Tuesday 28 April 2015

சட்டத்துக்கு சவால் விடும் தனியார் பள்ளிகள்

அடிப்படை உரிமையான “கல்வி உரிமைச் சட்டத்தை” அமல்படுத்த முடியாது என்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கியசரத்துக்களுக்கு எதிராகவும் கோரிக்கைகளை உருவாக்கி தமிழக ஆளுநர் ரோசையா தலைமையிலேயே, தனியார் பள்ளி முதலாளிகள் தீர்மானம் இயற்றியுள்ளனர்.தமிழகத்தில் உள்ள மெட்ரிக், நர்சரி, பிரைமரி மற்றும் சிபிஎஸ்இ ஆகிய தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளிவிழா மாநாடு கடந்த ஏப்ரல் 23 அன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழக ஆளுநர் ரோசையா தலைமை தாங்கினார்.



கல்வி உரிமைச் சட்டத்தின் பல்வேறு முக்கிய சரத்துக்களை நிறைவேற்ற முடியாது என்றும் அதற்கு எதிரான கோரிக்கைகளை தீர்மானங்களாக உருவாக்கியும் இந்த மாநாடு அறிவித்துள்ளது. இந்த செய்தி பிப்ரவரி 24 தேதியிட்ட அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளது. ஒரு மாநில ஆளுநர் தலைமையில் நடைபெற்ற தனியார் பள்ளி உரிமையாளர்களின் மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்களை இயற்றியுள்ளது ஜனநாயகத்தைக் கேலிக்கூத் தாக்குவதாக உள்ளது.

தீர்மானங்கள்

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி சேர்க்கப்பட்ட குழந்தைகளுக் கான கட்டணங்களை தமிழக அரசு இதுவரை கொடுக்காமல் இருப்பதால், இந்த ஆண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கைகள் நடத்த முடியாது.

அங்கீகாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பல்லாயிரம் பள்ளிகளுக்கும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி உடனே அங்கீகாரம் வழங்க வேண்டும்.

மாணவர்களைக் கண்டிக்கும் உரிமையை ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

விதிமீறி கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

அங்கீகாரம் பெற்று பத்து ஆண்டுகள் ஆன அனைத்துப் பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

நில விதிமுறையில் விலக்கு அளிக்க வேண்டும்.

அரசு வசூலிக்கும் கல்வி வரியை தனியார் பள்ளிகளுக்கும் செலவிட வேண்டும்.

எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி என்ற முறையை உடனே ரத்து செய்ய வேண்டும்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசிடம் தடையில்லா சான்று பெறும் முறையை ரத்து செய்ய வேண்டும்.

பள்ளிப் பேருந்துகள் மாநிலம் முழுவதும் செல்ல பெர்மிட் கொடுக்க வேண்டும்.

என்றெல்லாம் கோரியுள்ளனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்கனவே காட்டி வரும் வெறுப்பைப் பற்றி நாம் அறிவோம். கல்வி உரிமைச்சட்டத்தின் எந்த விதமான சரத்துக்களையும் அமல்படுத்துவ தில்லை என்று தொடர்ந்து மறுத்து வரும் தனியார் பள்ளிகள் தற்போது ஆளுநர் தலைமையிலேயே, அரசியல் சாசனத்திற்கு எதிரான தீர்மானங்களை இயற்றி எதிர்க்கத் துணிந்து உள்ளனர் என்பதுதான் இங்கு முக்கியமான விசயமாகும். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில் உள்ள ஓரிரு தனியார் பள்ளிகள் மட்டுமே 25 சதவீத இட ஒதுக்கீடு முறையை ஓரளவு நிறைவேற்றின. மற்ற அனைத்துப் பள்ளிகளும் இந்த சரத்தை வெறும் காகித அளவில் மட்டுமே நிறைவேற்றியுள்ளன எனலாம்.

கடந்த 2011ஆம் ஆண்டு, தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுப்படி, மதுரையில் உள்ள மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் மூலம் சிவகங்கை, வேலூர், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், குறிப்பிட்ட பள்ளிகளில் இது சம்பந்தமாக ஆய்வுசெய்த போது 25 சதவீத இட ஒதுக்கீடு சரத்து எந்தத் தனியார் பள்ளியிலும்முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்ற உண்மை தெரிய வந்தது.

இதற்குநம்மை ஆளும் மத்திய மற்றும் மாநில அரசாங் கங்களின் கண்டுகொள்ளா போக்குதான் அடிப்படைக் காரணமாகும். இதுவரை பெரும்பாலான தனியார் பள்ளிகள் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படியான சேர்க்கை முறையை வெளிப்படைத் தன்மையுடன் கடைப்பிடிக்கவே இல்லை. சில பள்ளிகள் மட்டும் இவ்வாண்டு முதல் 25சதவீத இட ஒதுக்கீட்டின் படி கடைப்பிடிப்பதாகக் கூறி சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் கட்டணத்தை நீங்கள் கட்டிவிடுங்கள்; அரசு கொடுத்ததும் நாங்கள் உங்களை அழைத்து திருப்பி தந்து விடுகின்றோம்;

