Saturday 11 April 2015

ஆள்பவரின் தேவையை மையமாகக் கொண்டு கட்டப்பட்டதே இன்றைய கல்வி முறை: ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன் நேர்காணல்


ச. தமிழ்ச்செல்வன் சிறுகதையாசிரியராக மலர்ந்தவர். 

அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு "வெயிலோடு போய்' 1984-ல் வெளிவந்தபோது, எல்லாருடைய கண்களிலும் ஆர்வம் கலந்த மகிழ்ச்சியைக் காண முடிந்தது. இருபதுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியரான தமிழ்ச்செல்வன், வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராக அவர் ஆற்றிய பணிகள் முற்போக்கு இலக்கிய உலகில் முத்திரை பதித்தவை. தொழிற்சங்க அனுபவமுள்ள தமிழ்ச்செல்வன் அந்த அனுபவங்களை "ஜிந்தா பாத் ஜிந்தாபாத் - தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள்' என்ற நூலாக எழுதியிருக்கிறார். பெண் விடுதலை, கல்வி ஆகிய துறைகளிலும் தமிழ்ச்செல்வனின் பணிகள் அளவிட முடியா தவை. "பூ' திரைப்படத்துக்கான சிறந்த கதாசிரியர் விருது தமிழக அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஓர் அற்புதமான தோழர்; மனிதர். அவரிடம் பேசியதிலிலிருந்து...

எழுத்துலகுக்கு வந்தது எப்படி?. தாத்தா மதுரகவி பாஸ்கர தாஸ், அப்பா மே.சு. சண்முகம், தம்பிகள் கோணங்கி, முருக பூபதி என தலைமுறை தாண்டி கலை, இலக்கிய ஈடுபாடு வந்ததற்கு சிறப்பான காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?

""வீட்டுச் சூழல் நிச்சயமாக தூண்டுதலாக இருந்தது. தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் நான் பிறந்த ஆண்டில் இறந்து விட்டார். அவரை நான் புரிந்து கொண்டது ரொம்பப் பின்னாடிதான். சொல்லப் போனால் தாத்தாவின் இலக்கிய முகத்தை சரியாகவும் முழுமையாகவும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவன் என் கடைசித் தம்பி முருக பூபதிதான். அவன்தான் ஊரெல்லாம் தேடி தாத்தாவின் எழுத்துக்களையும் டைரிகளையும் வீட்டுக்குக் கொண்டு சேர்த்தவன்.

என்னை ஈர்த்த முதல் எழுத்தாளர் என் அப்பாதான். "புரட்சி' என்கிற பேரில் அவர் பள்ளிக்காலத்தில் நடத்திய கையெழுத்து இதழும், அதில் அவர் எழுதிய கட்டுரைகளும்தான் முதல் தூண்டுதல். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று கலந்து கொண்டதும், அதற்கு அப்பாவும் சித்தப்பாவும் ஒத்தாசையாக இருந்ததும் இந்த மாதிரி வேலையெல்லாம் முக்கியம் என்கிற உணர்வை ஏற்படுத்தின. பெரிய எழுத்தாளனாகிப் பேரும் புகழும் அடைய வேண்டும் என்கிற ஆசை சின்ன வயசிலேயே ஏற்பட்டது. இன்று திரும்பிப் பார்க்கையில் என்னை கதைகள் எழுதத் தூண்டிய முக்கிய காரணியாக நான் உணர்வது- சிறு வயதில் என் அப்பாவும் அம்மாவும் வேறு வேறு ஊர்களுக்கு மாற்றலாகிப் போய்க்கொண்டே இருந்ததால், நெடுங்காலம் இளவயதில் மனதில் தேங்கியிருந்த அப்பா, அம்மாகூடச் சேர்ந்து வாழ்வதற்கான ஏக்கம்தான் என்பேன். கொஞ்ச காலம் கவிதைகள் எழுதினேன். அது கைவராது என்று உணர்ந்தபோது அதைக் கைவிட்டேன். அச்சான கவிதைகளைக்கூட சேர்த்து வைக்கவில்லை. பின்னர் கொஞ்சம் கதைகள் எழுதினேன். அதுவும் சரியாக வரவில்லை என்று தோன்றியது. பிறகு கொஞ்ச காலம் நாடகம் போட்டோம். சப்தர் கொலையை அடுத்து வீச்சோடு பலப்பல கிராமங்களுக்கும் சென்று நாடகங்கள் போட்டோம்.

இதற்கிடையில் நான் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு "தமுஎச'வில் முழுமையாகக் கரைந்தேன். அது வளர்த்த சமூக அக்கறையால் கதையல்லாத எழுத்துகளின் பக்கம் திரும்பினேன், அதைத்தான் இப்போது விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். கதைகள் எழுதும் மனநிலை இருந்தும் போதிய அவகாசம் இல்லாததால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. 

