக்கிடந்த லட்சக்கணக்கான பெண்களை முதல் முறையாக வீடுகளை விட்டு பொது வெளிக்கு அழைத்து வந்தது அறிவொளி.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் அறிவொளி இயக்கத்தினால் தெளிவடைந்த பெண்கள் குடியும் தங்கள் வறுமைக்கு ஒரு காரணம் என்பதை உணர்ந்து சாராய பானைகளை உடைத்து, சாராயம் விற்பவர்களையே விரட்டிவிட்டனர். கிராமமே ஒன்று சேர்ந்து செய்ததால் சாராய வியாபாரிகளுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தச் செய்தி அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அறிவொளி மூலம் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் லட்சக்கணக்கானவர்கள். அவர்கள் இப்போது மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தலைவர்கள், பிரதிநிதகள், ஊக்குநர்கள், உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவொளி இயக்கம் மூலம் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

படிப்பு சொல்லித்தர தன்னார்வலர்களாக வந்தவர்களையும் அவர்களும் மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கி அவர்களும் மேற்படிப்பு படித்து முன்னேறினார்கள். அதுவுமில்லாம அறிவொளி இயக்கத் தொண்டர்களாக இருந்தவர்களின் திறமைகளை வளர்த்தது. அவர்கள் பின்னர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக, தலைவராக, ஒன்றியப் பிரதிநிதியாக, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக உயர்த்தியது. கேரளாவில் ஒரு அறிவொளி இயக்கத் தொண்டர் சட்ட மன்ற உறுப்பினராகவே ஆகியிருக்கிறார்.

பட்டப்படிப்பு, பத்தாம் வகுப்பு படித்துவிட்டு தாழ்வு மனப்பான்மையோடு ஒதுங்கியிருந்தவர்களை 10 அறிவொளி மையங்களை மேற்பார்வை செய்யும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக (APC), ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களாக (BBC), மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர்கள் (CPC) வரை உயர்த்தியது அறிவொளி.

மக்களிடம் இருந்த நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள், இதைப்போன்ற வடிவங்களை மக்களிடம் இருந்து திரட்டி தொகுத்துள்ளது. நானும் ஒரு நாட்டுப்புற பாடல் ஒன்றை எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் இருந்து சேகரித்துக்கொடுத்துள்ளேன். இதுவுமில்லாமல் மறைந்துபோன கிராமப்புற பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள், உணவுகள் இப்படி ஏராளமான நாட்டார் கலைச்செல்வங்களையும் திரட்டி தொகுத்துள்ளது அறிவொளி இயக்கம்.

எல்லாவற்றையும் விட, அரசு உயர் அதிகாரிகளை சாதாரண ம்ககளோடு தயக்கமின்றிக் கலந்து பழகச் செய்தது-இவர்கள் இருவருக்குமிடையிலிருந்த பெரும் இடைவெளியைக் குறைத்து நெருக்கமாக்கியது அறிவொளிதான்.

அறிவொளியை ஒரு மக்கள் இயக்கமாகக் கொண்டு சென்றதால் கிடைத்த வெற்றிகள்-அநுபவங்களின் பின்னணியில்தான் இப்போது முழு சுகாதாரத் திட்டம், வாழ்வொளி-கண்ணொளித் திட்டங்கள், ஊரக நலவாழ்வு இயக்கம், ராஜீவ் காந்தி குடிநீர் இயக்கம் போன்ற திட்டங்கள் வடிவம் பெற்றுள்ளன.

1966-ல் கல்வித் தீர்க்கதரிசி டி.எஸ்.கோத்தாரி கூறியது "கட்டாயக் கல்வியால் மட்டும் நம் நாட்டை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக ஆக்கிவிட முடியாது. கட்டாய இலவச கல்வி ஒரு சர்வரோக நிவாரணி அன்று. எழுதப் படிக்கத் தெரிந்த எல்லா ஆண்களும், பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும். இதனைவிடக் குறைவான எந்த முயற்சியாலும் தேவையான ஆர்வத்தைத் தூண்டவும் வலுவான வேகத்தைத் தட்டி எழுப்பவும் முடியாது."
7/05/2010 | Author: ஜெயந்தி
உதவி: கமலாலயன்

No comments:

Post a Comment