Saturday 11 April 2015

ஆண்கள் சமைத்தால் வேகாதா என்ன?”

”வாசிக்க வாசிக்க, எழுத்து மறைந்து, அதில் சொல்லப்பட்டு இருக்கும் வாழ்க்கை மட்டுமே மனதில் நிற்க வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. உணர்வுமயமான எழுத்துதான் என்னை வசீகரிக்கிறது. நான் நெகிழ்ச்சியானவனாக இருப்பதால் என் எழுத்தும் நெகிழ்ச்சியானதாகவே இருக்கிறது!” என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.

மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன். சிறந்த சிறுகதை ஆசிரியர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக, சமூகம், கலை, பண்பாடு குறித்துத் தீவிரமாகச் செயல்படுபவர்…

”இலக்கியத்தில் இயங்குபவர்களுக்கு அரசியல் பார்வை இருக்கா? பெரும்பாலான பிரச்னைகளில் எழுத்தாளர்கள் மௌனம் சாதிக்கிறார்களே, ஏன்?”
”அரசியல் இல்லாமல் இந்தப் பூமியில் எதுவும் இல்லை. எனக்கு அரசியல் வாடையே ஆகாது என்று சொல்வதே ஒரு அரசியல்தான்! 1940களில் தஞ்சாவூர் பகுதியிலிருந்து மிகப் பெரிய எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதே காலகட்டத்தில் தஞ்சாவூர் பகுதிகளில் விவசாயக் கூலிகள் செய்கிற சிறு தவறுக்குக்கூட சாட்டை அடியும் சாணிப்பாலை வாயில் ஊற்றுகிற கொடுமைகளும் நடந்திருக்கின்றன. அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல், ஆண்பெண்ணுக்கு இடையில் உள்ள காதலை நுட்பமாக விவரிக்கிற எழுத்தையே அந்த மிகப் பெரிய எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நடக்கிற அநியாயங்களைப் பார்த்து அமைதியாக இருப்பதும் அரசியல்தான். பெண்ணுடல் பற்றியும் காதலைப் பற்றியும் எந்தக் காலத்தில், எந்தச் சந்தர்ப்பத்தில் எழுதுகிறோம் என்பதிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனும் ஒகேனக்கல் பிரச்னைக்கு அறிக்கைவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதைச் சக மனிதர்களின் ஜீவாதாரப் பிரச்னையாக, அவலமாகத் தனது எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய தார்மிகப் பொறுப்பு இருக்கிறது!”
”அறிவொளி இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர் நீங்கள். பாலியல் கல்வி, மாற்றுக் கல்வியின் அவசியங்கள் குறித்த விவாதங்கள், ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்குமா..?”
”நம் சமூகம் ஆணாதிக்கச் சமூகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதை மாற்றி சமத்துவமான சமூகத்தை உருவாக்க, ஒரு கோடி விஷயங்கள் செய்ய வேண்டியிருக் கிறது. அதில் ஒரு சிறு முயற்சிதான் பாலியல் கல்வி!
ஆண் குழந்தைகள் 12 வயது வரை அம்மாவின் நெருக்கமான அரவணைப்பில் வளர்கிறார்கள். அதன் பிறகு, திருமணமாகி மனைவி வரும்போதுதான் அவனுக்குப் பெண்ணின் அரவணைப்பு கிடைக்கிறது. 12க்கும் 25க்கும் இடைப்பட்ட இந்த வருடங்களில்தான் ஒருவன் மனிதனாக மாறுகிறான். இந்தக் காலத்தில் ஆண், பெண் உறவு குறித்துச் சரியான புரிதல்கள் நம்மிடையே ஏற்படுவதில்லை. ஆண், பெண் உறவு குறித்த உரையாடல்களை மறுக்கிற சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. இயல்பாக ஓர் ஆணும் பெண்ணும் பேசுவது சாத்தியமற்றதாக இருக்கிறது. உடல்ரீதியான மாற்றங்கள் ஏற்படும் இந்தக் காலகட்டத்தில் ஆண்பெண் உடல் குறித்துத் தெளிவு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதைச் சொல்லாமல் விடும்போதுதான் பாலியல் குறித்த வக்கிரமான சிந்தனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. வக்கிரமான சிந்தனை கள் பதிவான பிறகுதான், நாம் பாலியல் குறித்துப் பாடப் புத்தகங்கள் மூலம் சொல்லித் தருகிறோம். இது தவறான வழிமுறை. சிறு வயதிலேயே பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதுதான் சமூகத்தை ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி நகர்த்தும்.
குழந்தைகளின் மூளைகளை காலியான பாட்டில்களாக நினைத்துக்கொண்டு இருக்கிறது நமது கல்வி முறை. அந்த பாட்டில்களை நிரப்பி அனுப்பும் வேலையையே பள்ளி, கல்லூரிகள் செய்கின்றன. ஆனால், உண்மையில் ஒரு நாளின் 24 மணி நேரமும் குழந்தைகள் ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆள்பவர்களுக்குத் தேவையான அலுவலர்களையும் அதிகாரிகளையும் உருவாக்குவதையே நோக்கமாகக்கொண்டு இருக்கிறது நமது கல்வி முறை. குழந்தைகளின் தனித் திறன்கள் அடையாளம் காணப்பட வேண்டும். மாற்றுக் கல்வி முறை அதற்கு வழி செய்யும்!”