அப்பா எங்கள் எழுத்தை ஆதரித்ததாலும், நான் அவனைப் புறக் கணித்ததாலும் கோணங்கி எழுத வந்தான். முருகபூபதி நாடகத்தின் மீது அவனுக்கே ஏற்பட்ட ஆர்வத்திலிலிருந்து எழுத வந்துவிட்டான்.

எங்கள் அப்பாவின் நாவல்கள் "பெரிய வயல்', "நிலம் மறுகும் நாடோடி' இரண்டும், "பூட்டுப் பாம்படம்' சிறுகதைத் தொகுப்பும் இப்போது வந்துள்ள "மண்ணின் கதைகள்' கவிதைத் தொகுப்பும் மற்றவர்களுக்கு எப்படியோ எங்களுக்கு மிக முக்கியமான புத்தகங்கள்.''

எல்லாரையும்போலவே முதலிலில் கவிதை எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து கவிதை எழுதாமற் போனது ஏன்?

""அது ரொம்பக் கஷ்டமான வேலை என்பதைப் புரிந்து கொண்ட தால் விட்டுவிட்டேன். தவிர, நான் முதலில் எழுதியது கவிதை அல்ல. முதலில் அச்சானதுதான் கவிதை. கதைகள்தாம் முதலில் எழுதினேன். பல பத்திரிகைகளுக்கு அனுப்பி சோர்ந்து விட்டேன். அப்புறம் தான் கவிதைகள் எழுதினேன். ரொம்ப நாள் கழித்து என் முதல் கதையை "தாமரை' வெளியிட்டது.''

உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான "வெயிலோடு போய்' யதார்த்த வகை எழுத்தாக இருந்தது. ஆனால் அடுத்த சிறுகதைத் தொகுப்பான "வாளின் தனிமை'யில் உள்ள சில கதைகள் அவ்வாறில்லை. எழுத்து தொடர்பான உங்களுடைய பார்வையில் மாற்றம் ஏற்பட்டது காரணமா? அல்லது அன்று தமிழ் எழுத்துலகில் புதிதாகத் தோன்றி வளர்ந்த போக்கில் உங்களை அடையாளம் காணும் முயற்சியா?

""அன்று இலக்கிய உலகில் நடந்த யதார்த்தவாதம் பற்றிய மோசமான உரையாடல்களால் பாதிக்கப்பட்டேன் என்பதுதான் உண்மை. எல்லா வகையிலும் எழுதிப்பார்க்கும் ஆசையும் காரணம். "வாளின் தனிமை'யில் ஐந்து கதைகள் மட்டுமே அப்படி இருக்கும். மற்ற எல்லாம் "வெயிலோடு போயின்' தொடர்ச்சியாகத்தான் இருந்தது.''

சிறுகதைகளில் அழுத்தமாகக் கால் பதித்த நீங்கள், படைப் பிலக்கியம் சாராத கட்டுரை நூல்களில் அதிகக் கவனம் செலுத்துவதேன்?

""இயக்கத்தின் பகுதியாகிவிட்ட என் மனதில் இன்று இது தேவை என்கிற உணர்வு அழுத்தமாக இருப்பதால் எளிய சிறுநூல்களை எழுதலானேன். என் இளம் தோழர்களுக்கும் பரந்துபட்ட உழைப்பாளி மக்களுக்கும் கல்வி புகட்டும் பணி நம்போன்ற படித்த மத்தியதர வர்க்கத்தின் முக்கியமான கடமை என்று கருதுகிறேன். இந்திய தொழிலாளி வர்க்கம் இன்னும் வர்க்க உணர்வு பெறாத நிலை நீடிப்ப தற்கு மத்தியதர வர்க்கம் ஆற்றத் தவறிய இக்கடமை யும் ஒரு முக்கிய காரணம் என்று கருதுகிறேன். சிறுகதையிலும் ரொம்ப அழுத்தமாக நான் கால் பதிக்க வில்லை. சில நல்ல முயற்சிகளாக என் கதைகள் இருந்தன.''

இடதுசாரி இயக்கத் தொடர்பு உள்ளவர் நீங்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருந்திருக்கிறீர்கள். இது உங்கள் படைப்பு முயற்சிக்கு எந்த அளவுக்குத் துணை செய்திருக்கிறது?

""தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது ஒரு பூந்தோட்டம். அங்கே செடிகள் வளர்வதற்கான நல்ல சூழலும் தண்ணீரும் காற்றும் தட்ப வெப்பமும் இருக்கும். ஒரு செடி வளர்வது என்பது முழுக்க முழுக்க அச்செடி பூமியிலிலிருந்தும் சூழலிலிலிருந்தும் எடுக்க வேண்டியவற்றை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது. எழுத்து பெரிதும் தனி முயற்சி அல்லவா? சங்கம் கொட்டு அடிக்கும். பீப்பீ ஊதும். சாமி ஆட வேண்டியது அவனவன் -அவளவள் பிரச்சினை.''

தமிழ்நாட்டில் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எந்த அளவுக்கு உதவியிருக்கிறது?

""பொதுவான இலக்கிய வளர்ச்சிக்கும் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கும் தமுஎகச ஆற்றியுள்ள- ஆற்றி வரும் பங்கு குறிப்பிடத் தக்கது. புறக்கணிக்க முடியாதது. எல்லாத் துறைகளிலும் தடம் பதித்த படைப்பாளிகள் தமுஎகசவின் தலைவர்களாக இருக்கிறார்கள். எந்தப் பட்டியலிலிலும் இடம் பெறும் நாவல்களைத் தந்தவர்களான கு. சின்னப்பபாரதி, டி. செல்வராஜ், சாகித்ய அகாதமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி, அருணன், சோலை சுந்தர பெருமாள், தேனி சீருடையான், ம. காமுத்துரை, கீரனூர் ஜாகீர்ராஜா, சமீபத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்ற சு. வெங்கடேசன் எனப் பலரும் தமுஎகசவின் தலைவர்கள். நாவலை அடுத்து சிறுகதையை எடுத்துக் கொண்டால் கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச் செல்வன், உதயஷங்கர், பவா. செல்லதுரை, ஆதவன் தீட்சண்யா, கீரனூர் ஜாகீர்ராஜா, போடி மாலன், காமுத்துரை, சீருடையான், வெண்ணிலா, நாறும்பூ நாதன், இந்த ஆண்டு இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றுள்ள பாரதி கிருஷ்ணகுமார், எஸ். லட்சுமணப் பெருமாள், சுப்பாராவ் என்று ஒரு மிகப்பெரிய பட்டியல் இருக்கிறது. கவிதை உலகில் கந்தர்வன் துவங்கி சமீபத்தில் விருது பெற்ற சபரிநாதன் வரை ஏராளமான கவிஞர்கள் தமுஎகசவைச் சேர்ந்தவர்கள். பிரளயன் போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற நாடகக்காரர்கள் தமுஎகசவின் நிர்வாகிகள். கலைமாமணி பாவலர் ஓம் முத்துமாரி, கலைமாமணி புரிசை சம்பந்தன், புதுகை பூபாளம் குழு, திண்டுக்கல் சக்தி போர்ப்பறை உள்ளிட்ட கூத்துக் கலைஞர்கள் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இன்னும் கரிசல் குயில்கள் கிருஷ்ணசாமி, திருவுடையான், கருணாநிதி, கின்னஸ் சாதனை புரிந்துள்ள புதுவை சப்தர் ஹாஷ்மி குழு உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இசைக் குழுக்கள் எம் அமைப்பில் இயங்கி வருகின்றன. ஸ்ரீரசா, வெண்புறா உள்ளிட்ட நல்ல ஓவியர்கள் பலரும் இருக்கிறார்கள்.





மேடைப்பேச்சை எடுத்துக்கொண்டால் இன்று தமுஎகசவில்தான் பேச்சாளர்களே இருக்கிறார்கள் என்று சொல்லுமளவுக்கு பாரதி கிருஷ்ணகுமார், நந்தலாலா, மதுக்கூர் ராமலிலிங்கம், முத்துநிலவன், ஜீவி என்று பெரும்படையே இங்குதான் இருக்கிறது. தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் கலை இலக்கிய இரவுகள் நடத்தி, விடிய விடிய மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்க வேறு எந்த கலை இலக்கிய அமைப்பால் முடியும்? என்ன துறையானாலும் அதில் தமுஎகச படைப்பாளிகளை யாரும் புறக்கணித்துவிட முடியாது. ஆகவே முற்போக்குக் கலை இலக்கியத்துக்கும் பொதுவாக தமிழ்க் கலை இலக்கிய உலகுக்கும் தமுஎகச அளப்பரிய பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வருகிறது. மற்றவர்கள் மனம் திறந்து இவர்களைப் பாராட்டப் பழகாததால் வெளிச்சம் போதிய அளவுக்கு இவர்கள் மீது விழவில்லை.''

