Tuesday 28 April 2015

கல்வி உரிமைச் சட்டத்தை அமலாக்குமா தமிழக அரசு?


சென்னை, நவ. 28-

கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2015-16ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநரை, இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த சமூகத்தினரது குழந்தைகளுக்கு 25 சதவீதம் இலவசமான மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்திட வேண்டும்.

ஆனால் தனியார் பள்ளிகள் கடந்த சில வருடங்களாக இதில் வெளிப்படைத் தன்மையோடு மாணவர்களைச் சேர்க்காமல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. பொய்யான பெயர் பட்டியலை தயார் செய்து மோசடியில் ஈடுபடவும், இதன்படி அரசிடம் நிதி பெறவும் முயற்சிக்கின்றன. ஆகவே இக்கல்வியாண்டில் வெளிப்படைத் தன்மையோடு பள்ளிக் கல்வித்துறை உறுதியோடு மாணவர் சேர்க்கை நடைபெறுவதையும் மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட ஒரே காலத்திற்குள் மாணவர் சேர்க்கை நடைபெறுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி, செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளனர்.

மேலும், இதற்கான பொதுவிண்ணப்ப படிவத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிடுவதோடு, அனைத்து பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதனடிப்படையிலான மாணவர் சேர்க்கையில் எவ்வளவு விண்ணப்பங்கள் வந்துள்ளன என்பதையும், ஒற்றைச் சாளரமுறையிலான மாணவர் சேர்க்கையின் முழுவிவரங்களை பெயர் பட்டியலோடும் பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்திலும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணங்களுக்கு மேல் கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். கட்டணம் செலுத்துவதை முழுவதும் வங்கி நடவடிக்கையோடு இணைத்திட வேண்டும். கட்டாய நன்கொடை என்ற பெயரில் நிதி வசூலிப்பதையும் தடுத்திட வேண்டும். சட்டத்திற்கும், அரசின் உத்தரவுகளுக்கும் எதிராக செயல்படும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணங்களுக்கு மேல் கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கையை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.-இந்திய மாணவர் சங்கம்

No comments:

Post a Comment