இதை வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறி நடைமுறைப் படுத்துகின்றனர். நமது அரசியல் அமைப்பு சாசனத்தின் பிரிவு 21 ஏ யின்படி இந்திய நாடாளுமன்றத்தால், கடந்த 2010 - ஏப்ரல் 1 முதல், கல்வி உரிமை என்பது அடிப்படை உரிமை ஆக்கப்பட்டு “குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் - 2009” என்ற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் என்றால் இந்த உரிமைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கவேண்டியது அரசின் கடமை ஆகும். இந்த உரிமைகளைப் பெறுவதில் எந்த அரசாங்கமோ, நீதிமன்றமோ மறுக்க முடியாது என்பதாகும். இந்தச் சட்டம் இயற்றப்பட்ட போது, இதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நிபுணர்கள், இடதுசாரிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் ஆலோசனை தெரிவித்தார்கள். ஆனால் அப்போதைய மத்திய அரசு இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

சர்வதேச அளவில் கல்வி உரிமைக்கான சட்டம் இயற்றிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 128-வது நாடாகும். கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்காக சுதந்திரத்திற்கு முன்னரும், சுதந்திரத்திற்கு பின்னருமாக சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் போராட்ட வரலாறும், 1992ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இந்தச் சட்டம் வருவதற்கான மைல் கற்கள் ஆகும்.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியக் கடமைகளும் உள்ளன. அதன்படி...

தனியார் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

பள்ளிச் சேர்க்கையின் போது எந்தவித நுழைவுத்தேர்வும் நடத்துதல் கூடாது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் சேர்க்கையின் போது, முதல் வகுப்பில் அருகாமையில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும். இந்தக் குழந்தைகளுக்குரிய கட்டணத்தை அரசு செலுத்திவிடும்.

கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள தர நிர்ணயங்களின் (கட்டிடம், மைதானம், சுற்றுச்சுவர், ஆசிரியர் நியமனம் ஆகியவைகளில்) படி பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்தி அரசு அங்கீகாரம் வழங்கப்படும். அதே போல் பழைய பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் புதுப்பிக்கப்படும்.

குழந்தைகளை மனதளவிலோ அல்லது உடலளவிலோ எந்தவிதத் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கக் கூடாது.

எட்டாம் வகுப்பு வரையுள்ள எந்தக் குழந்தையையும் தேர்வு என்ற காரணத்தைக்காட்டி, பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது.

தரமான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை நாடு முழுமைக்கும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட சரத்துக்கள் அனைத்தும், கல்வி உரிமைச் சட்டத்தில், தனியார் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய ஒரு சில சரத்துக்களே ஆகும்.இந்த நேரத்தில் சமீபத்திய ஒரு தகவலை நினைவு கூர்வது அவசியமாகும். குஜராத் மாநிலத்தில் 175 தனியார் பள்ளிகள் தொடர்ந்து கல்வி உரிமைச் சட்டத்தின் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மறுத்தன.

இது சம்பந்தமாக குஜராத்தில் உயர்நீதிமன்றத்தில், தலித்ஹாக் ரக்சாக்மஞ்ச் என்ற தன்னார்வ நிறுவனம் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தது. இதன் முடிவில் குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 19ஆம் தேதி அன்று ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி அடிப்படை உரிமையான கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த மறுக்கும்பள்ளிகள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை? என்றும் இந்தச் சட்டத்தின் பிரிவு 12 ன் படியான கடமைகளை மறுக்கும் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தலைமை நீதிபதி வீ.எம்.சஹாய் மற்றும் நீதிபதி ஆர்.பி.தோலாரியா ஆகியோர் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக தனியார் பள்ளி உரிமையாளர்களின் இந்த சட்டவிரோதப் போக்கைக் கண்டித்து நீதிமன்றம் செல்ல வேண்டும். தமிழகத்தின் உயர்நீதி மன்றம் தன்னிச்சையான வழக்காக எடுத்து இந்தத் தீர்மானங்கள் பற்றி விசாரிக்க வேண்டும். மேலும் தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதுடன் கீழ்க்கண்ட நடைமுறைகளை அமல்படுத்த முன்வர வேண்டும்.குழந்தைகளுக்கான கட்டணங்களை, தனியார் பள்ளிகள் அனைத்தும் வங்கி மூலம் மட்டுமே பெறுதல் வேண்டும்.கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படியான பள்ளிச் சேர்க்கையை ஒவ்வொரு தாலுகா/ஒன்றிய அளவிலும் குழுக்கள் ஏற்படுத்தி=- வெளிப்படைத் தன்மையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படியான பள்ளிச் சேர்க்கைக்காக அரசு செலுத்த வேண்டிய தொகையை ஒவ்வொரு ஆண்டும் சரியான நேரத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக தனியார் பள்ளிகளுக்கு செலுத்தி பள்ளிச் சேர்க்கையை ஒவ்வொரு முறையும் சமூகத் தணிக்கை செய்தல் வேண்டும்.தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் அனைத்து சரத்துக்களும் முழுமையாக நடைமுறைப்படுத்த வைக்கப்படவேண்டும். தனியார் பள்ளிகள் அனைத்திலும் பெற் றோர் குழுக்கள் அமைக்கப்பட்டு அரசு விதிமுறைகள் மீறாமல் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதே கல்வி உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

ரா.சொக்கு
கட்டுரையாளர், மனித உரிமைக் கல்வி நிறுவன ஆய்வாளர், மதுரை
நன்றி:தீக்கதிர் நாளிதழ்


No comments:

Post a Comment