இன்று தமிழ் இலக்கியத்தில் பல போக்குகள் நிலவுகின்றன. முன்பு ஒரு குழுவினர் கலை கலைக்காகவே என்று சொல்லிலிக் கொண்டிருந்தபோது, இடதுசாரி கருத்துள்ளவர்கள் கலை மக்களுக்காகவே என்று பரப்புரை செய்து வந்தனர். அந்த நோக்கில் தீவிரமான விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் கைலாசபதி, கோ. கேசவன், அருணன், கே. முத்தையா போன்றவர்கள் முன்வைத்தனர். ஆனால் இன்று மார்க்சிய அடிப்படை யிலான இலக்கிய விமர்சனங்கள் அருகி வருகின்றன. இதற்கு என்ன காரணம்? இதன் விளைவாக மக்களுக்கு எதிரான கருத்தியல் சார்ந்த பல இலக்கியப் படைப்புகளும், படைப் பாளிகளும் எழுதிக் குவித்து வருகின்றனர். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

""அருணன் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் ஆய்வுத்துறையில் மிகப்பெரிய பங்களிப்புகளைச் செய்து வருகிறார். அவருடைய "தமிழரின் தத்துவ மரபு' நூலுக்கு ஈடாக வேறொன் றைக் குறிப்பிட முடியாது என்று எஸ்.வி. ராஜதுரை குறிப்பிடுகி றார். அவருடைய "காலந்தோறும் பிராமணியம்' என்கிற எட்டு நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வுலகுக்கு அவர் அளித்துள்ள கொடை என்பேன். ஆ. சிவசுப்பிரமணியன், ந. முத்துமோகன், பா. ஆனந்த குமார், குமரி சொக்கலிலிங்கம், பா. செயப்பிரகாசம், அ. மார்க்ஸ், மணி மாறன் போன்றோரும் இடதுசாரிப் பார்வையோடு விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். மக்களுக்கு எதிரான எழுத்துகள் அல்லது பிற்போக்கு எழுத்துகள் இன்றல்ல- என்றுமே அரசு மற்றும் முதலாளித்துவ ஊடகங்களின் உதவியோடு தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். நாம் விமர்சனத்தால் மட்டும் அவற்றை வீழ்த்த முடியாது. படைக்க வேண்டும். பரந்துபட்ட வாசகர் கூட்டத்தை உருவாக்க வேண்டும். இன்று தமிழகத்தில் பரவலாகி வரும் புத்தகக் கண்காட்சிகள் இடதுசாரிகள் இல்லாமல் இவ்வளவு ஊர்களில் நடத்தியிருக்கவே வாய்ப்பில்லை. வாசிப்பு இயக்கம், புத்தக விற்பனை இயக்கம் போன்றவற்றை தமுஎகசவும் எங்கள் பாரதி புத்தகாலயமும் திட்டமிட்ட முறையில் எல்லா மாவட் டங்களிலும் செய்து வருகிறோம். இதன் விளைவுகளைத் தமிழகம் நிச்சயம் விரைவில் காணும் என்று நம்புகிறேன். கலையையும் இலக்கியத்தையும் இயக்கமாக மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம்தான் நச்சிலக்கியத்தின் வெள்ளப் பெருக்கை எதிர்கொள்ள முடியும். மக்களுக்கு கல்வி அறிவும் வாசிப்புப் பழக்கமும் அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற அறிவொளி இயக்கம் தமுஎகச மற்றும் எமது சகோதர அமைப்பான தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (நானும் அதில் பொறுப்பாளராக இருந்தவன்) இணைந்து நடத்திய இயக்கமாகும். அரசு மட்டும் அதை நடத்தியிருக்க முடியாது. நாங்கள் இணைந்ததால்தான் அது மக்கள் இயக்கமாக மாறியது. எழுத்தறிவு இயக்கம் இலக்கிய வாசிப்புக்குமுன் தேவை என்பதால் நாங்கள் அதில் இறங்கினோம். இப்படித் தொலைநோக்கோடு பல காரியங்கள் ஆற்றி நீங்கள் குறிப்பிட்ட மக்கள் விரோத இலக்கியங்களை எதிர் கொள்வோம்.''

உங்களுடைய இலக்கிய நண்பர்களைப் பற்றி "சக பயணிகள்' என்று தொடர் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்களுடைய படைப்புகளைப் பற்றிய கூர்மையான விமர்சனப் பார்வை அவற்றில் தென்பட வில்லை. நட்புதான் மேலோங்கியிருக்கிறது. உங்களுடைய இந்தப் பண்புதான், மக்கள் நலன் சாராத பல படைப்பாளி களுடனான நல்லுறவுக்குத் துணை நிற்கிறதா?