”ஒருவழியாக உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது… ‘க்ரீமிலேயர்’ நிபந்தனையோடு! இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
”வருட வருமானம் இரண்டரை லட்சம் உள்ளவர்களைத்தான் ‘க்ரீமிலேயர்’ என்கிறார்கள். சாதாரணமாக ‘ஐ.ஐ.டி’, ‘ஐ.ஐ.எம்’ நுழைவுத் தேர்வுப் பயிற்சிகளுக்கே 80 ஆயிரம் வரைக்கும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால்கூட இவ்வளவு தொகை செலவழிக்க முடியாது. ‘க்ரீமிலேயர்’ என்பது ஏமாற்று வேலை!
உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது கொள்கை ரீதியாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அதற்குள் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. 27 சதவிகிதத்தையும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமே வைத்து நிரப்ப முடியாது. எனவே, மீதமிருப்பவற்றையும் பிற்படுத்தப்படுத்தப்பட்டவர்களுக்கே வழங்க வேண்டும், பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை.”

”ஆண்களும் சமையல் கட்டுக்குப் போக வேண்டும் என்று நீண்ட காலமாகச் சொல்லிவருகிறீர்களே… நம் சமூகத்தில் இது சாத்தியமா?”
”சமைப்பது பெண்களுக்கு மட்டுமேயானது என்பதைக் கேள்விக்குள்ளாக்கத்தான் ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ என்ற புத்தகத்தை எழுதினேன். உலகிலேயே சமைப்பதுதான் அதிமுக்கியமான வேலை. கவனம், உடல் உழைப்பு, தொழில் நுட்பம், அக்கறை எல்லாம் சேர்ந்தது சமையல் வேலை. இப்படி பெரும்சுமையான வேலையை ஆயிரம் ஆண்டுகாலமாக பெண்கள் தலையிலேயே சுமக்க வைத்துக்கொண்டு இருக்கிறோம்.
‘நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனித குல விடுதலை சாத்தியமில்லை’ என்றார் லெனின். வீட்டு வேலை செய்து பார்த்தால்தான் அவர் சொன்னதன் அர்த்தம் தெரியும். வியாபார ரீதியான எல்லா இடங்களிலும் ஆண்கள்தான் சமைக்கிறார்கள். வீட்டில் சமைத்தால் மட்டும் வேகாதா என்ன?”

”எழுத்தாளர் என்பதையும் தாண்டி பண்பாட்டுத் தளத்திலும் செயல்பட்டு வருகிறீர்கள். பண்பாட்டுத் தளத்தில் செயல்படுவதற்கான தேவை இங்கே இருக்கிறதா?”
”அரசியல், பொருளாதாரம், பண்பாடு என மூன்று தளங்களில் இயங்குகிறது சமூகம். அரசியல், பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பண்பாட்டுத் தளத்திலிருந்துதான் தொடங்குகின்றன. ஆனால், அந்த மாற்றங்கள் பற்றிய அக்கறையே இல்லாத சமூகமாக இருக்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மதச் சார்புள்ள விஷயங்கள் பயங்கரமாக வளர்ந்திருக்கின்றன. மக்களை மதவாதிகளிடம் சுலபமாகத் தள்ளுவதற்கான சூழல் இங்கே உருவாகியிருக்கிறது. இதைத் தடுக்க பண்பாட்டுத் தளத்தில் நாம் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. இல்லையென்றால், நாளை தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது!”

நன்றி: ஆனந்த விகடன்

No comments:

Post a Comment