""என் சக பயணிகள் என்கிற தலைப்பில் நான் "புத்தகம் பேசுது' இதழில் மாதம்தோறும் எழுதிவரும் தொடர், என்னை பாதித்த- என் மன வளர்ச்சியில் பங்காற்றிய படைப்பாளிகள் பற்றி இளம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் நோக்கம் கொண்டது. அதற் கேற்ற வகையில் அது எழுதப்படுகிறது. இலக்கிய விமர்சனமும் ஆய்வு செய்வதும் என் வேலை அல்ல. இத்தொடரில் அது நோக்க மும் அல்ல. எனக்கு கூர்மையான விமர்சனப் பார்வை இல்லை என்கிற குற்றம் சாட்டும் தொனியும் இக்கேள்வியில் அடங்கி இருக்கிறது. விமர்சிக்க வேண்டியவர்களைக்கூட நட்பு காரணமாக நான் விமர்சிக்காமல் விடுகிறேன் என்கிற குற்றச்சாட்டும் இக்கேள்வி யில் அடங்கியிருக்கிறது. ஓர் இடதுசாரி பழகக்கூடாத மனிதர்களோடு எல்லாம் நான் நட்பு பாராட்டுகிறேன் என்கிற விமர்சனமும் இக் கேள்வியில் இருக்கிறது. ரொம்ப சரி. நான் அப்படித்தான் இருக்கி றேன் போலும். என்னால் இப்படித்தான் இருக்க முடியும். இதுதான் எனக்குச் சரி என்று தோன்றுகிறது. காகம் குயிலாக முடியாது. குயில் புறாவாக முடியாதில்லையா? புறாக்கூட்டில் போய் உட்கார்வ தால் மட்டும் குருவி புறாவாகி விடாதல்லவா? நான் என்னவாக இருக்கிறேனோ அப்படிப்பட்டவனாகவே என்னை ஏற்றுக்கொள்கிற மனிதர்களும் இருக்கிறார்கள். அது போதும் நமக்கு. இன்னொருவர் எதிர்பார்ப்பை என்னால் ஈடுசெய்ய முடியாது.''

ஒரு படைப்பாளி என்பதையும் தாண்டி தொழிற்சங்க இயக்க அனுபவம் உள்ளவர் நீங்கள். இன்றைய தொழிற்சங்கங் களின் நிலையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

""இன்றைய தொழில் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தொழிற்சங்க நிலையும் இருக்கும். இன்று நிரந்தரத் தொழிலாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாகக் குறைந்து விட்டது. எல்லாம் தற்காலிலிக ஊழியர், காண்ட்ராக்ட் ஊழியர், அவுட்சோர்சிங் முறை என்று வந்துவிட்டது. ஆகவே பழைய பாணி யிலேயே தொழிற்சங்க இயக்கத்தை நடத்திச் செல்ல முடியாது என்கிற புதிய நிலை உருவாகியுள்ளது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்குள் இந்திய தொழிற்சங்க மற்றும் தொழில் தகராறு சட்டமெல்லாம் செல்லாது என்று நாம் தேர்ந்தெடுத்த அரசுகளே அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளன. அதை மீறி அக்கம்பெனிகளுக்குள் சி.ஐ.டி.யு சங்கம் துவக்கப்பட்டதும், போராட்டங்கள் நடைபெற்றதும், தோழர் ஏ. சவுந்திரராசனை கைவிலங்கு பூட்டிக் கைது செய்து அழைத்துச் சென்றதும் சமீபத்திய வரலாறு. பன்னாட்டுக் கம்பெனி களுக்கு எதிராக தமிழ்நாடு சிஐடியு நடத்திவரும் போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் உடையவை. சமூக ஆய்வாளர்கள்கூட அதை இன்னும் சரியாக கவனிக்கவில்லை என்பது வருத்தம் தருகிறது. திருப்பூரில் காண்ட்ராக்ட் தொழிலாளிகள் ஒரு மில்லை முற்றுகையிட்டு உடைத்து நொறுக்கியது அதைவிடச் சமீபத்திய செய்தி. போலீஸ் அனுமதிபெற்ற உண்ணாவிரதம், தர்ணா போன்ற வடிவங்களும் தொடர்கின்றன. அவை போதாது என்கிற யதார்த்த நிலையும் வளர்ந்து வருகிறது. ஆள் நடமாட்டமிலாத சந்து பொந்து களில்தான் ஆர்ப்பாட்டங்கள் நடத்த போலீஸ் அனுமதி தருகிறது. இது காலப்போக்கில் காவல்துறையின் ஆணையை மதிக்காமல் தொழிலாளி வர்க்கம் தெருவில் இறங்கும் சூழ்நிலையை உருவாக்கும் என நம்புகிறேன். 

மிக அதிகமான தொழிலாளர் இயக்கங்கள் தேவைப்படுகிற இக் காலத்தில், தொழிலாளிகள் அந்த அளவுக்கு சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாத மனநிலைக்குத் தயாரிக்கப்பட்டு வருவது ஆபத்து. பண் பாட்டுத் தளத்தில் தொழிலாளி தனக்கே எதிராகத் தயாரிக்கப்படுகி றான். அதை தொழிலாளர் இயக்கம் போதிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை என்கிற வருத்தம் எனக்கிருக்கிறது. மத்தியதர வர்க்க தொழிற்சங்க இயக்கங்களில் ஒரு முன்னுதாரணமான இயக்க மாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் திகழ்கிறது. ஒரு சமூகப் பார்வையோடு தன் ஊழியர்களை அது வளர்க்கப் போராடுகிறது''. 

பெண் விடுதலை நோக்கிலான நூல்களும் எழுதியிருக்கிறீர்கள். பெண் விடுதலை என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை- சமைப்பது உட்பட- ஆண்கள் செய்யும் நிலை வந்தால் பெண் விடுதலை சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?

"""ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்' என்கிற என் நூலை வைத்தும் ஆண்கள் வீட்டு வேலைகளை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து நான் பேசி வருவதை வைத்தும் இக்கேள்வி எழுப்பப்படுவதாக புரிந்துகொள்கிறேன். ஆண்கள் சமைத்துவிட்டால் போதும்; எல்லாம் சரியாகப்போகும் என்பது என் பார்வையல்ல. நான் அப்படி பேசவும் இல்லை; எழுத வும் இல்லை. "பெண்மை என்றொரு கற்பிதம்', "நமக்கான குடும்பம்' போன்ற என் பிற நூல்களையும் சேர்த்து வாசிக்க வேண்டுகிறேன். நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுபடாமல் மனிதகுல விடுதலை சாத்தியமில்லை என்பது தோழர் லெனின் கூற்று. மனித குலத்தில் சரிபாதியான பெண்கள் காலம் காலமாக அடுப்படியில் புகைந்து கொண்டிருப்பது பற்றி எந்த அக்கறையுமற்ற நம் சமூகம் எப்படி விடுதலை பெறும்? "பொங்கவும் தெரியும் திங்கவும் தெரியும் பெண்களுக்கு. ஆனால் ஆண்களுக்கு திங்க மட்டும் தான் தெரியும்' என்பது ஆணாகிய எனக்குக் கேவலமாகப்படுகிறது. ஆகவே பொங்காமல் திங்க மட்டும் செய்யும் ஆண்கள் பற்றிஎனக்குக் கேவலமான பார்வை மனதில் ஆழமாக உருவாகி விட்டது. ஆகவே அதுபற்றிக் கூடுதலாகப் பேசிவருகிறேன் என நினைக் கிறேன்.

வீட்டில் சக மனுஷியான என் அம்மா, என் சகோதரி, என் வாழ்க்கைத் துணைவி இவர்களின் வேலைகளைக்கூடப் பகிர்ந்து கொள்ளாமல் என்ன பெரிய சமூக மாற்றத்தைப் பற்றிப் பேச முடியும் என்னால்? ஆண் - பெண் சமத்துவத்தை நான் (ஒய் டழ்ண்ய்ஸ்ரீண்ல்ப்ங்) கொள்கைரீதியான பிரச்சினையாக விளங்கிக் கொள்ள மறுக்கிறேன். அது மிகப் பிரதானமாக நடைமுறைரீதியான ஒன்று என்று மாற்ற விரும்புகிறேன். நம் அன்றாட வாழ்வின் பகுதியாக பெண்ணியம் மாறியாக வேண்டும். கொள்கை மாற்றத்துக்கான போராட்டத்தோடு அதைப் பின்னர் இணைத்துக் கொள்ளலாம்.''

ஒருகாலத்தில் சினிமாப் பாடல்களின் மெட்டுகளில் அரசியல் பாடல்களைப் பாடினாலே, அதற்கு இடதுசாரிகளிடம் எதிர்ப்பு இருந்தது. அரசியல் கருத்துகள் நிற்காது; சினிமா மெட்டுகளே நிற்கும் என்பதுதான் அதற்குக் காரணம். ஆனால் இன்று கலை இரவு நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்களுக்கு ஆடும் போக்கு உள்ளது. அதை இயக்கம் சார்ந்தவர்களே ரசிக்கவும் செய்கிறார்கள். இந்த நிலை எப்படி வந்தது? இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்? 

""இப்போதும் சினிமா மெட்டு இல்லாத பாடல்களையே கலை இரவு மேடைகளில் பாடி வருகிறோம். எங்கேனும் ஓரிரு நிகழ்ச்சி களில் நீங்கள் சொன்ன நிலை இருந்திருக்கலாம். அது எந்த ஊர் என்று சொன்னால் திருத்திக்கொள்ளலாம். பெரும்போக்காக இருப்பதும், எமது கொள்கை நிலைப்பாடாக இருப்பதும், கருத்தும் கலையழகும் சேர்ந்த பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே. ஏதேனும் ஒருசில சினிமாப் பாடல் மெட்டுகள் அதற்கு உதவினால் பயன்படுத்திக் கொள்வோம். சினிமாவுக்கும் சினிமாப் பாடல்களுக்கும் நாம் எதிரிகள் அல்ல. சினிமா மெட்டில் பாடினால் கேட்பவர் மனதில் அந்த சினிமா காட்சிதான் ஓடும்- நம் பாடலிலின் கருத்து சென்று சேராது என்பதால்தான் சினிமாப் பாடல் மெட்டுக்களைத் தவிர்க்கிறோம். பாவலர் வரதராசன் உள்ளிட்ட அன்றைய இயக்கப் பாடகர்கள் முழுக்கவும் சினிமாப் பாடல் மெட்டிலேயே பாடி வெற்றிகண்ட வரலாறும் இருக்கிறது. எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளலாம். நம் நோக்கம் சிதையாவண்ணம் பயன்படுத்தலாம். இறுக்கமான சட்டகமாக எதையும் மாற்ற வேண்டியதில்லை என்பது என் கருத்து.''

அறிவொளி இயக்க அனுபவங்கள் உங்களுக்கு எவற்றைக் கற்றுத் தந்தன? இன்றைய கல்விமுறையைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

""அறிவொளி இயக்கம் என்னை இன்னும் நல்ல மனிதனாக மாற்றியது என்று நம்புகிறேன். "இருளும் ஒளியும்' என்றொரு புத்தகத்தில் விரிவாக என் அனுபவங்களை எழுதியிருக் கிறேன். மக்களிடம் வேலை செய்வது எப்படி என்பதற்கான சில முன் மாதிரிகளை அறிவொளி இயக்கம் எங்களுக்குத் தந்து சென்றுள்ளது. மக்களிடம் கற்றுக் கொள்வது என்றால் என்ன என்பதை அனுபவப்பூர்வமாக நான் புரிந்து கொண்ட இடம் கிராமப்புற அறிவொளி மையங்கள் என்பேன். பேராசிரியர் ச. மாடசாமி, டாக்டர் ராமானுஜம், டாக்டர் ஆத்ரேயா, டாக்டர் சுந்தர்ராமன், த.வி. வெங்கடேஸ்வரன் போன்ற மகத்தான மனிதர் களை என் வாழ்வில் கொண்டுவந்து சேர்த்த இயக்கம் அறிவொளி இயக்கம். இலக்கியம் பற்றிய எனது பார்வையைத் தலைகீழாக மாற்றியதும், என் எழுத்து மொழியைப் பெரிதும் மாற்றியமைத்ததும் அறிவொளி இயக்கம்தான். இதுபோக ஆயிரக்கணக்கான என் போன்ற சக தொண்டர்களை எனக்குப் பெற்றுத் தந்ததும் அந்த இயக்கம்தான். 

இன்றைய கல்வி முறை பற்றி தனியாக பத்து இருபது பக்கமாவது பேச வேண்டிய விஷயம் இருக்கிறது. இன்றுள்ள கல்வி முறை தலை கீழாக மாற்றப்பட வேண்டும். இது ஆள்பவரின் தேவையை மையமா கக் கொண்டு கட்டப்பட்ட கல்விமுறை. நாம் கோருவது குழந்தை களை மையமாகக் கொண்ட கல்வி முறை. ஏகலைவனின் கட்டை விரல் துண்டாடப்பட்டதுபோல நம் குழந்தைகளின் சுய அறிவை- எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் திறனை வெட்டி எறியும் (ஈர்ய்ற்ழ்ர்ப்ப்ங்க் கங்ஹழ்ய்ண்ய்ஞ்) கல்வி முறையே இன்று நம் தலையில் கட்டப் பட்டுள்ளது. இதை ரிப்பேர் செய்து பயன்படுத்த முடியாது. வெட்டி எறிந்துவிட்டுப் புதிய விதைதான் நட வேண்டும்.

சமச்சீர் கல்விக்கான எமது போராட்டங்களும், "ஆளும் வர்க்கம் தரும் கல்வியையே சமசீராகத் தா' என்பற்கான போராட்டமாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அல்ல... அல்ல. நாம் கோருவது முற்றி லும் வேறான ஒரு கல்வி முறை- உருவத்தாலும், உள்ளடக்கத்தாலும்.''

ஒரு படைப்பாளி கட்சி சார்ந்து இயங் கும்போது அவனுக்கு ஏற்படுகிற நன்மை- தீமைகள் எவை? கட்சி சில நேரங்களில் மக்கள் நலனுக்கு முரணாகச் செயல்படும் போது, ஒரு மக்கள் நலன் சார்ந்த படைப்பாளி அதை நியாயப்படுத்த முடியாமல் தவிக்க நேர்கிறது. படைப்பு முயற்சிகள் தடைப்படுகின்றன. கட்சி சார்ந்து இயங்குவதேஅவனை முடக்கிப் போட்டுவிடாதா?

""நான் கட்சி ஊழியனாகக் கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறேன். தொடர்ந்து எழுதிக்கொண்டும் வருகிறேன். எனக்கு அப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. எழுத முடிவதும் எழுத முடியாமல் போவதும் என் பிரச்சினை. என் கட்சி எப்போதும் மக்கள் நலனுக்கு விரோதமாகப் போனதில்லை. ஆகவே இந்தக் கேள்விக்கு இடமில்லை. அப்படி மக்களுக்கு விரோதமாகப் போகும் கட்சியில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு அது பிரச்சினைதான்.''

"பூ' திரைப்படத்துக்காக உங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோடிக்கணக்கான முதலீட்டுடன் இன்று செயல்படும் தமிழ்த்திரைப்பட உலகில் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் எப்படி இடம் பெற முடியும்? அப்படியே முயற்சி செய்தாலும் வணிகவிதிகளுக்கு உட்பட்டுத்தானே இயங்க முடியும்?

""கிடைக்கிற வெளியைப் பயன்படுத்த முடியுமா என்று பார்க்கி றோம். அதை மட்டும் நம்பிக்கொண்டு இருந்தால் தப்பு. அதன்மீது எந்த பிரேமையோ மயக்கமோ நமக்கில்லை. தெருக்களில் சினிமாக் களைத் திரையிடும் மக்கள் திரைப்பட இயக்கத்தில்தான் தமுஎகச இப்போது அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 500 மையங்களின் தெரு சினிமா இயக்கத்தைக் கட்டும் கனவோடு இயங்கி வருகிறோம். மாவட்டம் தோறும் சொந்த டிவிடி புரொஜெக் டர்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் தயாரிப்பு எனப் பெரும் கனவுகளோடு நகர்ந்து கொண்டிருக்கிறோம். இடையில் "பூ', "அரவான்' போல கிடைக்கும் தொடர்புகளை என்ன செய்யலாம் என யோசிக்கிறோம். எதையும் புறக்கணிக்க இப்போது நாங்கள் தயாராக இல்லை. ஆரம்பக் கட்டத்தில் நிற்கிறோம். இன்னும் கொஞ்சம் நகர்ந்த பிறகு பரிசீலனை செய்து பார்ப்போம். தவறுகள் ஏற்பட்டால் சரி செய்து கொண்டு முன்னேறுவோம். திரைப்படத் துறைக்குள்ளும் சமூக அக்கறையும் எங்களைப்போல கனவு களும் உள்ள எண்ணற்ற சக பயணிகள் இருக்கிறார்கள். சினிமாக் காரர்கள் என்று கேலிலிப் புன்னகை செய்து அந்தப் பொக்கிஷங்களைப் புறக்கணிக்க நாங்கள் தயாராக இல்லை.''

கருத்துருவாக்கத்தில் இதழ்களுக்கும், ஊடகங்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. ஆனால் இடதுசாரி இயக்கத்தினர் தமிழகத்தில் பெரிய அளவுக்கு இந்தத் துறைகளில் பங்களிக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?

""பணம் இல்லாததுதான்.''

உங்களுடைய குடும்பத்தினரைப் பற்றி...

""என்னுடைய துணைவியார் வெள்ளத்தாய் முதுநிலைப் பட்டதாரி. கணித ஆசிரியையாகப் பத்தமடையில் பணியாற்றுகிறார். என் 
அராஜகமான வாழ்முறையைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டு தன் அளவற்ற அன்பால் எங்கள் குடும்பத்தை நடத்திச் செல்கிறார். ஒரே மகன் சித்தார்த்- மருமகள் மகாலட்சுமி என்கிற பிரதீபா கோவையில் வசிக்கிறார்கள். அவர்களும் பொதுவாழ்வோடு குடும்ப வாழ்வை இணைக்கும் ஆர்வமுள்ள தம்பதிகள். 31 ஆண்டு கால எங்கள் குடும்ப வாழ்க்கை என் பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு உரமாகவும், ஊக்கம் தருவதாகவும் அமைந்ததால்தான் நான் இப்படியாக இருக்க முடிகிறது.''

சந்திப்பு : எழில்முத்து
படங்கள்: அண்ணல்
நன்றி:  நக்கீரன்

No comments:

Post a Comment